மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

நிபுன் பாரத் இயக்கம்: ஜூலை 5-ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 04 JUL 2021 12:14PM by PIB Chennai

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, புரிதல் மற்றும் எண்ணறிவுடன் வாசித்தலில் தேர்ச்சி பெறுவதற்கான தேசிய முன்முயற்சியை (நிபுன் பாரத்) நாளை (ஜூலை 5, 2021) அறிமுகப்படுத்தவிருக்கிறது. மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்’,  காணொலி வாயிலாக இதனைத் தொடங்கி வைப்பார். நிபுன் பாரத் பற்றிய குறும்படம், பாடல் மற்றும் செயலாக்க வழிமுறைகளும் இந்த நிகழ்ச்சியின்போது வெளியிடப்படும். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பள்ளிக்கல்வித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்வார்கள்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்ட தேசிய கல்வி கொள்கை 2020-ஐ அமல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின்  முக்கிய முயற்சியான நிபுன் பாரத் அமைந்துள்ளது.

2026-27-ஆம் ஆண்டிற்குள் மூன்றாம் வகுப்பை நிறைவு செய்வதற்குள் ஒவ்வொரு குழந்தையும் வாசிப்பு, எழுத்து மற்றும் எண்ணறிவில் போதிய தகுதியைப் பெறுவதற்கு ஏதுவாக, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெறுவதற்கான சூழலியலை உருவாக்குவதை இந்த இயக்கம் தொலைநோக்குப் பார்வையாகக் கொண்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையால் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேசிய- மாநில- மாவட்ட- வட்டார- பள்ளி ஆகிய ஐந்து நிலைகளில் மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தின் கீழ் அமல்படுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1732597

*****************



(Release ID: 1732611) Visitor Counter : 727