எரிசக்தி அமைச்சகம்

தொழிற்சாலைகளில் சுத்தமான எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க இந்தியா மற்றும் இங்கிலாந்து புதிய செயல்முறையை தொடங்கின

Posted On: 03 JUN 2021 12:47PM by PIB Chennai

சுத்தமான எரிசக்தி அரசுகளின் 12வது ஆலோசனை கூட்டத்தை சிலி நாடு கடந்த மே 31ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை நடத்துகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தின் கீழ், தொழிற்சாலைகளில் சுத்தமான எரிசக்தியின் பயன்பாட்டை அதிகரிக்க இந்தியாவும், இங்கிலாந்தும் புதிய செயல்முறையை தொடங்கின. தொழிற்சாலைகளில் கார்பன் எரிபொருள் பயன்பாட்டை குறைக்கும் நடவடிக்கைதான்  இது.
இதற்கு ஜெர்மனியும், கனடாவும் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், பல நாடுகள் விரைவில் ஆதரவு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை தொழில்நுட்பங்களைப் புகுத்துவதும், தொழிற்சாலை பயன்பாட்டுக்கு குறைந்த அளவுள்ள கார்பன் எரிபொருளின் தேவையை அதிகரிப்பதும்தான் இதன் நோக்கம்.  

இந்த கூட்டத்தில் இந்தியா சார்பில் பேசிய மத்திய மின்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு அலோக் குமார், 2030ம் ஆண்டுக்குள்,  கார்பன் உமிழ்வை  33 முதல் 35 சதவீதம் குறைக்க இந்தியா உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவித்தார். 

இந்த உறுதிப்பாடு, எரிசக்தி பயன்பாடு அதிகம் உள்ள இரும்பு மற்றும் எஃகு, சிமென்ட் மற்றும் பெட்ரோ ரசாயணத் துறைகளில் கார்பன் அளவு குறைந்த தொழில்நுட்பங்களைப் புகுத்துவதில் உள்ளது. மத்திய அரசின் கொள்கைகளால், எரிசக்திப் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க அளவு சேமிப்பு ஏற்பட்டுள்ளதையும் அவர் விவரித்தார். 

மேலும் விவரங்களுக்கு: 
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1723981



(Release ID: 1724022) Visitor Counter : 198