எஃகுத்துறை அமைச்சகம்

யாஸ் புயலினால் எஃகு உற்பத்தி மற்றும் பிராணவாயு விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லை

Posted On: 27 MAY 2021 11:54AM by PIB Chennai

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களும் துறைகளும் மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் வாயிலாக யாஸ் புயலினால் எஃகு உற்பத்தி மற்றும் பிராணவாயுவின் விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மத்திய எஃகு அமைச்சகமும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறையும், யாஸ் புயலினால் எஃகு மற்றும் பிராணவாயு உற்பத்தி பாதிப்படையக் கூடிய சாத்தியக்கூறுகள் குறித்து கடந்த மே 23-ஆம் தேதி முக்கிய எஃகு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தின. மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் பிரதிநிதிகள், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள ஆலைகள் மட்டுமே பாதிப்படையும் என்பதால் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மேலும் ஒடிசாவின் கலிங்காநகர், அங்குலில் உள்ள பிராணவாயு ஆலைகளைச் சார்ந்துள்ள மாநிலங்களுக்கு தற்காலிகமாக 2-4 நாட்கள் ஜம்ஷெட்பூரின் டாட்டா ஆலையிலிருந்து பிராணவாயுவை வழங்கவும் திட்டமிடப்பட்டது.

 இதையடுத்து அங்குல், கலிங்காநகர் மற்றும் ரூர்கேலாவின் எந்த ஆலையிலும் மின்சாரம் தடைபடவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. யாஸ் புயலினால் ஒடிசாவில் உள்ள டாட்டா எஃகு ஆலைகளில் திரவ மருத்துவ பிராணவாயுவின் உற்பத்தி பாதிக்கப்படவில்லை என்பதை அம்மாநிலத்தில் அமைந்துள்ள ஆலைகளின் பிரதிநிதிகள் உறுதி செய்தனர்.

கலிங்காநகர், ஜம்ஷெட்பூர் மற்றும் அங்குலிலிருந்து எப்போதும்போல மருத்துவ பிராணவாயு தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டது.

துர்காபூர், பெர்ன்பூர், ரூர்கேலாவில் இந்திய எஃகு ஆணைய நிறுவனத்தின் (செயில்) ஆலைகளும் அனைத்து முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் இருந்தன. அதேபோல, ஒடிசாவின் அங்குல், ஜர்சுகுடா பகுதிகளில் அமைந்துள்ள ஜேஎஸ்பிஎல், ஜேஎஸ்டபிள்யூ ஆகிய நிறுவனங்களின் ஆலைகளிலும் புயலினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1722073

*****************



(Release ID: 1722116) Visitor Counter : 255