பிரதமர் அலுவலகம்

மேற்கு வங்கத்தில் ஏராளமான ரயில்வே திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்


இந்த புதிய ரயில் பாதைகள் எளிதான வாழ்க்கையை ஏற்படுத்தும், தொழில்களுக்கு புதிய பாதைகள் உருவாக்கப்படும்: பிரதமர்

Posted On: 22 FEB 2021 5:54PM by PIB Chennai

மேற்கு வங்கத்தின் நோவாபரா முதல் தக்ஷினேஷ்வர் வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டத்தை, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்து, இந்த வழித்தடத்தில் முதலாவது சேவையையும் அவர் கொடியசைத்து, தொடங்கி வைத்தார்.

 கலைக்குண்டா மற்றும் ஜர்கிராம் ஆகிய இடங்களுக்கிடையே 3-வது தடத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

அசிம்கஞ் முதல் கர்கிராகாட் சாலை பிரிவு வரையிலான தடம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ள திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். டான் குனி மற்றும் பருயிபரா வழித்தடத்தின் நான்காவது இணைப்பு, ரசுல்பூர் மற்றும் மக்ரா ஆகிய இடங்களுக்கு இடையே மூன்றாவது இணைப்பு வழித்தடத் திட்டத்தையும்  பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஹூக்ளி பகுதியைச் சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை இந்தத் திட்டங்களின் மூலம் எளிதானதாக மாறும் என்று கூறினார். நாட்டில் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து, தன்னிறைவையும்  தன்னம்பிக்கையையும் வலுப்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்

கொல்கத்தா நகர மக்கள் மட்டுமல்லாமல் ஹூக்ளி, ஹவுரா வடக்கு 24 பர்கானா ஆகிய மாவட்டங்களைச சேர்ந்த மக்களும் இந்த மெட்ரோ சேவையால் பயனடைவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர்  குறிப்பிட்டார்.

நோவாபரா முதல் தக்ஷினேஷ்வர் வரையிலான மெட்ரோ ரயில்வே விரிவாக்கத் திட்டத்தின் மூலம் இரு தலங்களுக்கு இடையேயான பயண தூரம் 90 நிமிடங்களில் இருந்து 25 நிமிடங்களாக குறைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த சேவைகள் மாணவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பெரும் உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் தற்போது உருவாக்கப்படும் மெட்ரோ அல்லது ரயில்வே கட்டமைப்புகளில் இந்திய தயாரிப்புகளின் தாக்கம் காணப்படுவது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அபரிமிதமான எண்ணிக்கையில் தண்டவாளங்கள், நவீன இஞ்சின்கள் முதல் நவீன ரயில்கள் மற்றும் நவீன ரயில் பெட்டிகள், சரக்குகள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இதன்மூலம் திட்டப்பணிகள் விரைவடைந்துள்ளதுடன், கட்டமைப்பின் தரமும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் தன்னிறைவின் முக்கிய மையமாக மேற்கு வங்கம் திகழ்வதாகக் கூறிய பிரதமர், மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் சர்வதேச சந்தைக்கு அபரிமிதமான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்த புதிய ரயில் பாதைகளின் மூலம் எளிதான வாழ்க்கை ஏற்படுவதுடன், தொழில் துறைகளுக்கு புதிய பாதைகளும் உருவாக்கப்படும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

சுருக்கமான பின்னணி:

மெட்ரோ ரயில்வே விரிவாக்கம்:

நோவாபரா முதல் தக்ஷினேஷ்வர் வரையிலான மெட்ரோ ரயில்வே விரிவாக்கத் திட்டம் மற்றும் அதன் முதல் சேவை துவக்கி வைக்கப்பட்டிருப்பது வாயிலாக சாலை போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் நகர்ப்புற போக்குவரத்து மேம்படும்.

4.1 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த விரிவாக்க வழித்தடம் ரூ. 464 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான முழு நிதியும் மத்திய அரசால் வழங்கப்பட்டது.

இந்த வழித்தட விரிவாக்கத்தையடுத்து சாலைப்போக்குவரத்து சீரடையும். நகர்ப்புற மக்களின் பயணம் எளிதாகும். காளிகாட் மற்றும் தக்ஷினேஷ்வர் ஆகிய இடங்களில் உள்ள உலகப்புகழ் பெற்ற காளி கோயில்களுக்கு, லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் பயணம் மேற்கொள்வதை இந்த வழித்தடம் எளிதாக்கும்.

புதிதாகக் கட்டப்பட்டுள்ள பரநகர் மற்றும் தக்ஷினேஷ்வர் ஆகிய இரண்டு ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கான நவீன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் சுவர் சித்திரங்கள், புகைப்படங்கள், சிலைகள், சிற்பங்கள் ஆகியவை வைக்கப்பட்டு அழகுற அலங்கரிக்கப்பட்டுள்ளன.

ரயில்வே வழித்தடங்களின் துவக்கம்:

தென் கிழக்கு ரயில்வேயின் மூன்றாவது இணைப்புத் திட்டமான காரக்பூர்- ஆதித்யாபூர் ஆகிய இடங்களுக்கிடையே 132 கிலோ மீட்டர் தொலைவிலான வழித்தடத்தில், கலைக்குண்டா மற்றும் ஜர்கிராம் இடையேயான  இந்த வழித்தடம் 30 கிலோமீட்டர் தொலைவு கொண்டதாகும்.

 இத்திட்டத்திற்கான மதிப்பீட்டுத் தொகை ரூ. 1312 கோடியாகும். கலைக்குண்டா, ஜர் கிராம் ஆகிய இடங்களுக்கிடையே நான்கு ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு இடங்களிலும் 4 புதிய ரயில் நிலையக் கட்டிடங்கள், 6 புதிய பாலங்கள்,11 புதிய நடைமேடைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே இருந்த கட்டமைப்புகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. ஹவுரா- மும்பை டிரங்க் வழித்தடத்தில் இயங்கும் சரக்குப் போக்குவரத்து ரயில்களின் இயக்கத்திற்கும், பயணிகள் நடமாட்டத்திற்கும் ஏற்ற வகையில் இவை கட்டப்பட்டுள்ளன.

இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஹவுரா-பர்தமான் கார்டு வழித்தடத்தில் டான் குனி மற்றும் பருயிபரா ( 11.28 கிலோமீட்டர்) வழித்தடம் நான்காவது இணைப்பு, ஹவுரா பர்தமான் மெயின் இணைப்பு வழித்தடத்தில் ரசுல்பூர் மற்றும் மக்ரா ஆகிய இடங்களுக்கு இடையே (42.42 கிலோமீட்டர்) மூன்றாவது இணைப்பு வழித்தடம் திட்டம்  ஆகியவை  கொல்கத்தாவிற்கான முக்கிய நுழைவாயிலாக விளங்குகிறது.

ரசுல்பூர் மற்றும் மக்ரா ஆகிய இடங்களுக்கு இடையேயான 3வது இணைப்பு ரூ. 759 கோடி  செலவில் அமைக்கப்பட்டுள்ளது. டான் குனி மற்றும் பருயிப்பரா ஆகிய இடங்களுக்கு இடையே ஆன நான்காவது இணைப்பு ரூ. 195 கோடி  செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

அசிம்கஞ்- கர்கிராகாட் சாலை பிரிவு இரட்டிப்பாக்கல்:

அசிம்கஞ் முதல் கர்கிராகாட் சாலை பிரிவு வரையிலான தடம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ள திட்டம், கிழக்கு இந்தியாவின் ஹவுரா-பண்டல்- அசிம்கனி பகுதி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

 இத்திட்டத்திற்கு சுமார் ரூ. 240 கோடி செலவிடப்பட்டுள்ளது.

இந்தத்திட்டங்கள் மூலமாக பயண நேரம் குறைவதுடன், ரயில்கள் பாதுகாப்பாக இயக்கப்படுவது அதிகரிக்கப்படும், இந்த மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சியும் மேம்படும்.



(Release ID: 1700019) Visitor Counter : 161