பிரதமர் அலுவலகம்

அத்தியாவசிய தேவை உள்ள நபர்களுக்கு முதலாவதாக தடுப்பூசி வழங்கப்படும் – பிரதமர்


தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் மனிதகுலத்தை மையமாகக் கொண்ட அணுகுமுறையால் இந்தியா வழிநடத்தப்படுகிறது: பிரதமர்

பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தடுப்பூசி நெறிமுறைகளையும் பின்பற்றுமாறு எச்சரிக்கை விடுத்தார்

Posted On: 16 JAN 2021 1:35PM by PIB Chennai

மனித நேயத்தையும், முக்கிய கோட்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்தியாவின் கொவிட்-19 தடுப்பூசி பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார். அத்தியாவசிய தேவை உள்ள நபர்களுக்கு முதலாவதாக தடுப்பூசி வழங்கப்படும். தொற்று பாதிப்பு அதிகம் ஏற்படக்கூடியவர்களுக்கு முதலில் தடுப்பூசி அளிக்கப்படும். நமது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை துப்புரவு பணியாளர்கள் மற்றும் துணை மருத்துவ ஊழியர்களுக்கு தடுப்பூசி கிடைப்பதற்கான முதல் உரிமை இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அரசு மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த மருத்துவமனைகளுக்கு இந்த முன்னுரிமை அளிக்கப்படும். தேசிய அளவிலான கொவிட்- 19 தடுப்பூசித் திட்டத்தைக் காணொலி வாயிலாகத் தொடங்கிவைத்த பிறகு பேசுகையில் பிரதமர் இதனை தெரிவித்தார்.

மருத்துவ பணியாளர்களைத் தொடர்ந்து, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர், நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கில் அங்கம் வசிப்பவர்களுக்குத் தடுப்பூசி வழங்கப்படும் என்று பிரதமர் கூறினார். நமது பாதுகாப்புப் படையினர், காவல் துறையினர், தீயணைப்பு வீரர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்த எண்ணிக்கை சுமார் 3 கோடி அளவில் இருக்கும் என்றும், அவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான செலவை இந்திய அரசே ஏற்கும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தத் தடுப்பூசித் திட்டத்திற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை விரிவாக எடுத்துரைத்த பிரதமர், இரண்டு கட்டங்களாக வழங்கப்படும் தடுப்பூசிகளை மக்கள் கட்டாயம் முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். இரண்டு கட்டங்களுக்கும் இடையே ஒரு மாத இடைவெளி இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இரண்டாம் கட்ட தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு 2 வாரங்கள் கழித்தே தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மனித உடலில் ஏற்படும் என்பதால் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட பிறகு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

கொரோனா தொற்றுக்கு எதிராக நாட்டு மக்கள் காட்டிய அதே பொறுமையை தடுப்பூசியை எடுத்துக் கொள்வதிலும் காட்ட வேண்டும் என்று திரு மோடி கோரிக்கை விடுத்தார்.

------

 



(Release ID: 1689088) Visitor Counter : 205