பிரதமர் அலுவலகம்

இந்திய - இத்தாலி மெய்நிகர் இருதரப்பு உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2020 5:49PM by PIB Chennai

மேன்மை மிக்கவர்களே,

 

வணக்கம் !

 

உங்கள் அறிமுகக் கருத்துக்களுக்கு நன்றி!

 

நீங்கள் கூறியது போல், கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, மே மாதத்தில் எனது இத்தாலி பயணத்தை ஒத்தி வைக்க வேண்டியிருந்தது. நல்ல விஷயம் என்னவென்றால், இன்று நாம் மெய்நிகர் ஊடகம் மூலம் சந்திக்க முடிகிறது. முதலாவதாக, இத்தாலியில் கொரோனா வைரஸால் ஏற்பட்ட சேதங்களுக்கு, நானும் இந்திய குடிமக்கள் அனைவரும் வருந்துகிறோம். உலகின் பிற நாடுகள், கொரோனா வைரஸைப் புரிந்து கொள்ள முயற்சித்த போது, ​​நீங்கள் இந்த பேரழிவை எதிர்த்துப் போராடினீர்கள்.

 

நீங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை, வெற்றிகரமாகவும் விரைவாகவும் கட்டுப்படுத்தி, முழு நாட்டையும் ஒழுங்கமைத்தீர்கள். தொற்றுநோயின் முதல் சில மாதங்களில், இத்தாலியின் வெற்றி அனைவருக்கும் உத்வேகம் அளித்தது. உங்கள் அனுபவங்கள் எங்கள் அனைவருக்கும் வழிகாட்டின.

 

மேன்மை மிக்கவர்களே,

 

உங்களைப் போலவே, இந்தியாவிற்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவுகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும் ஆழப்படுத்துவதற்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். 2018 ஆம் ஆண்டு தொழில்நுட்ப உச்சிமாநாட்டிற்கான உங்களது இந்தியா வருகையும், நமது சந்திப்பும் பல அம்சங்களைத் தொட்டது, மேலும், இந்திய மக்களுக்கு இத்தாலி மீதான ஆர்வத்தையும் உருவாக்கியது. 2018 ஆம் ஆண்டில் நமது பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இருதரப்பு உறவுகளில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியான விஷயமாகும்.

 

இத்தாலிய நாடாளுமன்றம் கடந்த ஆண்டு இந்திய-இத்தாலி நட்புக் குழுவை அமைத்தது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். கொவிட் நிலைமை மேம்பட்டவுடன், இத்தாலிய நாடாளுமன்ற உறுப்பினர்களை இந்தியாவுக்கு வரவேற்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

 

மேன்மை மிக்கவர்களே,

 

கொவிட்-19 பெருந்தொற்றானது, இரண்டாம் உலகப் போர் போல, வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும் என்பது தெளிவு. நாம் அனைவரும் இந்த புதிய உலகத்திற்கு, கொரோனாவுக்கு பிந்தைய உலகத்திற்கு ஏற்ப நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும். மேலும், இதிலிருந்து எழும் சவால்களுக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்ப ஒரு புதிய வழியில் தயாராக இருக்க வேண்டும்.

 

நமது இன்றைய கலந்துரையாடல்கள், நம் உறவுகளை மேலும் வலுப்படுத்தும்; இருதரப்பு புரிந்துணர்வை மேம்படுத்தும்; ஒத்துழைப்பின் புதிய பகுதிகளை அடையாளம் காண உதவும் என்று நான் நம்புகிறேன்.

 

குறிப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

 


(வெளியீட்டு அடையாள எண்: 1676037) வருகையாளர் எண்ணிக்கை : 207