ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

மூட்டு உள்வைப்புகளுக்கான அதிகபட்ச விலை கட்டுப்பாடு 2021 செப்டம்பர் 14 வரை நீட்டிப்பு; பொதுமக்களுக்கு ரூ 1,500 கோடியை மிச்சப்படுத்தும்

Posted On: 17 SEP 2020 11:15AM by PIB Chennai

மருத்துவ உபகரணங்கள் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்காக, மருந்து விலை கட்டுப்பாட்டு அமைப்பான தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம், மூட்டு உள்வைப்புகளுக்கான அதிகபட்ச விலை கட்டுப்பாட்டை 2021 செப்டம்பர் 14 வரை நீட்டித்துள்ளது.

ரசாயனம் மற்றும் உரங்கள் துறையின் கீழ் இயங்கும் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம், இது தொடர்பான அறிவிப்பை 2020 செப்டம்பர் 15 அன்று வெளியிட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்கள் ரூ 1,500 கோடியை மிச்சப்படுத்தலாம் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது.

2017 ஆகஸ்ட் 16 அன்று தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் மூட்டு உள்வைப்புகளுக்கான அதிகபட்ச விலை கட்டுப்பாட்டை ஒரு வருடத்துக்கு அறிவித்தது. பின்னர் இது 2018-லும் 2019-லும் இன்னும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டது. தற்போது மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மூட்டு அமைப்புகளின் உற்பத்தி மற்றும் இறக்குமதியில் ஈடுபட்டுள்ள அனைத்து நிறுவனங்களையும் ஜூலை 2018 முதல் ஜூன் 2020 வரையிலான தங்களது விற்பனை விபரங்களை சமர்ப்பிக்குமாறு கடந்த ஜூலை மாதம் தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியது. இந்தத் தகவல்களை ஆராய்ந்த பின்னர் விலை கட்டுப்பாட்டை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு, இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே படிக்கவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1655460

 

********



(Release ID: 1655481) Visitor Counter : 163