வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

17வது ஏசியன்-இந்தியா பொருளாதார அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Posted On: 30 AUG 2020 10:19AM by PIB Chennai

இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில்கள், ரெயில்வே அமைச்சர் திரு.பியூஷ் கோயல் மற்றும் வியட்நாமின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் மாண்புமிகு இட்ரான் துவான் ஆன் ஆகிய இருவரும் இணைந்து தலைமையேற்க, 29 ஆகஸ்ட் 2020 அன்று மெய்நிகர் முறையில் 17வது ஏசியன்-இந்தியா பொருளாதார அமைச்சர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் 10 ஏசியின் நாடுகளின் பொருளாதார அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.

சரக்குகள் குறித்த ஏசியன் இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை (AITIGA). மீளாய்வு செய்வது குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர்.  ஏசியன்-இந்தியா வர்த்தகக் கவுன்சில் (AIBC)  இந்த ஏசியன் இந்திய வர்த்தக ஒப்பந்தத்தை பரஸ்பரப் பலன்களுக்காக மீளாய்வு செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது.

கலந்துரையாடலைத் தொடங்கி வைத்த திரு கோயல் கட்டற்ற வர்த்தக ஒப்பந்தம் என்பது பரஸ்பரம் அனைவருக்கும் பலன் தரும் வகையிலும் அனைத்துத் தரப்பினருக்கும் இலாபம் தரும் வகையிலும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.  சரக்கு உற்பத்தியாகும் நாடு குறித்த விதிகளின் ஷரத்துக்களை வலுப்படுத்துதல், கட்டணம் விதிக்க முடியாத தடைகளை நீக்குதல் குறித்து கவனம் செலுத்துதல், சந்தையில் சிறப்பான முறையில் ஈடுபடுவதற்கு உதவுதல் போன்றவை குறித்து திரு கோயல் கருத்துகளைத் தெரிவித்தார்.  ஏசியன் இந்திய ஒப்பந்தத்தை மீளாய்வு செய்வது என்பது தாமதமாகி வருவதை கவனத்தில் கொண்டுள்ள இந்தியா வருகின்ற நவம்பர் 2020இல் நடைபெறவுள்ள ஏசியன் இந்தியா தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கு முன்பாகவே ஒப்பந்தத்தைத் திருத்த வேண்டிய நடைமுறைகளை அனைவரும் பங்கேற்று இறுதி செய்ய வேண்டுமென்றும் அமைச்சர் கோயல் கேட்டுக்கொண்டார்.  மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் முழுமையான மீளாய்வைத் தொடங்கி விட வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



(Release ID: 1649742) Visitor Counter : 238