நித்தி ஆயோக்

ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு (EPI) 2020 குறித்த அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டது

Posted On: 26 AUG 2020 1:53PM by PIB Chennai

ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு (EPI) 2020- போட்டித்திறன் நிறுவனத்துடன் இணைந்து நிதிஆயோக் இன்று வெளியிட்டது. ஏற்றுமதி தயார்நிலை மற்றும் மாநிலங்களின் செயல்பாடுகளைப் பற்றிய முதல் அறிக்கையான இது, சவால்கள் மற்றும் வாய்ப்புகளைக் கண்டறிதல், அரசுக் கொள்கைகளின் செயல்திறனை மேம்படுத்துதல்; மற்றும் வசதியளிக்கும் ஒழுங்குமுறைக் கட்டமைப்பை ஊக்குவித்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டது ஆகும்.

 

ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டின் கட்டமைப்பு- கொள்கை; வர்த்தகச் சூழல்; ஏற்றுமதிச் சூழல்; ஏற்றுமதிச் செயல்பாடுகள் ஆகிய நான்கு தூண்களையும், ஏற்றுமதி ஊக்குவித்தல் கொள்கை; நிறுவனக் கட்டமைப்பு; வர்த்தகச் சூழ்நிலை; உள்கட்டமைப்பு; போக்குவரத்து இணைப்பு; நிதி அணுகல்; ஏற்றுமதி உள்கட்டமைப்பு; வர்த்தக ஆதரவு; ஆராய்ச்சி, மேம்பாடு உள்கட்டமைப்பு; ஏற்றுமதி பல்வகைப்படுத்தல்; மற்றும் வளர்ச்சி நோக்குநிலை ஆகிய நான்கு துணைத் தூண்களையும் உள்ளடக்கியது ஆகும்.

 

"சர்வதேச அரங்கில் வலிமைமிக்க ஏற்றுமதியாளராக விளங்கும் அதிக சாத்தியக் கூறுகளை இந்தியப் பொருளாதாரம் கொண்டுள்ளது. தனது மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் நாட்டின் ஏற்றுமதி முயற்சிகளின் செயல்மிகு பங்கேற்பாளர்களாக மாற்றுவது, இந்த சாத்தியங்களை மெய்ப்பிக்க இந்தியாவுக்கு அவசியமானதாகும். இந்த லட்சியத்தை அடையும் முயற்சியில், மாநிலங்களின் சாத்தியங்களையும், திறன்களையும் ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு 2020 மதிப்பிடுகிறது. இந்தக் குறியீட்டின் விரிவான அறிவுசார்ந்த உள்ளீடுகள் தேசிய மற்றும் துணை-தேசிய அளவில் ஏற்றுமதிச் சூழலை வலுப்படுத்த பங்குதாரர்களுக்கு உதவும் என நம்பப்படுகிறது," என்று நிதிஆயோக் துணைத் தலைவர் டாக்டர். ராஜிவ் குமார் கூறினார்.

 

அமிதாப் கந்த், தலைமைச் செயல் அலுவலர், நிதிஆயோக், பேசுகையில், "துணை-தேசிய அளவில் ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கான முக்கியமான பகுதிகளை அடையாளம் காணும் தரவு-சார்ந்த முயற்சியே ஏற்றுமதி தயார்நிலைக் குறியீடு ஆகும். நிலையான ஏற்றுமதி வளர்ச்சியை அடைய எந்த ஒரு பொருளாதார அலகுக்கும் அவசியமான முக்கியமான காரணிகளைக் கொண்டு அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் மதிப்பிடப்பட்டுள்ளன. ஏற்றுமதி ஊக்குவிப்பு சார்ந்த பிராந்திய செயல்பாட்டை அளவிடுவதற்கும், அதை மேம்படுத்தி, வளர்ச்சியடையச் செய்வதற்கான முக்கிய கொள்கை உள்ளீடுகளை வழங்குவதற்கும் மாநில அரசுகளுக்கு இந்தக் குறியீடு பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும்," என்றார்.

 

ஏற்றுமதி பல்வகைப்படுத்தல், போக்குவரத்து இணைப்பு, மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துணைத் தூண்களைப் பொருத்தவரையில், பெருவாரியான இந்திய மாநிலங்கள் சராசரியை விட நன்றாகவே செயல்பட்டிருப்பதாக ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டின் இந்தப் பதிப்பு காட்டுகிறது. இந்தத் துணைத் தூண்களில் இந்திய மாநிலங்களின் சராசரி மதிப்பெண் 50 சதவீதத்துக்கும் அதிகம் ஆகும்.

 

ஒட்டுமொத்தமாக, பெருவாரியான கடலோர மாநிலங்கள் சிறந்து விளங்குகின்றன. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகியவை முதல் மூன்று இடங்களை முறையே பெற்றிருக்கின்றன. ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கான வசதியை அளிக்கும் வலுவான காரணிகளை பிரதிபலிக்கும் விதமாக எட்டு கடலோர மாநிலங்களில் ஆறு முதல் பத்து இடங்களில் இருக்கின்றன. நிலப்பரப்பு மாநிலங்களைப் பொருத்தவரையில், ராஜஸ்தான் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து தெலங்கானா மற்றும் ஹரியானாவும் இருக்கின்றன. இமாலய மாநிலங்களில், உத்தரகாண்ட் முதலிடத்திலும், அதைத் தொடர்ந்து திரிபுரா மற்றும் இமாச்சலப் பிரதேசமும் இருக்கின்றன. யூனியன் பிரதேசங்களில், தில்லி சிறந்து விளங்குகிறது, அதைத் தொடர்ந்து கோவா மற்றும் சண்டிகர் உள்ளன.

 

*****
 



(Release ID: 1648716) Visitor Counter : 1782