சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஒரே நாளில் அதிகபட்சமாக 56,110 பேர் குணமடைந்துள்ளனர்

இந்தியாவில் குணமடைந்தவர்கள் விகிதம் 70 சதத்தை கடந்துள்ளது
இந்தியாவில் இதுவரை இல்லாது ஒரே நாளில் அதிகபட்சமாக 7,33,449 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன

Posted On: 12 AUG 2020 2:58PM by PIB Chennai

ஒருங்கிணைந்த கவனிப்பு முறையின் அடிப்படையில்,  பரவலைத் தடுக்கும் சிறப்பான உத்தி, தீவிரமான மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை, அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளித்தல் ஆகியவற்றின் விளைவாக கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 தொற்றிலிருந்து 56,110 பேர் குணமடைந்துள்ளனர்.

மத்திய அரசு, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.   ஜூலை மாதம் முதல் வாரத்தில், ஒரு நாளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சராசரியாக 15000 ஆக இருந்தது. இது ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் 50000–ஆக அதிகரித்துள்ளது.

நோயாளிகள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவது அதிகரித்திருப்பது, குறைவான தொற்றுள்ளவர்கள்  வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பது ஆகியவற்றின் காரணமாக குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,39,599-ஐ தாண்டியுள்ளது. குணமடைந்தவர்கள் விகிதம் 70.38 விழுக்காடு என்ற உயர்ந்த அளவை எட்டியுள்ளது.

மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை 6,43,948 மட்டுமே. இது, கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 27.64 விழுக்காடுதான். இவர்கள், தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் தொடர்ந்து சீராக அதிகரித்து வருவதால், கொவிட்-19 நோயாளிகளைவிட, 10 லட்சம் பேர் அதிகமாக குணமடைந்துள்ளனர்.

கொவிட்-19 தொற்றால் இறப்பவர்களின் விகிதமும் உலக சராசரியைவிட இந்தியாவில் குறைவாக இருக்கிறது. இன்று இந்த இறப்பு விகிதம் 1.98 விழுக்காடாகும்

இந்தியாவில், “பரிசோதனை, தடம் அறிதல் மற்றும் சிகிச்சைகள்” என்ற உத்தி மூலம் கடந்த 24 மணி நேரத்தில், 7,33,449 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 2.6 கோடி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. சோதனைகளின் எண்ணிக்கை 10 லட்சம் பேருக்கு 18,852 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டின் பரிசோதனைக் கூடங்களின் கட்டமைப்பு, தொடர்ந்து வலுப்படுத்தப்பட்டு தற்போது 1421 கொவிட் ஆய்வகங்கள்  உள்ளன. அரசு துறையில் 944 ஆய்வகங்களும், தனியார் துறையில் 477 ஆய்வகங்களும் இயங்கி வருகின்றன.  அவற்றின் விவரம் பின்வருமாறு;

 

  • ரியல் –டைம் ஆர்டி பிசிஆர் அடிப்படையிலான ஆய்வகங்கள்; 724    (அரசு-431 + தனியார்-293)

 

  • ட்ரூநேட் அடிப்படையிலான ஆய்வகங்கள்; 584 (அரசு-481 + தனியார்-103)

 

  • சிபிநேட் அடிப்படையிலான ஆய்வகங்கள்; 113 (அரசு-32+ தனியார்-81)

 

கோவிட்-19 குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களையும், கோவிட்-19 தொடர்பான  தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள், வழிகாட்டுதல்கள், அறிவுறுத்தல்கள் பற்றிய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்ள தயவுசெய்து இந்த இணையதளத்தைப் பாருங்கள்: https://www.mohfw.gov.in/ மற்றும் @MoHFW_INDIA.

----- 



(Release ID: 1645348) Visitor Counter : 181