சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கோவிட்-19 குறித்த அண்மைச் செய்திகள்.
ஒடிசாவில் சமுதாயப் பங்கேற்பு மற்றும் டிஜிட்டல் முன்முயற்சிகள் காரணமாக கோவிட்-19 பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது
Posted On:
23 JUN 2020 4:25PM by PIB Chennai
கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு, மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தீவிரப் பங்களிப்புடன் கூட்டாக மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசின் விரிவான ஆலோசனைகள், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்படி, பெரும்பாலான மாநிலங்கள், அந்தந்த மாநிலத்திற்கென தனிப்பட்ட வழிமுறைகளை வகுத்து செயல்படுகின்றன.
ஒடிசா மாநிலம், தனது கோவிட் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தகவல் தொழில்நுட்பத்தைப் பெருமளவு பயன்படுத்தி, உள்ளூர் கிராம நிர்வாகிகளுக்கு அதிகாரமளித்து, சமுதாயப் பங்களிப்புடன், பயிற்சி பெற்ற சுகாதார சேவைப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, எளிதில் பாதிப்புக்கு ஆளாகக் கூடியவர்களைப் பாதுகாப்பதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக, நோய் பாதிப்பைக் குறைத்திருப்பதோடு, இறப்பு வீதத்தையும் குறைத்துள்ளனர். இதில், சில முக்கிய முன்முயற்சிகள் வருமாறு :
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும், மூத்த குடிமக்களையும் தீவிரமாகக் கண்காணிக்க ஏதுவாக, புவனேஷ்வர் மாநகராட்சி நிர்வாகம், ‘சச்சேதக்’ என்ற பிரத்யேக செல்போன் செயலியை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும் தலா ஒருவர் காப்பாளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு உதவுவதற்காக, வார்டு அளவிலான சச்சேதக் குழுவிலிருந்து ஒரு தன்னார்வலர் அடையாளம் காணப்பட்டு, காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய நபர்கள், எளிதில் பாதிப்புக்கு ஆளாகக் கூடியவர்களை அடையாளம் கண்டு கட்டுப்படுத்துவதற்கான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலி மூலம், கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான ஆதாரங்களை குடிமக்கள் திரட்டுவதோடு, மருத்துவர்களைக் கலந்தாலோசித்து, கோவிட் தனிமைப்படுத்துதல் மற்றும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் பற்றிய அண்மைத் தகவல்களையும் பெற முடியும். இந்தச் செயலி மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள், குறிப்பிட்ட பகுதிகளில் சுகாதார முகாம்களை நடத்துவது குறித்து திட்டமிடலாம்.
2005-ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்ட விதி 51, 1897-ஆம் ஆண்டு தொற்றுநோய் தடுப்புச் சட்டம் மற்றும் ஒடிசா மாநில கோவிட்-19 முறைப்படுத்துதல் சட்டம் 2020 ஆகியவற்றின் அடிப்படையில், ஒடிசா மாநில அரசு, மாவட்ட ஆட்சியர்களுக்கான அதிகாரத்தை, கிராமப் பஞ்சாயத்து நிர்வாகிகளுக்கு வழங்கியுள்ளது. இந்த நடவடிக்கை, 14 நாள் தனிமைப்படுத்துதலை, குறிப்பாக சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருப்பதைத் திறம்படக் கண்காணிக்க உதவுகிறது.
104 தொலைபேசி உதவி எண் தவிர, தொலைமருத்துவ ஆலோசனை சேவைக்காகவும், கட்டணமில்லா தொலைபேசி (14410) வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
*****
(Release ID: 1633708)