சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் -19 அண்மைத் தகவல்கள்

பரிசோதனைத் திறன் அதிகரிப்பு, பரிசோதனைகள் நாள் ஒன்றுக்கு 3 லட்சமாக உயர்வு

Posted On: 16 JUN 2020 1:11PM by PIB Chennai

கோவிட்-19 நோயாளிகளுக்கு மேம்படுத்தப்பட்ட படுக்கை வசதி,  அவசர சிகிச்சை வசதிகளை அளிப்பதற்கும், மருத்துவ சேவைகளுக்கு நியாயமான, வெளிப்படையான கட்டணத்தை உறுதி செய்வதற்கும், தாமாக முன்வந்து தனியார்துறை மருத்துவமனைகளுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் கேட்டுக் கொண்டுள்ளது.

     இது தொடர்பாக தமிழ்நாடு, டிசா, மகாராஷ்டிரா, குஜராத் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளன. கொவிட் நோயாளிகளுக்கு நியாயமான கட்டணம் மற்றும் தீவிர சிகிச்சை ஏற்பாடு செய்வது தொடர்பாக தனியார் மருத்துவமனைகளுடன் அந்த மாநிலங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்துள்ளன.

தனியார் துறை மருத்துவமனைகளுடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தவும், கொவிட் நோயாளிகளுக்கு பொது மற்றும் தனியார் துறை சுகாதார வசதிகள் கிடைப்பதை கருத்தில் கொள்ளவும், மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.  இது நியாயமான, நல்ல தரமான சிகிச்சை கிடைக்க உதவும்.

நாட்டில் கொரோனா நோயாளிகளை கண்டறிவதற்கான பரிசோதனை திறன் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.  தற்போது ஒரு நாளைக்கு 3 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கும் திறன் நம் நாட்டில் உள்ளது. இதுவரை 59,21,069 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1,54,935 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. நாட்டில் தற்போது வரை 907 பரிசோதனை கூடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றில் 659 அரசுத்துறை, 248 தனியார் துறையைச் சார்ந்தது. இதன் விவரங்கள் வருமாறு:

நிகழ்நேர RT PCR அடிப்படையிலான பரிசோதனைக் கூடங்கள்: 534 (அரசு : 347 + தனியார்:187)

*TrueNat அடிப்படையிலான பரிசோதனைக் கூடங்கள்: 302 (அரசு: 287 + தனியார்:15)

* CBNAAT அடிப்படையிலான பரிசோதனைக் கூடங்கள்: 71 (அரசு: 25 + தனியார் :46)

புதுதில்லியில் பரிசோதனை திறனை அதிகரிக்க, 11 மாவட்டங்களிலும் தனித்தனியாக பரிசோதனைக் கூடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தாமதம் இல்லாமல் சரியான நேரத்தில் பரிசோதனை செய்து முடிவுகள் அறிய,   ஒவ்வொரு மாவட்டத்தின் மாதிரிகளும் அந்தந்த பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.  தில்லியில் தற்போது 42 பரிசோதனைக் கூடங்கள் உள்ளன. இங்கு ஒரு நாளைக்கு தோராயமாக 17,000 மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன.

கோவிட்-19 பரிசோதனைக்கு நிகழ்நேர PCR (RT-PCR) பரிசோதனை நல்ல தரமான முன்னணி சோதனையாக உள்ளது. நாடு முழுவதும் உள்ள 907 பரிசோதனைக் கூடங்களிலும், பரிசோதனைத் திறனை வலுப்படுத்த இவற்றை பயன்படுத்த முடியும். ஆனால், இதற்கு சிறப்பான பரிசோதனை வசதிகள் தேவைப்படுகின்றன. மேலும் இவை முடிய குறைந்தது 2-5 மணிநேரம் ஆகிறது. TRUENAT மற்றும் CB NAAT பரிசோதனை முறைகளை பிற இடங்களுக்கு எடுத்துச் சென்று தொலை தூரப்பகுதிகளில் பயன்படுத்த முடியும். இந்த பரிசோதனையை, நம்பகத்தன்மை, துல்லியம் இழக்காமல் எளிதாக்க மற்றும் அதிகரிக்கும் முயற்சியில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், விரைவான எதிர்பொருள் கண்டறிதல் சோதனை (Rapid Antigen Detection Test) தொடர்பான ஆலோசனையை வழங்கியுள்ளது. இதனை https://www.icmr.gov.in/pdf/covid/strategy/Advisory_for_rapid_antigen_test_14062020_.pdf என்ற இணைய முகவரியில் பார்க்கலாம்.

விரைவான எதிர்பொருள் கண்டறிதல் சோதனையைக் கட்டுப்பாட்டு பகுதிகள் மற்றும் கடுமையான மேற்பார்வையுடன் கூடிய மருத்துவமனைகளில் பயன்படுத்தலாம். Standard Q COVID-19 Ag பரிசோதனை உபகரணங்கள் 15 நிமிடங்களில் முடிவைத் தெரிவிக்கின்றன. இதன் மூலம் விரைவாக தொற்றைக் கண்டறிய முடியும். எதிர்பொருள் கண்டறிதல் சோதனையை, மாதிரி சேகரிக்கும் இடங்களில் ஒரு மணி நேரத்துக்குள் பரிசோதிக்க முடியும். தற்போது இந்த உபகரணம், உள்நாட்டில் மாதத்துக்கு 10 மில்லியன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. இவற்றை மாநிலங்களும் எளிதில் கொள்முதல் செய்ய, உள்நாட்டு உற்பத்தியாளர்களை அரசின் இ-சந்தை இணைய தளத்தில் சேர்ப்பதை மத்திய அரசு உறுதி செய்கிறது.

ELISA AND CLIA எதிர்பொருள் பரிசோதனையை அறிகுறியில்லாத முன்னணி பணியாளர்கள், டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களுக்கும், கொவிட்-19 மையங்களில் பணியாற்றுபவர்களுக்கு அவர்களின் நம்பிக்கையை அதிகரிக்க பயன்படுத்த முடியும். இது அரசின் இ-சந்தை இணைய தளத்தில் கிடைக்கிறது.

-----



(Release ID: 1631910) Visitor Counter : 209