மத்திய அமைச்சரவை

அவசரகால கடனளிப்பு உத்தரவாதத் திட்டம் (ECLGS) அறிமுகம் மூலம் ரூ.3 லட்சம் கோடி வரையில் கூடுதல் நிதி அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 20 MAY 2020 2:16PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பின்வரும் ஒப்புதல்கள் அளிக்கப்பட்டன:

•     தகுதியுள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் விருப்பம் உள்ள முத்ரா கடனாளிகளுக்கு ``அவசரகாலக் கடனளிப்பு உத்தரவாதத் திட்டம்'' மூலம் ரூ.3 லட்சம் கோடி வரையில் கூடுதல் கடன் அளிக்க ஒப்புதல்.

•     இத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் விருப்பம் உள்ள முத்ரா கடனாளிகளுக்கு ரூ.3 லட்சம் கோடி வரையில் கூடுதல் கடனுக்கு தேசிய கடன் உத்தரவாத டிரஸ்டி கம்பெனி லிமிடெட் (NCGTC), உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவசரகாலக் கடனளிப்பு (GECL) ஏற்பாட்டின் மூலம், 100 சதவீத உத்தரவாதம் அளிக்கும்.

இதற்காக நடப்பு மற்றும் அடுத்த மூன்று நிதியாண்டுகளில் மத்திய அரசு ரூ.41,600 கோடி தொகுப்பு நிதி அளிக்கும்.

உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவசரகாலக் கடனளிப்பு (GECL) ஏற்பாட்டின் மூலம் அளிக்கப்பட்ட அனைத்து கடன்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும் என அமைச்சரவை அனுமதி அளித்தது. திட்டம் அறிவிக்கப்படும் தேதியில் இருந்து 31.10.2020 வரையிலான காலம் வரை அல்லது GECL கீழ் ரூ.3 லட்சம் கோடி அனுமதி அளிக்கப்படுவது வரை, இதில் எது முன்னதாக வருகிறதோ அந்த காலக்கட்டத்துக்கு இது பொருந்தும்.

 

விவரங்கள்:

கோவிட்-19 நோய்த் தாக்குதல் மற்றும் முடக்கநிலை அமல் காரணமாக குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் உற்பத்தி மற்றும் இதர செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட முன்னெப்போதும் இல்லாத சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு அவசரகாலக் கடனளிப்பு உத்தரவாதத் திட்டம் (ECLGS) உருவாக்கப்பட்டது. உத்தரவாதம் அளிக்கப்பட்ட அவசரகாலக் கடன் அளிப்பதன் மூலமும், ரூ.3 லட்சம் கோடி கூடுதல் கடன் அளிப்பதன் மூலமும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எதிர்கொண்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளைச் சமாளிப்பதை நோக்கமாகக் கொண்டு இத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. கடன் அளிக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், வங்கிச் சேவையில் இல்லாத நிதி நிறுவனங்கள் போன்ற கடனளிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கம் தருவதை நோக்கமாகக் கொண்டதாக இத் திட்டம் இருக்கும். கோவிட்-19 பிரச்சினையால் ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, GECL கடனை கடனாளிகள் திருப்பிச் செலுத்த முடியாமல் போவதால் ஏற்படும் எந்த இழப்புக்கும் 100 சதவீத உத்தரவாதம் அளிப்பதாக இது இருக்கும்.



(Release ID: 1625370) Visitor Counter : 395