பிரதமர் அலுவலகம்
தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் புகழாரம்.
இடுகை இடப்பட்ட நாள்:
11 MAY 2020 4:17PM by PIB Chennai
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மற்றவர்களின் வாழ்க்கையில் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கும் நாட்டின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புகழாரம் சூட்டியுள்ளார்.
தேசிய தொழில்நுட்ப தினத்தையொட்டி, திரு. மோடி டுவிட்டர் பதிவு வெளியிட்டார்.
‘’ தேசிய தொழில்நுட்ப தினத்தில், தொழில்நுட்பத்தின் உதவியுடன் மற்றவர்களது வாழ்வில் ஆக்கபூர்வமான மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கும் அனைவருக்கும் நமது நாடு தலைவணங்குகிறது. 1998-இல் இதே நாளில் நமது விஞ்ஞானிகள் நிகழ்த்திய மகத்தான சாதனையை நாம் நினைவுகூர்கிறோம். இந்தியாவின் வரலாற்றில் அது குறிப்பிடத்தக்க தருணாமாக அமைந்தது ’’ என்று அவர் கூறியுள்ளார்.
1998-ம் ஆண்டு மே 11-ஆம் தேதி நடைபெற்ற பொக்ரான் சோதனைகள் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், அப்போது வலிமையான அரசியல் தலைமை காரணமாகவே அணுகுண்டு சோதனை சாத்தியமாயிற்று என்று கூறினார். இந்த சோதனை பற்றிய தமது கருத்தை, மனதின் குரல் உரை ஒன்றில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
‘’1998-இல் பொக்ரானில் நடைபெற்ற சோதனைகள், வலிமையான அரசியல் தலைமையால் இதைச் செய்ய முடியும் என்பதைக் காட்டியது. இந்திய விஞ்ஞானிகள் மற்றும் அடல்ஜியின் மகத்தான தலைமை காரணமாக பொக்ரான் சோதனை சாத்தியமானதாக மனதின் குரல் நிகழ்ச்சி ஒன்றில் நான் குறிப்பிட்டுள்ளேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.
திரு. மோடி மேலும் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘’இன்று, கொவிட்-19 தொற்றில் இருந்து உலகை விடுவிக்க தொழில்நுட்பம் பலருக்கு உதவி வருகிறது. கொரோனா தொற்றை முறியடிப்பதற்கான ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் முன்களத்தில் ஈடுபட்டுள்ள அனைவரையும் நான் வணங்குகிறேன். ஆரோக்கியமான, சிறந்த பூமியை உருவாக்க ,தொழில்நுட்பத்தைத் தொடர்ந்து நாம் பயன்படுத்துவோம்’’ என்று கூறியுள்ளார்.
(வெளியீட்டு அடையாள எண்: 1622990)
வருகையாளர் எண்ணிக்கை : 267
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam