புவி அறிவியல் அமைச்சகம்
தெற்கு அந்தமான் கடலுக்கு அருகிலுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி
இடுகை இடப்பட்ட நாள்:
01 MAY 2020 12:39PM by PIB Chennai
இந்திய வானிலை ஆய்வுத் துறையின் புயல் எச்சரிக்கைப் பிரிவின் அறிக்கையின் படி, தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதன் அருகிலுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று காலை குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இதன் தீவிரம் மெதுவாகவும், தாமதமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த 48 மணி நேரத்தில், இது அதே பகுதியில் வலுவடைந்து, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் தீவிரமடைந்து , தெற்கு அந்தமான் கடல், அருகிலுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி மேலும் தீவிரமடையக்கூடும். இது மே 5-ஆம் தேதி வரை, வடக்கு-வடமேற்கு திசையில் படிப்படியாக நகர்வதற்கு வாய்ப்புள்ளது.
இதன் தாக்கத்தால், அடுத்த 5 நாட்களுக்கு தெற்கு அந்தமான் கடல், அருகிலுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியிலும், அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் மோசமான வானிலை நிலவும்.
அந்தமான் நிக்கோபார் தீவுகளில் பல இடங்களில் மே 1 முதல் 2 வரை மிதமான மழை பெய்யக்கூடும். மே 3 முதல் 5 வரை பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.
மே முதல் தேதியன்று, தென்கிழக்கு வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். அது மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீச வாய்ப்புள்ளது.
மே முதல் தேதியிலிருந்து 5-ஆம் தேதி வரை தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடல் வெகு சீற்றத்துடன் காணப்படும்.
மீனவர்கள், மே 1-ஆம்தேதி தென்கிழக்கு வங்கக்கடலிலும், மே 2, 3 ஆகிய தேதிகளில் தெற்கு அந்தமான் கடலிலும், மே 4, 5 ஆகிய தேதிகளில் அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
(வெளியீட்டு அடையாள எண்: 1620092)
வருகையாளர் எண்ணிக்கை : 225