பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் ஊழியர்கள் மற்றும் அங்குள்ள மத்திய அரசு ஊழியர்களின் பணிகள் தொடர்பானஅனைத்து விஷயங்களையும் ஜம்மு காஷ்மீர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாய அமர்வு விசாரித்து தீர்வு காணும்.

Posted On: 01 MAY 2020 2:19PM by PIB Chennai

ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேச ஊழியர்களின் பணி தொடர்பான வழக்குகளை விசாரிப்பதை, சண்டிகர் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்திற்கு (Central Adminstrative Tribunal – CAT) மத்திய அரசு மாற்றியுள்ளது’’ என்று செய்தி சில ஊடகங்களில் செய்தி வெளியானது. ஊழியர்களின் பணி தொடர்பான வழக்குகளுக்காக, மனுதாரரோ அல்லது வழக்கறிஞரோ சண்டிகர் தீர்ப்பாயத்துக்கு நேரில் ஆஜராக வேண்டியதில்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சண்டிகர் சரகம் எனக் குறிப்பிடப்பட்டது, மனுதாரர், வழக்கறிஞர் சண்டிகருக்கு செல்ல வேண்டும் எனத் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அது சரியல்ல. ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஊழியர்களின் பணி குறித்த அனைத்து விஷயங்களும் ஜம்மு காஷ்மீர் CAT அமர்விலேயே விசாரிக்கப்பட்டு பைசல் செய்யப்படும்.

ஜம்மு காஷ்மீரில் பணி புரியும் மத்திய அரசு ஊழியர்களின் பணி தொடர்பான பிரச்சினைகளும் ஜம்மு காஷ்மீர் CAT அமர்விலேயே விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என முன்பும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதேபோல, யூனியன் பிரதேசப் பணியாளர்களின் விஷயங்களும் ஜம்மு காஷ்மீர் CAT அமர்வில் விசாரிக்கப்படும் என்பது மட்டுமே இப்போது வேறுபாடு ஆகும். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் CAT அமர்வில் இனி அடிக்கடி விசாரணை நடைபெறும்.

வழக்குப் பதிவுகளும் உள்ளூர் அளவில் ஆன்லைன் மூலமாகவோ, அல்லது யூனியன் பிரதேச அரசு உரிய வசதிகளை அளிக்கும் போது, அமைக்கப்பட உள்ள CAT செயலக அலுவலகத்திலோ மேற்கொள்ளப்படும். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச CAT அமர்வு மூலம் வழக்குகள் விசாரிக்கப்படுவதால், நியாயமான, லட்சிய நோக்கத்துடனான நீதி பரிபாலனம் உறுதி செய்யப்படும்.

-------------



(Release ID: 1620070) Visitor Counter : 142