நிதி அமைச்சகம்

நிதி நிலைதன்மையை பாதுகாக்கவும் தேவைப்படுவோர் மற்றும் பின்தங்கியோர் கைகளில் பணம் இருக்க உதவவும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை அறிவித்தது இந்திய ரிசர்வ் வங்கி

கோவிட்-19 தொற்று சமாளிக்க மேலும் கடன் வாங்க மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு அனுமதி

ரிவர்ஸ் ரெபோ விகிதம் 4.0 சதவீதத்தில் இருந்து 3.75% சதவீதமாக குறைப்பு
வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கும் ரியல் எஸ்டேட் துறைக்கும் நிவாரணம்

நாம் குணப்படுத்துவோம் மற்றும் தாங்குவோம், இந்தியா வளர்ச்சிப் பாதைக்கு மாறி 2021–22 நிதி ஆண்டில் 7.4% ஆக வளர்ச்சி விகிதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது: ரிசர்வ் வங்கி ஆளுநர்

Posted On: 17 APR 2020 3:33PM by PIB Chennai

"இறப்புக்கு நடுவில் வாழ்க்கை தொடர்கிறது, பொய்க்கு நடுவில் உண்மை தொடர்கிறது, இருளுக்கு நடுவில் வெளிச்சம் தொடர்கிறது." – அக்டோபர் 1931ல் தன்னுடைய புகழ்பெற்ற லண்டன் கிங்ஸ்லே ஹால் உரையில் மகாத்மா காந்தி.

போராடிக்கொண்டிருக்கும் இந்திய பொருளாதாரத்தை புத்தாக்கம் பெறச் செய்ய ஒன்பது நடவடிக்கைகள் கொண்ட அறிவிப்பை வெளியிட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், மகாத்மா காந்தியின் இந்த வரிகளோடு தன் உரையை தொடங்கினார். இது, மார்ச் 27 தேதி அன்று ரிசர்வ் வங்கி அறிவித்த நடவடிக்கைகளின் தொடர்ச்சி ஆகும். ஆன்லைன் உரை மூலம் அறிவிப்புகளை வெளியிட்ட ஆளுநர், "உலகை தன் கொலைகார அணைப்பின் பிடியில் வைத்துள்ள" கோவிட்–19 பெரும் தொற்றை வெற்றி கொள்ளலாம் என்னும் உறுதியால், மனித நம்பிக்கை ஒளியூட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

கீழ்கண்டவற்றை எதிர்நோக்கி இந்த கூடுதல் நடவடிக்கைகள் அமைந்திருப்பதாக இந்தியரிசர்வ் வங்கியின் ஆளுநர் தெரிவித்தார்:

* கோவிட் 19 தொடர்பான சீர்குலைவின் போது, அமைப்பிலும் அதன் அங்கங்களிலூம் பணப்புழக்கத்தை பராமரிக்க

* வங்கி கடன் ஓட்டத்தை எளிதாக்கவும் ஊக்குவிக்கவும்

* நிதி அழுத்தத்தை எளிதாக்க,

* சந்தைகளை இயல்பாக செயல்பட வைக்க

பெரும் தொற்று விடுத்துள்ள கடினமான சவால்களை சமாளிக்க, தனது அனைத்து கருவிகளையும் மத்திய வங்கி பயன்படுத்தும் என்று ஆளுநர் தெரிவித்தார். அனைத்து பங்குதாரர்களையும், குறிப்பாக பின் தங்கியுள்ளோரையும் பாதிக்கப்படக்கூடியவர்களையும், நிதி ஓட்டம் அடைய செய்ய வைப்பதே தலையாய நோக்கம் என அவர் குறிப்பிட்டார். தேசம் ஒன்றுபட்டு இந்த நிலைமையைத் தாங்கி, குணப்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் இன்று வெளியிட்ட ஒன்பது அறிவிப்புகளின் கண்ணோட்டம் இதோ. ஆளுநரின் முழு அறிக்கையை இங்கே <சுட்டி> படிக்கலாம்.

பணப்புழக்க மேலாண்மை

1) இலக்கிடப்பட்ட நீண்ட கால செயல்பாடுகள் (டி எல் டி ஆர் )  2.0

ஆரம்ப மதிப்பீட்டு தொகையான ரூ 50,000 கோடி அளவில் இரண்டாம் கட்ட இலக்கிடப்பட்ட நீண்ட கால செயல்பாடுகள் (டி எல் டி ஆர் 2.0) நடத்தப்படும். கோவிட்-19 ஏற்படுத்தியுள்ள இடர்பாடுகளால் பெரிதும் பாதிப்படைந்துள்ளவங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு  பொருளுதவி நிறுவனங்கள் (மைக்ரோ ஃபைனான்ஸ்) உட்பட சிறு மற்றும் மத்திய தர பெருநிறுவனங்களுக்கு நிதி ஓட்டத்தை உறுதி செய்ய இது செய்யப்படுகிறது. வங்கிகளால் டி எல் டி ஆர்  2.0வின் கீழ் பெறப்படும் நிதி, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் பத்திரங்கள், வணிக பத்திரங்கள், மாற்ற முடியாத கடனீட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட வேண்டும். பெறப்பட்டமொத்த பணத்தில் குறைந்தது 50 சதவீதாமாவது நடுத்தரவங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு பொருளுதவி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டும்.

2) அனைத்திந்திய நிதி நிறுவனங்களுக்கு மறுநிதியுதவி வசதிகள்

தங்கள் துறைகள் சார்ந்த நிதித் தேவைகளை பூர்த்தி செய்ய தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு), இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி (சிட்பி) மற்றும் தேசிய வீட்டு வசதி வங்கி (என் எச் பி) ஆகியவற்றுக்கு சிறப்பு மறுநிதியுதவி வசதிகளாக ரூ.50,000 கோடி வழங்கப்படும். இது, மண்டலகிராமப்புற வங்கிகள் (ஆர் ஆர் பி), கூட்டுறவு வங்கிகள் மற்றும் சிறு பொருளுதவி நிறுவனங்களுக்கு மறுநிதியுதவி அளிப்பதற்காக நபார்டுக்கு ரூ.25,000 கோடி; கடன் / மறுநிதியுதவிக்காக சிட்பிக்கு ரூ.15,000 கோடி; மற்றும் வீட்டு வசதி நிதியுதவி நிறுவனங்களுக்கு ஆதரவளிக்க தேசிய வீட்டு வசதி வங்கிக்கு ரூ 10,000 கோடியை உள்ளடக்கியதாகும்.

கோவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள கடின நிதி நிலைமையினால் சந்தைகளில் இருந்து நிதிகளைப் பெற இந்த நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு இந்த வசதிகள் அளிக்கப்படுகின்றன. இவர்களிடம் இருந்து கடன் பெறுபவர்கள், குறைந்தவட்டியில் கடன் பெற வழி செய்யும் விதமாக, இந்த வசதியின் கீழ் முன்பணத்துக்கு, வாங்கும் போதுள்ளஇந்திய ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதங்கள் படி கட்டணம் வசூலிக்கப்படும் என ஆளுநர் கூறினார்.

3) பணப்புழக்க சீர்படுத்துதல் வசதியின் கீழ் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு

உபரி பணத்தை, முதலீடுகளிலும், பொருளாதாரத்தின் ஆக்கப்பூர்வ துறைகளிலும் செலுத்த வங்கிகளை ஊக்கப்படுத்த, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 4.0 சதவீதத்திலிருந்து 3.75 சதவீதமாக 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.

அரசின் நீடித்தசெலவுகளாலும், இந்திய ரிசர்வ் வங்கி எடுத்த பல்வேறு பணப்புழக்க அதிகரிப்பு நடவடிக்கைகளாலும் கணிசமாக உயர்ந்துள்ளவங்கிகள் அமைப்பின் உபரி பணப்புழக்கமே இந்த முடிவின் பின்னணி என்று ஆளுநர் விளக்கமளித்தார்.

4) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வழிகள் மற்றும் முறைகள் முன்பண அளவை அதிகரித்தல்

கோவிட்-19 தொற்று தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்களுக்கு பெரிய வசதியை அளிக்கவும், அவற்றின் சந்தையில் கடன் வாங்கும் செயல்களை நன்றாக திட்டமிட்டுக்கொள்ள உதவி செய்யவும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வழிகள் மற்றும் முறைகள் முன்பண  அளவு 60 சதவீதத்துக்கும் அதிகமாக மார்ச் 31 ம் தேதியின்படி அதிகரிக்கப்பட்டுள்ளது.

வழிகள் மற்றும் முறைகள் முன்பணம்  எனப்படுவது வரவு மற்றும் செலவுகளில் ஏற்படும் தற்காலிக குறைபாடுகளை எதிர்கொள்ள அரசுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன் வசதிகள் ஆகும். உயர்த்தப்பட்ட வரம்பு செப்டம்பர் 30ம் தேதி வரை அமலில் இருக்கும்.

ஒழுங்குமுறை நடவடிக்கைகள்

இந்திய ரிசர்வ் வங்கியால் மார்ச் 27ம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, கடனாளிகளின் சுமையை குறைக்க கூடுதல் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை பெரும் தொற்றை கருத்தில் கொண்டு வங்கி அறிவித்தது.

5) சொத்து வகைப்பாடு

செயல்படாத சொத்துக்களை பொறுத்தவரை, செயல்படாத சொத்துக்களாக வகைப்படுத்தும் போது, இந்திய ரிசர்வ் வங்கியின் மார்ச் 27ம் தேதியிட்ட அறிவிப்பின் படி கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தடைக்காலம் கருத்தில் கொள்ளப்பட மாட்டாதெனெ மத்திய வங்கி முடிவெடுத்துள்ளது. அதாவது, மார்ச் 1ம் தேதியின் படி, வங்கிகளால் தடை அல்லது தாமதம் அனுமதிக்கப்பட்டுள்ள கணக்குகளுக்கு 90 நாள் செயல்படாத சொத்துக்களாக வகைப்படுத்தும் விதியிலிருந்து விலக்களிக்கப்படும். அத்தகையகணக்குகளுக்கு மார்ச் 1ல் இருந்து மே 31 வரை சொத்து வகைப்படுத்துதல் நிறுத்தி வைக்கப்படும் என்பது இதன் பொருளாகும். பரிந்துரைக்கப்பட்ட கணக்கிடுதல் தரநிலைகளின் படி வங்கி சாரா நிதி நிறுவனங்கள் இந்த நிவாரணத்தை கடனாளிகளுக்கு அளிக்கலாம்.

அதே சமயம், வங்கிகளுக்கு போதுமான வசதிகளை அளிப்பதற்காக, மேற்கண்டவாறு நிறுத்தி வைப்பில் உள்ள கணக்குகளுக்கு 10 சதவீதம் அதிகமாகப் பராமரிக்குமாறு வங்கிகள் கேட்டுக்கொள்ளப் பட்டிருக்கின்றன.

6) தீர்மான காலம் நீட்டிப்பு

செயல்படாத சொத்துகளாகும் சாத்தியம் உள்ள அழுத்தம் மிக்க சொத்துகள் அல்லது கணக்குகளை வகைப்படுத்தும் போது ஏற்படும் சவால்களை கருத்தில் கொண்டு, தீர்மான திட்டத்தை நடைமுறைப்       படுத்தும் காலம் 90 நாட்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்சமயம், தவறிய தேதியில் இருந்து 210 நாட்களுக்குள் தீர்மான திட்டம் செயல்படுத்தபடவில்லை என்றால், வணிக வங்கிகளும் இதர நிதி நிறுவனங்களும் 20 சதவீதம் கூடுதல் ஏற்பாட்டை வைத்துக்கொள்ள வேண்டும்.

7) ஈவுத்தொகை விநியோகம்

நிதி ஆண்டு 2019-20 தொடர்பான லாபத்தில் இருந்து மேற்கொண்டு எந்த ஈவுத்தொகை செலுத்துதலையும் பட்டியலிடப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் செய்யக்கூடாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது; 2019-20 நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டின் இறுதியில் வங்கிகளின் நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு ஆய்வு செய்யப்படும். வங்கிகளின் முதலீட்டை பாதுகாப்பதன் மூலம் அவற்றின் பொருளாதாரத்தை ஆதரிக்கும் திறனை தக்கவைத்துக் கொள்ளவும், உயர்ந்த நிலையில்லாத்தன்மை உள்ள சூழ்நிலையில் நஷ்டங்களை உள்வாங்கிக் கொள்ளவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

8) பணப்புழக்க பாதுகாப்பு விகிதத் தேவையைக் குறைத்தல்

தனிப்பட்ட நிறுவனங்களின் பணப்புழக்க நிலையை மேம்படுத்த, பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் பணப்புழக்க பாதுகாப்பு விகிதத் தேவை 100 சதவீததில் இருந்து 80 சதவீதமாக உடனடியாக குறைக்கப்பட்டுள்ளது. இது இரண்டு கட்டங்களில் படிப்படியாக பழைய நிலைக்குக் கொண்டு வரப்படும் (அக்டோபர் 1 முதல்  90 சதவீதம் மற்றும் ஏப்ரல் 1 முதல் 2021ல் 100 சதவீதம்).

9) வணிக கட்டுமானத் திட்டங்களுக்கு வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கடன்கள்

வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக, வணிக கட்டுமான திட்டங்களுக்கு கடனளிக்கும் வணிக செயல்பாடுகள் ஆரம்பிக்கும் தேதி தொடர்பான வழிமுறை, வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய விதிமுறைகளின் படி, வணிக கட்டுமான திட்டங்களின் கடன்கள் தொடர்பான வணிக செயல்பாடுகள் ஆரம்பிக்கும் தேதி, அவற்றை செயல்படுத்துவோரின் கட்டுப்பாட்டை தாண்டிய காரனங்களுக்காக கூடுதலாகஒரு வருடம் நீட்டிக்கப்படலாம். இது, மறுசீரமைப்பாக கணக்கில் கொள்ளாமல், சாதாரணமாக வழங்கப்படும் ஒரு வருடநீட்டிப்பை விட அதிகமாகும்.

நடப்பு பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, குறிப்பான சில துறைகளில் பெரும் பொருளாதாரம் மற்றும் நிதி நிலப்பரப்பு பாதிப்படைந்திருந்தாலும், வேறு சிலவற்றில் வெளிச்சம் தைரியமாக மின்னுவதாக, ஆளுநர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் உலகவளர்ச்சி எதிர்ப்பார்ப்புகளின் படி, உலக நிதி நெருக்கடியை விட மோசமான, பெரும் நெருக்கடிக்கு பிறகான மோசமான நெருக்கடியில் உலக பொருளாதாரம் சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், நேர்மறை வளர்ச்சி எதிர்பார்க்கப்படும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும் (1.9 சதவீதத்தில்), ஜி 20 பொருளாதாரங்களில் இது தான் அதிகமான வளர்ச்சி என அவர் தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புகள் பற்றி பேசும் போது, இந்த நடவடிக்கைகள் பணப்புழக்கத்தை அதிகரித்து, கடனுதவி வழங்குவதையும் அதிகரிக்கும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்த நடவடிக்கைகள், சிறுவணிகர்கள், சிறு குறு தொழில் செய்பவர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு பயனளிக்கும். மாநில அரசுகளுக்கு உதவும், என்றும் தெரிவித்துள்ளார்.

***



(Release ID: 1615484) Visitor Counter : 656