ரெயில்வே அமைச்சகம்

கோவிட்-19 தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் சுகாதார நிபுணர்களின் பாதுகாப்புக்கு ஊக்கமளிக்க 30,000க்கும் அதிகமான பிபிஇ உபகரணங்களைத் தயாரிக்க இந்திய ரயில்வே திட்டம்

Posted On: 15 APR 2020 2:23PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றால் பாதித்த நோயாளிகள் இடையே, நேரடியாகப் பணியாற்றி வரும் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாக்கும் பிபிஇ எனப்படும் தனிநபர் பாதுகாப்பு கருவிகளை இந்திய ரயில்வேயின் உற்பத்தி பிரிவுகள், பணிமனைகள் மற்றும் தொழில் பிரிவுகள் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன.

இந்திய ரயில்வே, ஏப்ரல் மாதத்தில் 30,000க்கும் அதிகமான பிபிஇ உபகரணங்களைத் தயாரிக்கும். மே மாதத்தில் 1,00,000 கருவிகளைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, மாதிரி கருவிகள், குவாலியரில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட டி ஆர் டி ஓ ஆய்வுக்கூட பரிசோதனையில், உயர்தர மதிப்பீட்டைப் பெற்றுள்ளன.

பிபிஇ கருவிகள் தேவையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், வடக்கு ரயில்வேயின் ஜகதாரி பணிமனை, இதன் மாதிரி உபகரணத்தை வடிவமைத்து, தயாரிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதுபோன்ற மாதிரி கருவிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும், குவாலியரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஆய்வுக்கூடத்தில் இவை பரிசோதிக்கப்பட்டன. ஆய்வுக்கூடம் நடத்திய அனைத்து சோதனைகளிலும் இந்த உபகரணம் உயர் தரத்துடன் உள்ளது.

இந்த ஏப்ரல் மாதத்தில் 30,000க்கும் அதிகமான கருவிகளைத் தயாரிப்பதற்குத் தேவையான போதிய மூலப்பொருட்களை இந்திய ரயில்வே கொள்முதல் செய்து, அதன் பணிமனைகளுக்கும் ,இதர தொழில் பிரிவுகளுக்கும் விநியோகிக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.



(Release ID: 1614725) Visitor Counter : 228