விவசாயத்துறை அமைச்சகம்

ஊரடங்கின் போது விரைவில் அழுகும் பொருட்களை மாநிலம் விட்டு மாநிலம் எடுத்துச் செல்ல உதவும் வகையில் அனைத்திந்திய வேளாண் போக்குவரத்து அழைப்பு மைய எண்கள் 18001804200 மற்றும் 14488 ஆகியவற்றை மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார்

Posted On: 15 APR 2020 1:28PM by PIB Chennai

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல்வாழ்வு அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் இன்று கிருஷி பவனில் நடந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய வேளாண் போக்குவரத்து அழைப்பு மையத்தைத் தொடங்கி வைத்தார். கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள தற்போதைய சூழலில் விரைவில் அழுகிப்போகும் பொருள்களை மாநிலம் விட்டு மாநிலம் எடுத்துச் செல்வதற்கு இந்த அழைப்பு மையம் உதவும்.  இந்த அழைப்பு மையத்தின் தொலைபேசி எண்கள் 18001804200 மற்றும் 14488  ஆகும். இரவு, பகல் என எந்த நேரத்திலும் எந்த மொபைல் ஃபோன் அல்லது லேன்ட்லைன் ஃபோனில் இருந்தும் இந்த அழைப்பு மைய எண்களை அழைக்கலாம்.

காய்கறிகள், பழங்கள் போன்ற விரைவில் அழுகக் கூடிய பொருள்கள் மற்றும் விதைகள், பூச்சிக்கொல்லிகள், உரம் முதலான விவசாய உள்ளீட்டுப் பொருள்களை ஒரு மாநிலத்தில் இருந்து அடுத்த மாநிலத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதற்காக இந்திய அரசின் வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நல்வாழ்வுத் துறை (DAC&FW),  எடுத்துள்ள புதிய முன்னெடுப்பு நடவடிக்கையாக இந்த அனைத்திந்திய வேளாண் போக்குவரத்து அழைப்பு மையம் விளங்குகிறது. இந்த அழைப்பு மையம் 24x7 மணிநேர சேவையை அளிக்கிறது.

வேளாண் பொருள்கள், தோட்ட விளைபொருள்கள் அல்லது அழுகக்கூடிய எந்த ஒரு பொருள் மற்றும் விதைகள், உரங்கள் ஆகியவற்றை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு எடுத்துச் செல்வதில் சிக்கல்களை எதிர்கொள்கின்ற ட்ரக் ஓட்டுநர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள், வர்த்தகர்கள், சில்லறை வியாபாரிகள், வாகனஉரிமையாகளர்கள். விவசாயிகள், உற்பத்தியாளர்கள் அல்லது இதனோடு தொடர்புடைய எந்த ஒரு பங்குதாரரும் இந்த அழைப்பு மையத்தை உதவிக்காக அழைக்கலாம்.  அழைப்பு மைய நிர்வாகிகள் வாகனம், சரக்கு பற்றிய விவரங்கள், எந்தவிதமான உதவி தேவை என்பது பற்றிய தகவல்களை மாநில அரசின் அதிகாரிகளுக்கு பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்காக அனுப்பி வைப்பார்கள்.

இந்த அழைப்பு மையத்தை இஃப்கோ கிசான் சஞ்சார் லிமிடெட் (IKSL) நிறுவனமானது ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் இருந்து இயக்குகிறது.  தொடக்கநிலையில் இந்த அழைப்பு மைய தொலைபேசி எண்களை வாடிக்கையாளர் சேவை நிர்வாகிகள் 10 பேர் தலா 8 மணி நேரம் கொண்ட மூன்று ஷிப்ட்டுகளில் 24 மணி நேரமும் நிர்வகிப்பார்கள். தேவைகளுக்கு ஏற்ப இந்த அழைப்பு மையமானது 20 நிர்வாகிகள் கொண்ட முழுத் திறனுக்கு படிப்படியாக மேம்படுத்தப்படும்.  அழைப்பு மைய நிர்வாகிகள் அழைப்புகள் குறித்த ஆவணங்களைப் பராமரிப்பதோடு, பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவா என்பதையும் சரி பார்ப்பார்கள். 



(Release ID: 1614722) Visitor Counter : 225