சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நோவல் கொரோனா வைரஸ் (கோவிட் 19) குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள், கூடுதல் தயாரிப்புகள் பற்றி டாக்டர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்தார்

“அர்ப்பணிப்பு நிறைந்த குழுக்கள் தனிமைப்படுத்தப்படும் இடங்களைப் பார்வையிட்டு தொடர்ச்சியான முறையில், மதிப்பீடு செய்வதோடு கண்காணித்தும் வருகின்றன”’

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAR 2020 3:24PM by PIB Chennai

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலைமையில் புதுதில்லியில் இன்று உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.  இதில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், சஃப்தர்ஜங், டாக்டர் ஆர் எம் எல் மருத்துவமனை, எய்ம்ஸ் போன்ற மத்திய அரசு மருத்துவமனைகளின் இயக்குநர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 

இந்தக் கூட்டத்தில் மத்திய நிலையிலும், மாநிலங்கள் அளவிலும், பல்வேறு அமைச்சகங்கள், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் நெருக்கமான ஒத்துழைப்புடன் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் பற்றி மத்திய சுகாதார அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது.  கோவிட் 19-யைக் கட்டுப்படுத்துதல் மற்றும் நிர்வகித்தலுக்கான தயாரிப்புப் பணிகளுக்காகவும், நோய்த் தொற்றைத் தீவிரமாகக் கண்டறிதல் மற்றும் கண்காணிப்பதற்காகவும் மாநிலங்களை அவர் பாராட்டினார். 

புறநோயாளிப் பிரிவுகள், பரிசோதனை சாதனங்கள் இருப்பு, ஊழியர் பாதுகாப்பு சாதனங்கள், மருந்துகள், போதிய அளவில்  தனிமைப்படுத்தும் வார்டுகள் போன்றவை பற்றிய மருத்துவமனை நிர்வாகத்தின் தயாரிப்புப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.  சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வசதிகளைப் போதிய அளவு உறுதி செய்ய மருத்துவமனைகளுக்கு அவர் உத்தரவிட்டார்.  தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள்,  முகக்கவசங்கள், கைகழுவும் கிருமிநாசினிகள், கையில் பிடித்து சோதனை செய்யும் தெர்மாமீட்டர்கள் போன்றவை போதிய அளவு கொள்முதல் செய்யப்பட்டு தேவைக்கேற்ப சம்பந்தப்பட்ட இடங்களில் கிடைக்கச் செய்திருப்பதாகவும், எதிர்காலத்தில் ஏற்படும் தேவையை எதிர்கொள்ள இருப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சருக்குத் தெரிவிக்கப்பட்டது.

விமான நிலையங்கள் / மற்ற முக்கியமான போக்குவரத்து முனையங்கள் உள்ளிட்டவற்றிலிருந்து பிரித்துக் கொண்டு வரப்படும் பயணிகள், தனிமைப்படுத்தும் இடங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்ல போக்குவரத்து ஏற்பாடுகள் பற்றிய முழுமையான விவரங்களையும் டாக்டர் ஹர்ஷ்வர்தன் ஆய்வு செய்தார்.  தனித்து வைக்கப்படும் இடங்களில் தேவையான சாதனங்கள் மற்றும் இடவசதியை உறுதிசெய்ய, இவற்றைத் தொடர்ச்சியாக சோதிக்கவும், கண்காணிக்கவும் நியமிக்கப்பட்ட குழுக்களுக்கு அவர் உத்தரவிட்டார்.  இவற்றைப் பயன்படுத்தும் நோக்கத்துடன் ஒவ்வொரு நாளும் தாம் ஆய்வு செய்யவிருப்பதாகவும் அவர் கூறினார்.  சம்பந்தப்பட்ட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள நிலைமை குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.

நெருக்கடி நிர்வாகத்தின் கருவியாக உள்ள தகவல் தொடர்பின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்ட டாக்டர் ஹர்ஷ்வர்தன், தடுப்பு நடவடிக்கைகள், கற்பிதங்களை உடைத்தல், வழிகாட்டுதல்கள், அறிவுரைகள், பரிசோதனை நிலையங்கள் பற்றிய தகவல்களை மக்களுக்குத் தெரிவித்தல் போன்ற பலவகையான  அம்சங்களில் கவனம் செலுத்தி பன்முக ஊடகத் தகவல் பிரச்சாரம் செய்வதற்கு  அறிவுறுத்தினார். 

************

(Release ID: 1606891)

 


(வெளியீட்டு அடையாள எண்: 1606922) வருகையாளர் எண்ணிக்கை : 232
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada