பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - தென்கொரிய சிறப்பு கூட்டாண்மைக்கான கூட்டுத் தொலைநோக்குப் பார்வை

प्रविष्टि तिथि: 20 APR 2026 10:53PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், தென்  கொரியக் குடியரசின் அதிபர் திரு லீ ஜே மியுங் , 2026 ஏப்ரல் 19 முதல் 21 வரை இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது, ஒரு கொரிய அதிபர் பதவியேற்ற குறுகிய காலத்தில் இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணமாகும். அதிபர் லீ ஜே மியுங்குடன், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் கொரிய நிறுவனங்களின் முன்னணி தலைமைச் செயல் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் உடனிருந்தனர்.

இரு தலைவர்களும் 2026 ஏப்ரல் 20 அன்று புதுதில்லியில் ஒரு நட்பான, பயனுள்ள மற்றும் தொலைநோக்குடைய இருதரப்பு சந்திப்பை மேற்கொண்டனர்.  பரபரப்பான மற்றும் வேகமாக மாறிவரும் உலகில், தங்கள் மக்களுக்கு நீடித்த வளம், அமைதி மற்றும் முன்னேற்றத்தைக் கொண்டுவரவும், அவர்களிடையே அர்த்தமுள்ள ஒத்துழைப்பை வளர்க்கவும், பல்வேறு துறைகளில் உறுதியான வழிகளில் இணைந்து செயல்படுவதற்கான தத்தமது அரசுகளின் உறுதிப்பாட்டை அவர்கள் வலியுறுத்தினர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் (2026-2030) இந்தியா-கொரியக் குடியரசின் சிறப்பு உத்திசார் கூட்டாண்மையைச் செயல்படுத்துவதற்கும், அதற்கு மேலும் உள்ளடக்கங்களைச் சேர்ப்பதற்கும்  கூட்டுத் தொலைநோக்குப் பார்வையை அவர்கள் அறிவித்தனர்.

ஆசியாவின் இரண்டு துடிப்பான மற்றும் மீள்திறன் கொண்ட ஜனநாயக நாடுகளாகவும், உலகின் முன்னணிப் பொருளாதாரங்களாகவும் திகழும் இந்தியாவும் தென் கொரியாவும், ஆழமான வரலாற்றுப் பிணைப்புகளாலும், தங்கள் மக்களிடையே நிலவும் பரஸ்பர நல்லெண்ணத்தாலும் இணைக்கப்பட்டுள்ளன. இவ்விரு நாடுகளும் ஜனநாயக மற்றும் நாகரிக விழுமியங்களைப் பகிர்ந்துகொள்வதோடு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகளில் ஒத்த நலன்களையும் கொண்டுள்ளன. இந்தியா தனது கிழக்கு நோக்கிய கொள்கை”யில் தென் கொரியாவை ஒரு தவிர்க்க முடியாத நட்பு நாடாக கருதுகிறது. அதேபோல், தென் கொரியா தனது நடைமுறை சார்ந்த ராஜதந்திரம், புதிய தெற்குக் கொள்கையின் சாதனைகளைப் பெற்று அவற்றை மேம்படுத்தும் ஒரு மையத் தூணாக இந்தியாவைக் கருதுகிறது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை வளர்ப்பதில் தங்களது கூட்டாண்மையின் முக்கியப் பங்கை இந்தியாவும் தென் கொரியாவும் ஏற்றுக்கொள்கின்றன.

இனிவரும் காலங்களில் ஆண்டுதோறும் இரு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் அல்லது சர்வதேச நிகழ்வுகளுக்கிடையே தலைவர் மட்டத்திலான சந்திப்புகளை நடத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

இருதரப்பு ஈடுபாட்டிற்குப் புத்துணர்ச்சி அளித்துள்ள உயர் மட்டப் பரிமாற்றங்கள் குறித்து திருப்தி தெரிவித்த இரு தலைவர்களும், இருதரப்பு அரசியல் பரிமாற்றங்களையும் அமைச்சர்கள் மட்டத்திலான உரையாடல்களையும் மேலும் தீவிரப்படுத்த ஒப்புக்கொண்டனர். இதன் பொருட்டு, வெளியுறவு அமைச்சர்கள் தலைமையிலான இந்தியா-கொரியக் குடியரசு கூட்டுக் குழுவின் கூட்டங்கள், நிதி அமைச்சர்கள் கூட்டம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்களின் கூட்டுக் குழு ஆகியவை இந்த ஆண்டு நடத்தப்படும் எனத் தலைவர்கள் முடிவு செய்தனர். மேலும், கொரியப் போரில் இந்தியாவின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்டு வரும் போர் நினைவிடத்தின் கூட்டுத் திறப்பு விழாவிற்காக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் 2026-ம் ஆண்டு மே மாதம் கொரியக் குடியரசுக்கு பயணம் மேற்கொள்வார் என ஒப்புக்கொள்ளப்பட்டது.

 இந்தியா மற்றும் கொரியக் குடியரசின் அடுத்த தலைமுறை சிந்தனையாளர்களை நெருக்கமாக்கும் வகையில், இளம் சட்டமன்ற உறுப்பினர்கள், தூதர்கள், முக்கிய பிரமுகர்கள், ஊடகங்கள் மற்றும் அதிகாரிகள் ஒருவருக்கொருவர் பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த ஆண்டு முதல் இரு வெளியுறவு அமைச்சகங்களும் தத்தமது திட்டங்களையும் முயற்சிகளையும் தொடங்குவதை இரு தலைவர்களும் வரவேற்றனர்.

சமச்சீரான பிராந்திய வளர்ச்சி, எரிசக்தி  மற்றும் மறுமலர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, தங்கள் நாடுகளின் மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே அதிக பரிமாற்றங்களை இரு தலைவர்களும் ஊக்குவித்தனர். புசான்-மும்பை, இன்சியான்-கொல்கத்தா மற்றும் உல்சான்-சென்னை உள்ளிட்ட சகோதர நகர மற்றும் நட்பு நகர உறவுகளையும் இரு தலைவர்களும் குறிப்பிட்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2253977&reg=3&lang=1

***

SS/PKV/KR


(रिलीज़ आईडी: 2288737) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam