பிரதமர் அலுவலகம்
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல்கள் குறித்து மாநிலங்களவையில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
24 MAR 2026 2:49PM by PIB Chennai
மாண்புமிகு தலைவர் அவர்களே,
தற்போது மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் மற்றும் அதன் விளைவாக உருவாகியுள்ள சூழ்நிலைகளை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இன்று, நாடாளுமன்றத்தின் இந்த மேலவையிலும், எனது சக குடிமக்கள் முன்னிலையிலும், இந்த இக்கட்டான சூழல் குறித்த அரசின் நிலைப்பாட்டைப் பகிர்ந்துகொள்ள நான் நிற்கிறேன்.
இந்தப் போர் தற்போது மூன்று வாரங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து நீடித்து வருகிறது. இது உலகம் முழுவதும் கடுமையான எரிசக்தி நெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையிலும், இந்தச் சூழல் மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. நமது வர்த்தகப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் உரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் வழக்கமான விநியோகம் தடைபட்டுள்ளது.
சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வசித்து வருகின்றனர் மற்றும் அங்கு பணியாற்றி வருகின்றனர். அவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை உறுதி செய்வது இந்தியாவுக்குப் பெரும் கவலையளிக்கும் விஷயமாகும். ஹார்முஸ் ஜலசந்தியில் பல கப்பல்கள் சிக்கித் தவிக்கின்றன; அவற்றில் அதிக எண்ணிக்கையிலான இந்திய மாலுமிகள் உள்ளனர். இதுவும் இந்தியாவுக்கு மிகுந்த கவலை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகும். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், நாடாளுமன்றத்தின் இந்த மேலவையிலிருந்து அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கான ஒரு ஒருங்கிணைந்த குரல் ஒட்டுமொத்த உலகிற்கும் சென்றடைவது அவசியமாகும்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
யுத்தம் தொடங்கியதிலிருந்து, மேற்கு ஆசியாவின் பெரும்பாலான நாடுகளின் தலைவர்களுடன் நான் தொலைபேசி வாயிலாக இரண்டு முறை உரையாடியுள்ளேன். அனைத்து வளைகுடா நாடுகளுடனும் நாங்கள் தொடர்ச்சியான தொடர்பில் இருக்கிறோம். ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடனும் நாங்கள் தொடர்பில் உள்ளோம். பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் மூலம் இப்பகுதியில் அமைதியை மீட்டெடுப்பதே எங்களது இலக்காகும். பதற்றத்தைக் குறைப்பது குறித்தும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்தும் நாங்கள் அவர்களுடன் பேசியுள்ளோம். வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களும், ஹார்முஸ் நீரிணை போன்ற சர்வதேச நீர்வழிப் பாதைகளில் ஏற்படுத்தப்படும் தடைகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
பொதுமக்கள், பொது உள்கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி மற்றும் போக்குவரத்து தொடர்பான உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை இந்தியா எதிர்த்துள்ளது. இராஜதந்திர முயற்சிகள் மூலம், இத்தகைய போர் போன்றச் சூழலிலும் இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இந்தியா தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்குப் பேச்சுவார்த்தை ஒன்றே ஒரே வழி என்று இந்தியா பரிந்துரைத்துள்ளது. இந்தப் போரில் மனித உயிருக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் மனிதகுலத்தின் நலனுக்கு உகந்தது அல்ல. எனவே, அனைத்துத் தரப்பினரும் கூடிய விரைவில் ஒரு அமைதியான தீர்வை எட்டுவதற்கு ஊக்கப்படுத்துவதே இந்தியாவின் இடைவிடாத முயற்சியாகும்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
நெருக்கடியான காலங்களில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பே எங்களது முதன்மையான முன்னுரிமையாகும். போர் தொடங்கியதிலிருந்து, 3,75,000-க்கும் அதிகமான இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர். ஈரானில் இருந்து மட்டும், மருத்துவக் கல்வி பயிலும் 700-க்கும் மேற்பட்ட இளம் மாணவர்கள் உட்பட 1,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பியுள்ளனர். இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களது அரசு மிகுந்த உணர்திறனுடன் பணியாற்றி வருகிறது. அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு அனைத்து நாடுகளும் எங்களுக்கு உறுதி அளித்துள்ளன. இருப்பினும், தாக்குதல்களின் காரணமாகச் சில இந்தியர்கள் உயிரிழந்திருப்பதும், சிலர் காயமடைந்திருப்பதும் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. இத்தகைய கடினமான சூழ்நிலைகளில், அவர்களது குடும்பங்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
உலகளாவிய வர்த்தகத்தின் மிகப்பெரிய வழித்தடங்களில் ஒன்றாக ஹார்முஸ் நீரிணை விளங்குகிறது. குறிப்பாக, கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்கள் இப்பகுதியின் வழியாகவே பெருமளவில் கொண்டு செல்லப்படுகின்றன. போர் தொடங்கியதிலிருந்து, ஹார்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வது மிகுந்த சவாலான ஒன்றாக மாறியுள்ளது. இத்தகைய பாதகமான சூழ்நிலையிலும், எங்களது அரசு பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் மூலம் தீர்வுகளை உருவாக்க முயன்று வருகிறது. சாத்தியமான இடங்களிலிருந்தெல்லாம் இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கிடைப்பதை உறுதி செய்வதே எங்களது முயற்சியாகும். இந்த முயற்சிகளின் முடிவுகள் இப்போது நாட்டிற்குத் தெரியவருகின்றன. கடந்த சில நாட்களில், பல நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி ஏற்றி வந்த கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்துள்ளன. வரும் நாட்களிலும் இந்த திசையிலான எங்களது முயற்சிகள் தொடரும்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் கப்பல்கள் இந்தியாவைப் பாதுகாப்பாக வந்தடைவதை உறுதி செய்வதே இந்தியாவின் முயற்சியாகும். ஆனால், இந்தப் போரினால் ஏற்பட்டுள்ள உலகளாவியச் சூழல் நீண்ட காலத்திற்கு நீடித்தால், அதன் கடுமையான விளைவுகள் தவிர்க்க முடியாதவை. எனவே, கடந்த சில ஆண்டுகளில் இந்தியா மேற்கொண்டு வரும் தற்சார்பு மற்றும் மீண்டெழும் திறன் கொண்ட நடவடிக்கைகளை இப்போது மேலும் துரிதப்படுத்தி வருகிறது.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
ஒவ்வொரு நெருக்கடியும் நமது துணிச்சலையும் நமது முயற்சிகளையும் சோதிக்கிறது. இத்தகைய நெருக்கடிகளை நாடு சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், கடந்த 11 ஆண்டுகளாகத் தொடர்ச்சியான முடிவுகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எரிசக்தி இறக்குமதியைப் பன்முகப்படுத்துவது இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும். முன்னதாக, இந்தியா 27 நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய், எல்.என்.ஜி மற்றும் எல்.பி.ஜி ஆகியவற்றை இறக்குமதி செய்தது. இன்று, இந்தியா 41 நாடுகளிலிருந்து எரிசக்தியை இறக்குமதி செய்கிறது. கடந்த தசாப்தத்தில், நெருக்கடி காலங்களுக்காகக் கச்சா எண்ணெய் இருப்பை அதிகரிப்பதற்கும் இந்தியா முன்னுரிமை அளித்துள்ளது. எங்களது எண்ணெய் நிறுவனங்கள் அவசர காலங்களுக்காகப் பெட்ரோல் மற்றும் டீசலின் கணிசமான இருப்பைப் பராமரித்து வருகின்றன.
கடந்த 11 ஆண்டுகளில், 5.3 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான உத்திசார்ந்த பெட்ரோலிய இருப்பு உருவாக்கப்பட்டுள்ளது; மேலும் 6.5 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான இருப்பிற்கான ஏற்பாடுகளில் நாடு ஈடுபட்டுள்ளது. இதனுடன், கடந்த தசாப்தத்தில் இந்தியாவின் சுத்திகரிப்புத் திறனும் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உங்கள் வாயிலாக, இந்தியாவிற்குப் போதுமான கச்சா எண்ணெய் சேமிப்பும், தடையற்ற விநியோகத்திற்கான ஏற்பாடுகளும் உள்ளன என்பதை இந்த அவைக்கும் நாட்டிற்கும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
எந்தவொரு தனிப்பட்ட எரிபொருள் ஆதாரத்தையும் அளவுக்கு அதிகமாகச் சார்ந்து இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய எங்களது அரசு பாடுபட்டு வருகிறது. எல்.பி.ஜி-யுடன் சேர்த்து, வீடுகளுக்கான எரிவாயு விநியோகத்திற்காக பி.என்.ஜி இணைப்புகளையும் அரசு வலியுறுத்தி வருகிறது. கடந்த தசாப்தத்தில், பி.என்.ஜி இணைப்புகளை விரிவுபடுத்துவதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; கடந்த சில நாட்களில் இந்த முயற்சி மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில், உள்நாட்டு எல்.என்.ஜி உற்பத்தியை அதிகரிப்பதற்கான பெருமளவிலான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
கடந்த ஆண்டுகளில், ஒவ்வொரு துறையிலும் மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்காக அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. பெருகி வரும் தற்சார்பு நிலையே நமக்கான ஒரே வழியாகும். உதாரணமாக, இந்தியாவின் 90 சதவீதத்திற்கும் அதிகமான எண்ணெய் வெளிநாட்டுக் கப்பல்கள் மூலமே கொண்டு வரப்படுகிறது; இது போன்ற உலகளாவிய நெருக்கடி காலங்களில் இந்தியாவின் நிலையை இது இன்னும் தீவிரமாக்குகிறது. எனவே, 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் கப்பல்களைக் கட்டுவதற்காக சுமார் 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான பிரச்சாரத்தை அரசு தொடங்கியுள்ளது. இந்தியா இப்போது கப்பல் கட்டுதல், கப்பல் உடைத்தல், பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தல் ஆகியவற்றுக்கான வசதிகளை அதிவேகமாக மேம்படுத்தி வருகிறது.
இந்தியா தனது பாதுகாப்புத் துறையையும் அதிக மீண்டெழும் திறன் கொண்டதாக மாற்றி வருகிறது. கடந்த தசாப்தத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் காரணமாக, இந்தியா தனக்குத் தேவையான பெரும்பாலான ஆயுதங்களை இன்று உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறது. உயிர் காக்கும் மருந்துகளின் மூலப்பொருட்களான ஏ.பி.ஐ போன்றவற்றுக்காகக் கூட இந்தியா பிற நாடுகளைப் பெருமளவில் சார்ந்து இருந்த ஒரு காலம் இருந்தது. கடந்த ஆண்டுகளில், இந்தியாவிற்குள்ளேயே ஏ.பி.ஐ சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கு நாடு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதேபோல், அரிய மண் தாதுக்கள் இறக்குமதியில் வெளிநாட்டுச் சார்பைக் குறைப்பதற்கும் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
தற்போதைய நெருக்கடி உலகப் பொருளாதாரத்தையே உலுக்கியுள்ளது. மேற்கு ஆசியாவில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து உலகம் மீண்டு வர நீண்ட காலம் எடுக்கும். இந்தியாவிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் முடிந்தவரை குறைவாக இருப்பதை உறுதி செய்யத் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நமது பொருளாதாரத்தின் அடிப்படைக் கட்டமைப்புகள் வலுவாக உள்ளன; மேலும், வேகமாக மாறிவரும் சூழ்நிலையை அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட காலப் பாதிப்புகளைக் கையாள்வதற்கான உத்திகளுடன் அரசு செயல்பட்டு வருகிறது. அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது; இக்குழு நமது இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் எழும் ஒவ்வொரு சிக்கலையும் மதிப்பீடு செய்யத் தவறாமல் கூடுகிறது, மேலும் தேவையான தீர்வுகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
பெருந்தொற்று காலத்தில் வெவ்வேறு துறைகளில் உள்ள சவால்களை எதிர்கொள்ள நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட அதிகாரமளிக்கப்பட்ட குழுக்கள் (Empowered groups) அமைக்கப்பட்டது போலவே, நேற்றும் ஏழு புதிய அதிகாரமளிக்கப்பட்ட குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் விநியோகச் சங்கிலி, பெட்ரோல் மற்றும் டீசல், உரங்கள், எரிவாயு மற்றும் பணவீக்கம் போன்ற விவகாரங்களில் விரைவாகவும் வியூக ரீதியாகவும் செயல்படும். இந்த கூட்டு முயற்சிகளின் மூலம், நாம் இச்சூழ்நிலைகளை இன்னும் திறம்பட எதிர்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
வரவிருக்கும் விதைப்புப் பருவத்தில் விவசாயிகளுக்குப் போதுமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு பணியாற்றி வருகிறது. உரங்களின் போதிய விநியோகத்திற்காகத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எந்தவொரு நெருக்கடியின் சுமையும் விவசாயிகள் மீது விழக்கூடாது என்பதே அரசின் இடைவிடாத முயற்சியாகும். நாட்டின் ஒவ்வொரு சவாலுக்கும் தீர்வு காண்பதில் அரசு விவசாயிகளுடன் துணை நிற்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை அவர்களுக்கு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
இது மாநிலங்களின் அவை. வரவிருக்கும் காலங்களில், இந்த நெருக்கடியானது நமது நாட்டிற்கு ஒரு பெரிய சோதனையாக இருக்கும்; இதில் வெற்றிபெற மாநிலங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது. எனவே, இந்த அவையின் வாயிலாக அனைத்து மாநில அரசுகளுக்கும் சில கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறேன். நெருக்கடி காலங்களில் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர்ந்த தோழர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தின் பலன்கள் அவர்களைச் சரியான நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் எங்கு பணியமர்த்தப்பட்டிருந்தாலும், அவர்களின் சிரமங்களைக் குறைக்கத் துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இத்தகைய சூழ்நிலைகளைக் கண்காணிக்க மாநில அரசுகள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தால், அது அவர்களுக்குப் பெரும் நிவாரணமாக அமையும். மாநில அரசுகள் மற்றொரு சவாலிலும் கூர்மையான கவனம் செலுத்த வேண்டும்: இத்தகைய காலங்களில் கள்ளச் சந்தைப்படுத்துபவர்களும், பொருட்களைப் பதுக்குபவர்களும் மிகவும் தீவிரமாகச் செயல்படுவார்கள். இது போன்ற புகார்கள் எங்கு எழுந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்தியாவசியப் பொருட்களின் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்வதே ஒவ்வொரு மாநிலத்தின் முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
அனைத்து மாநில அரசுகளுக்கும் நான் மற்றொரு கோரிக்கையையும் விடுக்க விரும்புகிறேன். நெருக்கடி எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், இந்தியாவின் அதிவேக வளர்ச்சியைத் தக்கவைப்பது நமது கூட்டுப் பொறுப்பாகும். இதற்காக, தேவையான ஒவ்வொரு நடவடிக்கையும், ஒவ்வொரு சீர்திருத்தமும் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும். இது மாநில அரசுகளுக்கு ஒரு சிறந்த வாய்ப்புமாகும். இது 'டீம் இந்தியா'விற்கான ஒரு முக்கியச் சோதனையாகும். பெருந்தொற்று எனும் பெரும் நெருக்கடியின் போது, மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து கோவிட் மேலாண்மையில் ஒரு சிறந்த மாதிரியை உலகிற்கு முன்வைத்தன. வெவ்வேறு அரசியல் கட்சிகளின் ஆட்சிகள் இருந்தபோதிலும், பரிசோதனை, தடுப்பூசி செலுத்துதல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் ஆகியவை 'டீம் இந்தியா'வின் முயற்சிகளால் உறுதி செய்யப்பட்டன. நாம் அதே உணர்வுடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம், இந்தத் தீவிரமான உலகளாவிய நெருக்கடியை நாடு திறம்பட எதிர்கொள்ள முடியும்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
இந்த நெருக்கடி ஒரு மாறுபட்ட தன்மையைக் கொண்டது, இதற்கான தீர்வுகளும் ஒரு மாறுபட்ட முறையிலேயே தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சவாலையும் நாம் பொறுமையுடனும், கட்டுப்பாட்டுடனும், நிதானமான மனதுடனும் எதிர்கொள்ள வேண்டும்.
மாண்புமிகு தலைவர் அவர்களே,
நாம் காண்பது போல, இந்தப் போர் தொடர்பான சூழல் ஒவ்வொரு கணமும் மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே, எனது நாட்டு மக்களிடம் நான் கூற விரும்புவது என்னவென்றால், நாம் ஒவ்வொரு சவாலுக்கும் தயாராக இருக்க வேண்டும். இந்தப் போரின் மோசமான விளைவுகள் நீண்ட காலத்திற்கு நீடிப்பதற்கான வலுவான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஆனால், அரசாங்கம் விழிப்புடன் இருப்பதையும், தயாராக இருப்பதையும், ஒவ்வொரு அவசியமான முடிவையும் எடுத்து, முழுமையான தீவிரத்துடன் உத்திகளை வகுத்துச் செயல்பட்டு வருவதையும் நாட்டு மக்களுக்கு நான் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் நலனே நமக்கு முதன்மையானது. இதுவே நமது அடையாளம், இதுவே நமது பலம். இந்த உணர்வுடன், எனது உரையை நிறைவு செய்கிறேன்.
மிக்க நன்றி!
----
(Release ID: 2244396
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2282086)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam