பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி ஸ்லோவாக்கியா பிரதமருடன் சந்திப்பு
प्रविष्टि तिथि:
15 JUN 2026 5:40PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை, ஸ்லோவாக்கியா பிரதமர் திரு ராபர்ட் ஃபிகோ இன்று (15.06.2026) வரலாற்று சிறப்புமிக்க பிராட்டிஸ்லாவா கோட்டையில் உற்சாகமாக வரவேற்றார். பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு சம்பிரதாய முறைப்படியான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், தூதுக்குழு அளவிலும் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான பகிரப்பட்ட விழுமியங்களையும், காலத்தால் மாறாத நட்பையும் பிரதிபலிக்கும் வகையில், இருதரப்பு உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் விரிவான ஒத்துழைப்பு நிலைக்கு இருதரப்பு உறவு உயர்த்தப்பட்டதை அவர்கள் வரவேற்றனர்.
இரு பிரதமர்களும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, விண்வெளி, அணுசக்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், டிஜிட்டல் புத்தாக்கம், கல்விப் பரிமாற்றங்கள், கலாச்சாரம், வல்லுநர்கள் இடப்பெயர்வு உள்ளிட்ட இருதரப்பு உறவுகளின் முழு அம்சங்களையும் ஆய்வு செய்தனர். மேலும், புதிய, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு, சூப்பர் கம்ப்யூட்டர்கள் போன்ற புதிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகளையும் அவர்கள் ஆராய்ந்தனர்.
2025 ஏப்ரலில் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கு ஸ்லோவாக்கியா வழங்கிய ஆதரவிற்காக அந்நாட்டுப் பிரதமர் ஃபிகோவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். இது, பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் வெளிப்பாடுகளையும் எதிர்ப்பதில் இரு நாடுகளின் வலுவான உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது. இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். அவர்கள் பன்முகத்தன்மைக்கும், உலகளாவிய நிறுவனங்களின் சீர்திருத்தத்திற்கும் தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-ஐரோப்பிய யூனியன் உச்சி மாநாட்டின் ஊக்கமளிக்கும் முடிவுகள் குறித்து தலைவர்கள் திருப்தியை வெளிப்படுத்தினர். முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் குறிக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வெற்றிகரமாக முடிவடைந்ததையும், விரிவான உத்திசார் கூட்டு செயல்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதையும் அவர்கள் வரவேற்றனர்.
பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், தொழிலாளர் இடப்பெயர்வு, உயர்கல்வி, ஆராய்ச்சி, ஒலி-ஒளி உருவாக்கம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டன. பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான நோக்கக் கடிதமும் பரிமாறப்பட்டது. மேலும், கோசிஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் இந்தியா தனது முதல் செயற்கை நுண்ணறிவுப் பேராசிரியர் பதவியை நிறுவுவதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
அந்நாட்டுப் பிரதமர் திரு ஃபிகோ, பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு மரியாதை செலுத்தும் வகையில் மதிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்தியாவிற்கு வருகை தருமாறு ஸ்லோவாக்கியா பிரதமருக்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
(Release ID : 2273102)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2273306)
आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada