பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

‘இந்தியா சிப் லிமிடெட்’ நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 21 FEB 2026 7:29PM by PIB Chennai

உத்தரப் பிரதேச முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாவான திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு.ஜிதின் பிரசாதா அவர்களே, உத்தரப் பிரதேச அரசின் அமைச்சர்களே, ஃபாக்ஸ்கான் செமிகண்டக்டர் நிறுவனத்தின் வர்ததக குழும தலைவர் திரு. பாப் சென், ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் தலைவர் திரு. ரோஷ்னி நாடார் அவர்களே, இந்தத் திட்டத்தில் பங்கேற்றுள்ள தொழில்துறை தலைவர்கள், இதர முக்கியப் பிரமுகர்கள், பெரியோர்களே, தாய்மார்களே!

 

வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் இலக்கை நோக்கி இன்று இந்தியா மிக வேகமான பாதையில் பயணித்து வருகிறது. செங்கோட்டையிலிருந்து நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, இந்தியா ஓய்வெடுக்கவோ அல்லது தயங்கி நிற்கவோ நேரமில்லை. 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே, இந்தியா தனது வேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.

 

ஜனவரி 12 அன்று, நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்கள் ‘வளர்ச்சியடைந்த இந்தியா இளம் தலைவர்கள் கலந்துரையாடலில்’ இணைந்தனர்; 2026 ஜனவரி 16 அன்று, நாம் தேசிய புத்தொழில் தினத்தைக் கொண்டாடி, இந்தியாவின் புத்தொழில் புரட்சிக்கு புதிய ஆற்றலை வழங்கினோம். ஜனவரி மாதத்திலேயே நடைபெற்ற இந்திய எரிசக்தி உச்சிமாநாட்டில், இந்தியா தனது ஆற்றலால் உலகின் கவனத்தை ஈர்த்தது. அதன்பின், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் வரவு-செலவுத் திட்டம்  அமைந்தது. இப்போது இந்த வாரமும் இந்தியாவிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாரமாகத் திகழ்கிறது. உலகளாவிய செயற்கை நுண்ணறிவு  தாக்க உச்சிமாநாட்டில், உலகின் பல நாடுகளின் தலைவர்களும், தொழில்நுட்ப உலகின் முன்னோடிகளும் தில்லியில் ஒன்று திரண்டனர். இந்த உச்சிமாநாட்டில், இந்தியாவின்  செயற்கை நுண்ணறிவு திறனை உலகம் கண்டதுடன், நமது தொலைநோக்குப் பார்வையையும் பாராட்டியது.

 

நண்பர்களே,

 

இந்த உச்சிமாநாடு நேற்றுதான் நிறைவடைந்தது, அதற்குள் இந்தியாவின் செமிகண்டக்டர் சூழல் அமைப்பு  தொடர்பான இவ்வளவு பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக நாம் இப்போது இணைந்துள்ளோம்.

 

நண்பர்களே,

 

நவீன உலகத்தை இயக்குவதற்குத் தேவையான செயலாக்கத் திறனில் , உலகின் முன்னணி நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா இப்போது முயற்சி செய்து வருகிறது. அதாவது, மென்பொருள்  மற்றும் வன்பொருள்  ஆகிய இரண்டு அம்சங்களிலும் இந்தியா ஒரே நேரத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் செமிகண்டக்டர் சூழல் அமைப்பின் ஒரு பெரிய மையமாக உத்தரப் பிரதேசம் மாறப்போவது நம் அனைவருக்கும் பெருமைக்குரிய விஷயமாகும். ஹெச்.சி.எல் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்களின் இந்த புதிய தொழிற்சாலை, ஒரு தொழில்நுட்ப ஆற்றல் மையமாக உத்தரப் பிரதேசத்திற்கான அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும்.

 

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், இது எனக்குப் பெருமிதமான தருணமாகும். இந்த செமிகண்டக்டர் தொழிற்சாலையினால், உத்தரப் பிரதேச இளைஞர்களுக்கும், நாட்டின் இளைஞர்களுக்கும் பெருமளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும். ஏனெனில், ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்தின் பிரிவு எங்கே அமைக்கப்படுகிறதோ, அங்கேயே வடிவமைப்பு மையங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள்  மற்றும் புத்தொழில் சூழல் அமைப்புகள் உருவாகும். இவை அனைத்தும் இப்போது உத்தரப் பிரதேசத்திலும் நிகழப்போகின்றன. இதற்காக முதல்வர் திரு. யோகிஆதித்யநாத், அவரது குழுவினர் மற்றும் உத்தரப்பிரதேச மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

 

 

நான் அடிக்கடி ஒரு விஷயத்தைச் சொல்வேன், இந்த தசாப்தம் இந்தியாவின் தொழில்நுட்ப தசாப்தம். இந்தத் தசாப்தத்தில் தொழில்நுட்பத் துறையில் இந்தியா செய்யும் ஒவ்வொன்றும், 21ஆம் நூற்றாண்டில் நமது ஆற்றலுக்கான அடித்தளமாக அமையும். பசுமை எரிசக்தி, விண்வெளித் தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம், உற்பத்தித் தொழில்நுட்பம் அல்லது செயற்கை நுண்ணறிவு என எதுவாக இருந்தாலும், மனிதகுலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒவ்வொரு தொழில்நுட்பத்திலும் இந்தியா இன்று முன்னெப்போதும் இல்லாத முதலீடுகளைச் செய்து வருகிறது. இந்தியாவில் வலுவான செமிகண்டக்டர் சூழல் அமைப்பை உருவாக்குவதும் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். செமிகண்டக்டர் துறையில் இந்தியா தனது பயணத்தைத் தாமதமாகத் தொடங்கியிருக்கலாம், ஆனால் இன்று நாம் மிக வேகமான பாதையில் முன்னேறி வருகிறோம். அதன் செமிகண்டக்டர் திட்டத்தின் கீழ், இந்தியா இதுவரை 10 செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் நான்கு அலகுகள் மிக விரைவில் உற்பத்தியைத் தொடங்கவுள்ளன.

 

நண்பர்களே,

 

உங்களுக்குத் தெரியும், 21ஆம் நூற்றாண்டில், எந்தத் தேசத்திடம் கச்சா எண்ணெய் இருந்ததோ, அது செழிப்பையும் அதிகாரத்தையும் பெற்றது. ஆனால், 21ஆம் நூற்றாண்டில், அதே அதிகாரம் ஒரு சிறிய சிப் மற்றும் அதனுடன் தொடர்புடைய திறன் மற்றும் மூலப்பொருட்களிடம் உள்ளது. கொரோனா பெருந்தொற்றின் போது, ஒரு சிறிய சிப்பின் விநியோகச் சங்கிலி  எவ்வளவு பலவீனமாக இருந்தது என்பதை நாம் கண்டோம். அந்த நேரத்தில், சிப்களின் விநியோகம் தடைபட்டவுடன், உலகின் தொழிற்சாலைகள் முடங்கின, பொருளாதாரங்கள் சிதையத் தொடங்கின. அந்த நெருக்கடியிலிருந்து இந்தியா ஒரு பாடத்தைக் கற்றுக்கொண்டதுடன், அதை ஒரு வாய்ப்பாக மாற்றும் முயற்சியையும் தொடங்கியது. சிப் உற்பத்தியில் இந்தியா தற்சார்பு அடைய வேண்டும் என்று நாம் முடிவு செய்தோம். இதற்காக, இந்தியாவில் ஒரு செமிகண்டக்டர் சூழல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இன்றைய நிகழ்ச்சி அந்தத் தொலைநோக்குப் பார்வையின் பிரதிபலிப்பாகும்.

 

நண்பர்களே,

 

இந்தியா தற்சார்பு அடையும் போதுதான் 'வளர்ச்சியடைந்த இந்தியா'  உருவாக்கம் முழுமையடையும். இதற்காக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிப் உருவாவது மிகவும் முக்கியம். ஏனெனில், இந்தியாவின் சிப் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் போது, நமது நவீன உபகரணங்களின் உற்பத்திக்காக நாம் மற்றவர்களை எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. டிஜிட்டல் இந்தியா, செயற்கைநுண்ணறிவு, 5 ஜி - 6ஜி, மின்சார வாகனங்கள், பாதுகாப்புத் துறை என இன்று ஒவ்வொரு அத்தியாவசியப் பொருளின் ஆன்மாவாகவும் செமிகண்டக்டர் சிப் உள்ளது. நம்மிடம் சொந்தமாக சிப் இருக்கும்போது, ஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் வேகம் எந்தத் தடங்கலும் இன்றித் தொடரும்.

 

நண்பர்களே,

 

இன்று ஃபாக்ஸ்கான் போன்ற மாபெரும் நிறுவனங்கள் இந்தியாவிற்கு வருவதும், சிப் உற்பத்தியில் ஒத்துழைப்பதும் உலகளாவிய ஒரு செய்தியைத் தாங்கி நிற்கின்றன. இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாடு, உலகின் நம்பகமான பங்காளியாகத் திகழ்கிறது. எந்தவொரு மதிப்புச் சங்கிலியிலும் இந்தியாவின் பங்களிப்பு அதிகரிப்பது, அந்தச் சங்கிலியின் உறுதித்தன்மையை மேம்படுத்தும். எனவே, உலகின் தொழிற்சாலையாக இந்தியாவின் அடையாளம் உருவாவது, இந்தியாவிற்கும் உலகின் பிற நாடுகளுக்கும் ஒரு வெற்றிகரமான சூழலாகும்.

 

நண்பர்களே,

 

இன்று உலகம் இந்தியாவைத் தொழில்நுட்ப எதிர்காலத்தின் மையமாகப் பார்க்கிறது. இதற்கு ஒரு முக்கியக் காரணம் இந்தியாவின் திறமை. இந்தியா சிப் வடிவமைக்கும் திறமையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், செமிகண்டக்டர் தொடர்பான பிற திறன்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்திய அரசு ‘சிப் முதல் புத்தொழில் வரை’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. செமிகண்டக்டர் வடிவமைப்பில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்முறை வல்லுநர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில், இந்திய செமிகண்டக்டர் திட்டத்தின் இரண்டாம் கட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அனைத்து வகையான செமி கண்டக்டர் உற்பத்தி ஆலை  ,மேம்பட்ட பேக்கேஜிங் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான முழுமையான ஆதரவு அமைப்பு இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு வருகிறது. செமிகண்டக்டர் மற்றும் பேட்டரி உற்பத்திக்குத் தேவையான அரிய வகை தாதுக்களும்  மிகவும் அவசியமானவை. இதிலும் தற்சார்பு அடைவதற்காக இந்தியா பெரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டில் ‘அரிய வகை தாதுக்கள் தாழ்வாரங்கள்’  அமைக்கப்படும் என்று இந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது செமிகண்டக்டர் துறைக்கு ஒரு மிகப்பெரிய ஊக்கமாகும்.

 

நண்பர்களே,

 

கடந்த 11 ஆண்டுகளில், நாம் எதைச் செய்ய உறுதி பூண்டோமோ, அதை அடைந்து காட்டுவோம் என்பதை இந்தியா மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, நாடு இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்தை முன்னெடுத்த போது, சிலர் சந்தேகங்களையும் அச்சங்களையும் வெளியிட்டனர். ஆனால் இன்று, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் முன்முயற்சி ஒரு வலிமையான பிராண்டாக உருவெடுத்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், இந்தியாவில் மின்னணு சாதனங்கள் உற்பத்தி சுமார் ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. மின்னணு ஏற்றுமதியும் சுமார் எட்டு மடங்கு உயர்ந்துள்ளது. இதில் குறிப்பாக, மொபைல் போன் உற்பத்தி 28 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. நமது மொபைல் போன் ஏற்றுமதியில் நூறு மடங்குக்கும் மேலான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

நண்பர்களே,

 

இந்தியாவின் உற்பத்தித் துறை வெற்றியில் உத்தரப் பிரதேசம் ஒரு வலுவான தூணாக உருவெடுத்து வருவது எனக்கு மனநிறைவைத் தருகிறது. மொபைல் போன் உற்பத்தியைப் பற்றி மட்டும் சொன்னால், இன்று நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் உத்தரப் பிரதேசத்தில்தான் தயாரிக்கப் படுகின்றன. வரும் காலங்களில், உத்தரப் பிரதேசத்தின் இந்த ஆற்றல் மேலும் அதிகரிக்கப் போகிறது. ஏனெனில் இங்கு, செமிகண்டக்டர் சூழல் அமைப்புடன் சேர்த்து, மின்னணு உதிரிபாகங்களும்  தயாரிக்கப்பட உள்ளன. இது இங்கிருக்கும் இளைஞர்களுக்கு மிகப் பெருமளவில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

 

நண்பர்களே,

 

இன்று உத்தரப் பிரதேசம் அதன் உற்பத்தித் திறனுக்காகப் பேசப்படுகிறது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடுகள் இங்கு வருவதற்காகவும், புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதற்காகவும் உத்தரப் பிரதேசம் செய்திகளில் இடம்பிடிக்கிறது. ஆனால், சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, தவறான காரணங்களுக்காகவே உத்தரப்பிரதேசத்தின் பெயர் அடிபட்டது. இடப்பெயர்வு, பற்றாக்குறை, வசதிகள் இல்லாமை மற்றும் குற்றங்கள் - இவைதான் நாட்டின் மிகப்பெரிய மாநிலத்தின் துரதிர்ஷ்டம் என்பது போல் இருந்தது. உத்தரப்பிரதேச மக்கள் ‘இரட்டை எஞ்சின்’ அரசு மீது வைத்த நம்பிக்கையும், அவர்கள் மீண்டும் மீண்டும் வழங்கிய ஆசிகளும் இன்று நல்ல முடிவுகளைத் தந்து கொண்டிருப்பதை எண்ணி நான் பெருமிதம் கொள்கிறேன். இன்று உத்தரப் பிரதேசம் அதிவேக நெடுஞ்சாலைகளின் மாநிலமாக மாறியுள்ளது. உத்தரப் பிரதேசம் அதன் பாதுகாப்புத் துறை தாழ்வாரத்திற்காக விவாதிக்கப்படுகிறது. இன்று இந்தியாவிலும் உலகிலும் உள்ள மக்கள் உத்தரப் பிரதேசத்தை தங்களுக்குப் பிடித்தமான சுற்றுலாத் தலமாக மாற்றி வருகின்றனர்.

 

நண்பர்களே,

 

உத்தரப் பிரதேசத்தில் தாங்கள் செய்யும் முதலீட்டிற்கு மிகப்பெரிய லாபம் கிடைப்பது உறுதி என்பதை உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் அறிந்துள்ளனர், அதனால் அவர்கள் இன்று இங்கு வருகிறார்கள். பிரத்யேக சரக்கு போக்குவரத்து தாழ்வாரம்  மற்றும் ஜேவார் சர்வதேச விமான நிலையம் போன்ற நவீன இணைப்பு வசதிகள் இப்பகுதி முழுவதையும் வளர்ச்சியின் புதிய உயரங்களுக்கு இட்டுச் செல்கின்றன. நாளை, அதாவது ஞாயிற்றுக்கிழமை, தில்லி-மீரட் ‘நமோ பாரத்’ ரயில் பாதையை நான் தொடங்கி வைக்க உள்ளேன். இத்தகைய சிறந்த பணிகள் நடைபெறும் இடமான உத்தரப் பிரதேசம் நிச்சயமாக வளர்ச்சியடைந்த மாநிலமாக மாறும். ஹெச்.சி.எல் மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்களுக்கு நான் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செமிகண்டக்டர் அலகு உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சி வேகத்தை மேலும் துரிதப்படுத்தும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

 

உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது நல்வாழ்த்துகள்.

 

மிக்க நன்றி.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2231304&reg=3&lang=2

 

 செய்தி வெளியீட்டு எண்:2231304

TV/VK/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2235756) வருகையாளர் எண்ணிக்கை : 20