பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav AI Impact Summit 2026

இந்திய செயற்கைக்கோள் தாக்க உச்சிமாநாடு 2026-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

செயற்கை நுண்ணறிவுக்கு மானவ் என்ற தொலைநோக்குப் பார்வையை பிரதமர் முன்மொழிந்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 19 FEB 2026 11:36AM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இந்திய செயற்கைக்கோள் தாக்க உச்சிமாநாடு 2026-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் திரண்டிருந்தோர் இடையே உரையாற்றிய திரு மோடி, மனித குலத்தில் ஆறில் ஒரு பங்கினரை கொண்டுள்ள நாடாகிய இந்தியாவில் உலகின் மிகப்பெரியதும், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாடு நடைபெறுவதாக குறிப்பிட்டார். உலகின் மிகப்பெரிய இளையோர் மக்கள் தொகையின், மிகப்பெரிய தொழில்நுட்பத்திறன் தொகுப்பின் தாயகமாக விளங்கும் இந்தியா, தொழில்நுட்பம் சார்ந்த சூழல் அமைப்புக்காக பாடுபடுகிறது என்று அவர் கூறினார். இந்தியா புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது மட்டுமின்றி, முன் எப்போதும் இல்லாத வேகத்துடன் அவற்றை ஏற்கவும் செய்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ள உலகத் தலைவர்கள், உலகளாவிய ஏஐ சூழல் அமைப்பின் தலைவர்கள், புதிய கண்டுபிடிப்பாளர்கள் ஆகியோரை 140 கோடி இந்திய மக்களின் சார்பில் வரவேற்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்தியாவில் இத்தகைய உச்சிமாநாடு நடைபெறுவது நாட்டிற்கு பெருமை சேர்ப்பது மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகளாவிய தெற்கு நாடுகளுக்கும் பெருமை சேர்ப்பது என்று அவர் கூறினார்.

உலகம் முழுவதிலும் இருந்து தலைசிறந்த நிபுணர்களின் பங்கேற்புடன் சுமார் 100 நாடுகளின் பிரதிநிதிகளும் வருகை தந்துள்ள இந்த உச்சி மாநாட்டின் வெற்றி புதிய உச்சங்களைத் தொடும் என்று குறிப்பிட்ட திரு மோடி, இளைய தலைமுறையின் வலுவான பங்கேற்பு, புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக கூறினார். வேளாண்மை, பாதுகாப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி ஆகிய துறைகளில் தீர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை எடுத்துரைத்த அவர், செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவின் புத்தாக்க திறன்களையும் இது வெளிப்படுத்துவதாக கூறினார்.

மனிதகுல வரலாற்றில் சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை திருப்பங்கள் ஏற்படுவதாகவும், அவை நாகரீகத்தில் புதிய திசைகளை ஏற்படுத்துவதாகவும் பிரதமர் தெரிவித்தார். கற்களில் இருந்து முதல்முறையாக தீப்பொறி உருவாக்கப்பட்டதை நினைவு கூர்ந்த அவர், அந்த தீப்பொறி நாகரீகத்திற்கு அடித்தளமாக மாறும் என்று அப்போது எவரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள் என்றார். பேச்சுவழக்கில் இருந்த மொழி, எழுத்து வடிவத்திற்கு முதல்முறையாக மாறிய போது, எழுத்துப்பூர்வமான அறிவு, எதிர்கால அமைப்பு முறைகளுக்கு முதுகெலும்பாக மாறும் என்பதை எவரும் உணர்ந்திருக்க மாட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார். கம்பியில்லா சமிக்ஞை முறைகள் முதலில் உருவாக்கப்பட்ட போது, ஒரு நாளில் ஒட்டுமொத்த உலகமும் நிகழ்நேரத்தில் இணைக்கப்படும் என்பதை எவரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

அணுசக்தி கண்டறியப்பட்ட பின், அதன் அழிவு சக்தியையும், ஆக்கப்பூர்வமான பங்களிப்புகளையும் மனிதகுலம் கண்டது. இதேபோல், செயற்கை நுண்ணறிவும் மாற்றத்திற்கானது என்று உறுதிப்பட தெரிவித்த பிரதமர், சரியான திசையில் இது செல்லாவிட்டால், இடையூறுகளுக்கு வழிவகுக்கும் என்றும், சரியான திசையில் சென்றால் இது சிறந்த தீர்வாக இருக்கும் என்றும் கூறினார். செயற்கை நுண்ணறிவு எந்திரத்தை மையமாக கொண்டிருப்பதை விட, மனிதர்களை மையமாகக் கொண்டிருப்பது எவ்வாறு என்பதற்கான கருத்துகளை உருவாக்குவது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டின் முக்கிய நோக்கம் என்பதை திரு மோடி எடுத்துரைத்தார்.

அனைவருக்கும் நல்வாழ்வு, அனைவரின் மகிழ்ச்சி என்ற உச்சிமாநாட்டின் மையப்பொருள் செயற்கை நுண்ணறிவு குறித்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை தெளிவாக பிரதிபலிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். மனிதர்கள் வெறுமனே, செயற்கை நுண்ணறிவுக்கு தரவு முனையங்களாகவும், கச்சா பொருட்களாகவும் மாறிவிடக் கூடாது என்று எச்சரித்த அவர், செயற்கை நுண்ணறிவு ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என்றார்.  செயற்கை நுண்ணறிவு அனைவரையும் உள்ளடக்கியதாக அதிகாரம் அளிப்பதற்கான ஊடகமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

புதுதில்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சிமாநாட்டில் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையாக மானவ் (எம்.ஏ.என்.ஏ.வி) என்பதைப் பிரதமர் முன்வைத்தார். இதற்கான விளக்கத்தையும் அவர் அளித்தார்.

எம் என்பது நீதி மற்றும் நெறிமுறைகளைக் குறிக்கும்

ஏ என்பது கடமைப் பொறுப்புள்ள நிர்வாகத்தைக் குறிக்கும்

என் என்பது தேசத்தின் இறையாண்மையைக் குறிக்கும்

ஏ என்பது எளிதில் அணுகக் கூடியதையும், அனைவரையும் உள்ளடக்கியத்தையும் குறிக்கும்

வி என்பது சரிபார்க்கக் கூடியது மற்றும் சட்டப்பூர்வமானது என்பதைக் குறிக்கும்

இந்தியாவின் மானவ் என்ற தொலைநோக்குப் பார்வை 21-ம் நூற்றாண்டில் செயற்கை நுண்ணறிவால் செயல்படும் உலகில் மனிதகுலத்தின் நல்வாழ்வுக்கான முக்கிய இணைப்பாக மாறும் என்று அவர் உறுதிப்பட தெரிவித்தார்.

சில பத்தாண்டுகளுக்கு முன் இணையதளம் தொடங்கிய போது, எவ்வளவு வேலைவாய்ப்புகளை அது உருவாக்கும் என்று யாரும் கற்பனை செய்திருக்க முடியாது என்று குறிப்பிட்ட திரு மோடி, அதே உண்மை இன்று செயற்கை நுண்ணறிவுக்கும் பொருந்தும் என்றார். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் என்ன வகையான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்பதை இப்போதே முன் உணர்ந்து கூறுவது சிரமமாகும். இருப்பினும், எதிர்காலத்தில் மனிதர்களும், நுண்ணறிவு கருவிகளும் இணைந்து பணியாற்றும் நிலை ஏற்படும் என்றும், செயற்கை நுண்ணறிவு அதிக புத்திசாலித்தனமாகவும், அதிக திறனோடும், அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும் என்றும் அவர் கூறினார்.      

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2230090&reg=3&lang=1

***

AD/SMB/RJ/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2230211) வருகையாளர் எண்ணிக்கை : 27
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Gujarati , Telugu , Kannada