பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

18-வது வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார்

இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்க அரசு தொடர்ந்து பாடுபடுகிறது : பிரதமர்

வாழ்க்கையையும் வணிகத்தையும் எளிதாக்கும் நோக்கத்துடன், சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன : பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 24 JAN 2026 12:12PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (24.01.2026) காணொலிக் காட்சி மூலம் 18-வது வேலைவாய்ப்புத் திருவிழாவில் (ரோஜ்கர் மேளா) உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, இன்று  61 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அரசுப் பணிகளுக்கான பணி நியமனக் கடிதங்களைப் பெறுவதன் மூலம் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்கள் என்று குறிப்பிட்டார். இந்த இளைஞர்கள் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று அவர் கூறினார். பணி நியமன கடிதங்கள் பெறும் அனைத்து இளைஞர்களுக்கும் பிரதமர் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்களுக்கு வேலைவாய்ப்பையும், சுயவேலை வாய்ப்புகளை வழங்குவதே அரசின் முன்னுரிமை என்று திரு நரேந்திர மோடி கூறினார். வேலைவாய்ப்பு திருவிழா ஒரு இயக்கமாக மாறியுள்ளது என்றும் இந்த முயற்சியின் மூலம், லட்சக்கணக்கான இளைஞர்கள் பல்வேறு அரசுத் துறைகளில் நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நோக்கத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், நாடு முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார்.

உலகில் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது எனவும், உள்நாட்டிலும் உலக அளவிலும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்க அரசு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது என்று பிரதமர் கூறினார். மத்திய அரசு ஏராளமான நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்து வருவதாகவும், அவை இளம் இந்தியர்களுக்கு எண்ணற்ற புதிய வாய்ப்புகளைத் திறந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சமீப காலங்களில், இந்தியா நவீன உள்கட்டமைப்பில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடுகளைச் செய்துள்ளதால் கட்டுமானம் தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது என்று திரு நரேந்திர மோடி சுட்டிக்காட்டினார். இந்தியாவின் புத்தொழில் நிறுவனச் சூழல் அமைப்பு வேகமாக விரிவடைந்து வருவதாகவும், கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள், 21 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களைப் பணியமர்த்தி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் மீதான உலக அளவிலான நம்பிக்கை அதிகரித்து வருவது, இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாக அவர் கூறினார்.  2014-க்கு முந்தைய பத்து ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா இரண்டரை மடங்குக்கும் அதிகமான அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றுள்ளது என்றும், இது இந்திய இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளைக் உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் 8,000க்கும் மேற்பட்ட மகளிர் பணி நியமனக் கடிதங்களைப் பெற்றுள்ளனர் என்று சுட்டிக்காட்டிய திரு நரேந்திர மோடி, கடந்த 11 ஆண்டுகளில், பெண்களின் பணி நியமனம் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது என்றார். முத்ரா, ஸ்டார்ட்அப் இந்தியா போன்ற திட்டங்கள் பெண்களின் சுய வேலைவாய்ப்புக்கு பெரிதும் பயனளித்துள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

வாழ்க்கையையும் வணிகத்தையும் எளிதாக்கும் நோக்கில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்று பிரதமர் கூறினார். ஜிஎஸ்டி-யில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் இளம் தொழில்முனைவோருக்கும் குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கும் பயனளித்துள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

புதிதாக பணியில் நியமிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் மக்கள் நலனில் உறுதியாக செயல்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அரசின் ஒரு பகுதியாக, பொது நலனை அதிகரிக்க அவர்கள் தங்கள் நிலையில் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இன்று பணி நியமன கடிதம் பெற்றவர்களுக்கு மீண்டும் தமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தமது உரையை நிறைவு செய்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218036&reg=3&lang=1

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2218144) வருகையாளர் எண்ணிக்கை : 80