விவசாயத்துறை அமைச்சகம்
புதிய விதைச் சட்டத்தில் போலி விதைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பாரம்பரிய விதை முறைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் : மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான்
प्रविष्टि तिथि:
16 JAN 2026 5:17PM by PIB Chennai
புதிய விதைச் சட்டத்தின் (விதைச் சட்டம் - 2026) அம்சங்கள், விவசாயிகள் மீதான அதன் தாக்கம் ஆகியவை குறித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் இன்று (16.01.2026) புதுதில்லியில் ஊடகங்களுக்கு விரிவாக விளக்கினார். முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டம் விவசாயிகளின் பாதுகாப்பு, விதைகளின் தரம், விதை சூழலில் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும் என்று அமைச்சர் கூறினார்.
ஒவ்வொரு விதை பாக்கெட்டிலும் ஒரு க்யூஆர் குறியீடு இருக்கும் எனவும் அதை ஸ்கேன் செய்யும்போது, விவசாயிகள் விதை குறித்த முழுமையான தகவல்களை அறிய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இச்சட்டம் போலி அல்லது தரமற்ற விதைகளின் விற்பனையைத் தடுப்பது மட்டுமல்லாமல், அத்தகைய விதைகள் சந்தையில் நுழைந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்கவும் உதவும் என்றார்.
ஒவ்வொரு விதை நிறுவனமும் இனி பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் திரு சௌகான் கூறினார். அங்கீகரிக்கப்படாத விற்பனையாளர்கள் யாரும் விதைகளை விற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார். இது சந்தையில் இருந்து போலி நிறுவனங்களை நீக்கி, விவசாயிகள் நம்பகமான ஆதாரங்களில் இருந்து மட்டுமே விதைகளைப் பெறுவதை உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டார்.
புதிய சட்டம் விவசாயிகள் பயன்படுத்தும் பாரம்பரிய விதைகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் என்ற கவலையையும் அமைச்சர் நிராகரித்தார். விவசாயிகள் தங்கள் சொந்த விதைகளை விதைத்து மற்ற விவசாயிகளுடன் விதைகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று அவர் கூறினார். உள்ளூர் நிலையில் பாரம்பரிய விதைப் பரிமாற்ற முறை எந்த பிரச்சனையும் இல்லாமல் தொடரும் என்று அவர் உறுதியளித்தார்.
தரமற்ற விதைகளை விற்றால் முன்னர், ₹500 வரை அபராதம் விதிக்கப்பட்டது எனவும் இனி, ₹30 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யப்பட்டு உள்ளது எனவும் அவர் கூறினார். விவசாயிகளை ஏமாற்றுபவர்கள் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.
விதைச் சட்டம் மூன்று நிலைகளில் விதிகளைக் கொண்டுள்ளது என்று அமைச்சர் கூறினார். அரசு நிறுவனங்கள், உயர்தர விதைகளை உற்பத்தி செய்யும் உள்நாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களின் விதைகள் என முறையான மதிப்பீட்டு வழிமுறை பின்பற்றப்படும் என அவர் தெரிவித்தார் . வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விதைகள் முழுமையான சோதனை மற்றும் மதிப்பீட்டிற்குப் பிறகுதான் அங்கீகரிக்கப்படும் எனவும், தரமான விதைகள் விவசாயிகளைச் சென்றடையும் வகையில் அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு தனியார் துறை நிறுவனங்கள் பலப்படுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் கூறினார்.
புதிய சட்டம் மாநிலங்களின் அதிகாரங்களை நீர்த்துப்போகச் செய்யக்கூடும் என்ற கவலைகளை அவர் நிராகரித்தார். விவசாயம் மாநில பட்டியலில் உள்ள துறை எனவும் மாநில அரசுகளின் உரிமைகள் அப்படியே இருக்கும் என்றும் தெரிவித்தார். மத்திய அரசு ஒருங்கிணைப்பாளராக மட்டுமே செயல்படும் எனவும் இந்தச் சட்டம் மாநிலங்களின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் என்றும் திரு சிவராஜ் சிங் சௌகான் உறுதிபட தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215353®=3&lang=1
***
TV/PLM/SE
(रिलीज़ आईडी: 2215461)
आगंतुक पटल : 18