பிரதமர் அலுவலகம்
அசாம் மாநிலம் நமரூப்பில் யூரியா உரத் தொழிற்சாலை பூமி பூஜை விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
21 DEC 2025 4:25PM by PIB Chennai
அசாம் ஆளுநர் திரு. லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா அவர்களே, முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சக அமைச்சரும் உங்களின் பிரதிநிதியும், அசாமின் முன்னாள் முதலமைச்சருமான திரு. சர்பானந்த சோனோவால் அவர்களே, அசாம் மாநில அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, இதர முக்கியப் பிரமுகர்களே மற்றும் எங்களை ஆசீர்வதிக்க இவ்வளவு பெருந்திரளாக வந்திருக்கும் எனது சகோதர சகோதரிகளே! இந்த பந்தலுக்கு உள்ளே இருப்பவர்களை விட வெளியே அதிக எண்ணிக்கையிலான மக்கள் திரண்டிருப்பதை என்னால் காண முடிகிறது.
சாவ்லுங் சுகாபா மற்றும் மகாவீரர் லச்சித் பர்புகன் போன்ற மாவீரர்கள் பிறந்த மண் இது. பீம்பர் தியூரி, தியாகி குஷால் குன்வர், மோரான் ராஜா படௌசா), மாலதி மேம், இந்திரா மிரி, சொர்கதியோ சர்பானந்த சிங் மற்றும் வீரமங்கை சதி சாதினி ஆகியோர் வாழ்ந்த இந்த உஜானி அசாமின் புனித மண்ணை நான் வணங்குகிறேன்.
நண்பர்களே,
தொலைதூரம் வரை இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் திரண்டிருக்கும் உங்கள் அனைவரின் உற்சாகத்தையும், எழுச்சியையும், அன்பையும் என்னால் காண முடிகிறது. குறிப்பாக, எனது தாய்மார்களும் சகோதரிகளும் இவ்வளவு பெரிய அளவில் திரண்டு வந்து வழங்கும் அன்பும் ஆசிகளுமே எங்களின் மிகப்பெரிய பலம், எங்களின் மிகப்பெரிய ஆற்றல்; இது ஒரு அற்புதமான உணர்வு.
அசாமின் தேயிலைத் தோட்டங்களின் நறுமணத்தைச் சுமந்து கொண்டு எனது சகோதரிகள் பலர் இங்கே வந்திருக்கிறார்கள். இந்தத் தேயிலையின் மணம், அசாமுடன் எனக்குள்ள உறவில் ஒரு தனித்துவமான உணர்வை ஏற்படுத்துகிறது. உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் காட்டும் இந்த அன்பு மற்றும் பாசத்திற்காக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று அசாம் மாநிலத்திற்கும் ஒட்டுமொத்த வடகிழக்கு இந்தியாவிற்கும் ஒரு பொன்னான நாள். நம்ரூப் மற்றும் திப்ருகார் மக்களின் நீண்டகால கனவு இன்று நனவாகியுள்ளது; இந்தப் பிராந்தியத்தின் தொழில்முறை வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது. சற்று நேரத்திற்கு முன்புதான், இங்கு அமைந்துள்ள அம்மோனியா-யூரியா உரத் தொழிற்சாலைக்கான பூமி பூஜையை நான் நிறைவேற்றினேன். திப்ருகார் வருவதற்கு முன்பாக, குவஹாத்தியில் புதிய விமான நிலைய முனையத்தையும் நான் திறந்து வைத்தேன். அசாம் மாநிலம் வளர்ச்சியில் ஒரு புதிய வேகத்தைப் பெற்றுள்ளதாக இன்று அனைவரும் கூறுகிறார்கள். நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால் – இப்போது நீங்கள் காண்பது, நீங்கள் உணர்வது எல்லாம் வெறும் ஆரம்பம் தான். நாம் அசாமை இன்னும் வெகுதூரம் கொண்டு செல்ல வேண்டும்; உங்கள் அனைவரையும் ஒன்றிணைத்து நாம் முன்னேற வேண்டும். அஹோம் பேரரசின் காலத்தில் அசாம் பெற்றிருந்த அதே வலிமையையும் முக்கியத்துவத்தையும், வளர்ச்சியடைந்த இந்தியாவின் ஒரு வலிமையான நிலப்பரப்பாக அசாம் மீண்டும் பெறும். புதிய தொழிற்சாலைகளின் தொடக்கம், நவீன உட்கட்டமைப்பு வசதிகள், செமிகண்டக்டர் மற்றும் அதன் உற்பத்தித் துறையில் முன்னேற்றம், விவசாயத் துறையில் புதிய வாய்ப்புகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தொழிலாளர்களின் வளர்ச்சி, சுற்றுலாத் துறையில் பெருகிவரும் வாய்ப்புகள் என அசாம் இன்று ஒவ்வொரு துறையிலும் முன்னேறி வருகிறது. இந்த நவீன உரத் தொழிற்சாலைக்காக உங்கள் அனைவருக்கும் மற்றும் நாட்டின் அனைத்து விவசாய சகோதர சகோதரிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். குவஹாத்தி விமான நிலையத்தின் புதிய முனையத்திற்காகவும் உங்களைப் பாராட்டுகிறேன். பா.ஜ.க-வின் 'இரட்டை எஞ்சின்' அரசாங்கத்தின் கீழ், தொழில் மற்றும் போக்குவரத்து இணைப்புகளின் இந்த ஒருங்கிணைப்பு அசாம் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதுடன், நமது இளைஞர்கள் பெரிய கனவுகளைக் காணவும் தூண்டுகிறது.
நண்பர்களே,
நமது நாட்டின் விவசாயிகள், அதாவது நமது ‘அன்ன தாதா’க்கள் (உணவு அளிப்பவர்கள்), வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறார்கள். எனவே, விவசாயிகளின் நலனையே முதன்மையாகக் கொண்டு எங்களது அரசு இரவும் பகலும் உழைத்து வருகிறது. இங்கே நீங்கள் அனைவரும் விவசாயிகளுக்கு உகந்த பல்வேறு திட்டங்களின் பலன்களைப் பெற்று வருகிறீர்கள். விவசாய நலத்திட்டங்களுக்கு மத்தியில், நமது விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் தடையின்றித் தொடர்ந்து கிடைப்பதும் மிக முக்கியமானது. வரும் ஆண்டுகளில் இந்த யூரியா தொழிற்சாலை அதனை உறுதி செய்யும். இந்த உரத் திட்டத்திற்காக சுமார் 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இங்கிருந்து ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான உரம் உற்பத்தி செய்யப்படும். இங்கே உற்பத்தி தொடங்கும் போது, விநியோகம் விரைவாக நடக்கும் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் குறையும்.
நண்பர்களே,
நம்ரூப்பின் இந்தத் தொழிற்சாலைப் பிரிவு ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகளையும், சுயவேலை வாய்ப்புகளையும் உருவாக்கும். இந்தத் தொழிற்சாலை இயங்கத் தொடங்கியவுடன், பலருக்கு இங்கேயே நிரந்தரப் பணிகள் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், பராமரிப்பு, விநியோகம் மற்றும் கட்டுமானம் என இந்தத் தொழிற்சாலையோடு தொடர்புடையப் பணிகளும் பெருமளவில் உருவாகும். இத்தகைய அனைத்துப் பிரிவுகளிலும் உள்ளூர் மக்கள், குறிப்பாக நமது இளைஞர்கள் வேலைவாய்ப்பைப் பெறுவார்கள்.
ஆனால் சகோதர சகோதரிகளே,
ஒன்று யோசித்துப் பாருங்கள், பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் விவசாயிகளின் நலனுக்கான பணிகள் ஏன் நடக்கின்றன? நமது நம்ரூப் பல தசாப்தங்களாக உர உற்பத்திக்கான மையமாக இருந்து வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்பட்ட உரங்கள் வடகிழக்கு இந்தியாவின் விளைநிலங்களுக்கு உயிர் கொடுத்து, விவசாயிகளின் பயிர்களுக்குத் துணை நின்ற ஒரு காலம் இருந்தது. நாட்டின் பல பகுதிகளில் உர விநியோகம் சவாலாக இருந்தபோது கூட, நம்ரூப் விவசாயிகளுக்கு ஒரு நம்பிக்கையின் ஊற்றாகத் திகழ்ந்தது. இருப்பினும், பழைய தொழிற்சாலைகளின் தொழில்நுட்பம் காலப்போக்கில் காலாவதியானது, ஆனால் காங்கிரஸ் அரசாங்கங்கள் அதில் எந்தக் கவனமும் செலுத்தவில்லை. இதன் விளைவாக, நமரூப் உரத் தொழிற்சாலையின் பல பிரிவுகள் மூடப்பட்டன. இதனால் ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த விவசாயிகள் பாதிக்கப்பட்டனர், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளும் சிரமங்களைச் சந்தித்தனர்; அவர்களின் வருமானம் பாதிக்கப்பட்டது மற்றும் விவசாயம் செய்வது மேன்மேலும் சவாலான ஒன்றாக மாறியது. இருந்தபோதிலும், காங்கிரஸ் கட்சி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க எதையும் செய்யவில்லை; அவர்கள் அலட்சியமாகவே இருந்தனர். இன்று, எங்களது இரட்டை எஞ்சின் அரசாங்கம், காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்ட இதே போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு வருகிறது.
நண்பர்களே,
அசாமில் நடந்தது போலவே, நாட்டின் பிற மாநிலங்களிலும் பல உரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன. அன்றைய காலக்கட்டத்தில் விவசாயிகளின் அவலநிலை உங்களுக்கு நினைவிருக்கிறதா? யூரியா உரத்திற்காக விவசாயிகள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. யூரியா விற்பனை கடைகளில் போலீசாரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டிய சூழல் இருந்தது. விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தும் நிலையும் இருந்தது.
சகோதர சகோதரிகளே,
காங்கிரஸ் கட்சியால் மோசமடைந்த நிலையைச் சீரமைக்க எங்களது அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அவர்கள் நிலைமையை அவ்வளவு மோசமாக ஆக்கிவிட்டார்கள்; எவ்வளவு மோசமென்றால், கடந்த 11 ஆண்டுகளாக நான் கடுமையாக உழைத்த பிறகும், இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாகவே உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் உரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வந்தன. ஆனால், எங்களது அரசோ கோரக்பூர், சிந்த்ரி, பரவுனி, ராமகுண்டம் போன்ற இடங்களில் பல தொழிற்சாலைகளைத் தொடங்கியுள்ளது. இத்துறையில் தனியார் துறையினரும் ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக, வரும் காலங்களில் யூரியா உற்பத்தியில் சுயசார்பு அடைவதை நோக்கி நாம் இன்று வலிமையான அடிகளை எடுத்து வருகிறோம்.
நண்பர்களே,
2014-ஆம் ஆண்டில், நாட்டில் 225 லட்சம் மெட்ரிக் டன் யூரியா மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. அந்த எண்ணிக்கை உங்களுக்கு நினைவிருக்கிறதா? அதை நினைவில் வைத்துக் கொள்வீர்களா? 10-11 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் உங்களுக்காக பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கியபோது, உற்பத்தி 225 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது. இந்த எண்ணிக்கையை நினைவில் கொள்ளுங்கள். கடந்த 10-11 ஆண்டுகளில் மேற்கொண்ட கடும் உழைப்பினால், உற்பத்தியை சுமார் 306 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தியுள்ளோம். ஆனால் நாம் இத்துடன் நின்றுவிடக் கூடாது, ஏனென்றால் இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. அவர்கள் அன்று செய்திருக்க வேண்டிய வேலையைச் செய்யவில்லை, அதனால்தான் இப்போது நான் சற்று கூடுதல் முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. தற்போது நமக்கு ஆண்டுக்கு சுமார் 380 லட்சம் மெட்ரிக் டன் யூரியா தேவைப்படுகிறது. நாம் 306-ஐ எட்டிவிட்டோம், இன்னும் 70-80 லட்சம் மெட்ரிக் டன் அதிகரிக்க வேண்டும். ஆனால் நான் நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன் – நாம் உழைக்கும் விதம், நாம் திட்டமிடும் முறை மற்றும் எனது விவசாய சகோதர சகோதரிகள் எங்களுக்கு வழங்கும் ஆசி ஆகியவற்றைக் கொண்டு, இந்தப் இடைவெளியை விரைவாக நிரப்புவதற்கு எவ்வித முயற்சியையும் நாம் விட்டுவைக்க மாட்டோம். அதற்காகத்தான் நான் கொஞ்சம் கூடுதல் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது.
சகோதர சகோதரிகளே,
நான் உங்களிடம் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன், எங்களது அரசு உங்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அதிக விலை கொடுத்து நாம் இறக்குமதி செய்ய வேண்டிய யூரியா உரத்தின் சுமையைக்கூட, நாங்கள் எங்கள் விவசாயிகள் மீது சுமத்துவதில்லை. பா.ஜ.க அரசு மானியங்களை வழங்கி, அந்தச் செலவை தானே ஏற்றுக்கொள்கிறது. இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு ஒரு மூட்டை யூரியா வெறும் 300 ரூபாய்க்கு கிடைக்கிறது, ஆனால் அதே ஒரு மூட்டை உரத்திற்காக இந்திய அரசு நாம் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு சுமார் 3,000 ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது. இப்போது சிந்தித்துப் பாருங்கள், நாம் 3,000 ரூபாய்க்கு வாங்கி 300 ரூபாய்க்கு விற்கிறோம். இந்த முழு இந்தியாவையும் நாட்டின் விவசாயிகள் மீது விழ நாங்கள் அனுமதிப்பதில்லை. எனது விவசாய சகோதர சகோதரிகளுக்குச் சுமை ஏற்படக்கூடாது என்பதற்காக இந்த முழுச் செலவையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. ஆனால் எனது விவசாய சகோதர சகோதரிகளே, நீங்களும் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அந்த உதவி எனக்காக மட்டுமல்ல, உங்களுக்காகவும் தான் - அதுதான் நமது 'பூமித் தாயைப்' பாதுகாப்பது. நாம் பூமித் தாயைப் பாதுகாக்கவில்லை என்றால், நாம் எத்தனை மூட்டை யூரியாவைப் பயன்படுத்தினாலும், பதிலுக்கு அவள் நமக்கு எதையும் தரமாட்டாள். நமக்கு உடல்நிலை சரியில்லாதபோது சரியான அளவில் மருந்து உட்கொள்ள வேண்டும் - இரண்டு மாத்திரைகள் தேவைப்படும் இடத்தில் நான்கு மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் அது உடலுக்கு நன்மையை விட தீமையையே தரும். அதுவே பூமித் தாய்க்கும் பொருந்தும். அண்டை வீட்டார் செய்கிறார் என்பதற்காக நாம் அளவுக்கு அதிகமாக உரத்தைச் சேர்த்துக் கொண்டே இருந்தால், பூமித் தாய் நமக்கு எதிராக மாறிவிடுவாள். பூமித் தாய்க்கு யூரியாவை வலுக்கட்டாயமாக ஊட்டி அவளைக் கொல்ல நமக்கு எந்த உரிமையும் இல்லை. அவள் நமது தாய், இந்தத் தாயையும் நாம் பாதுகாக்க வேண்டும்.
நண்பர்களே,
இன்று விதைப்பு முதல் சந்தை வரை, பா.ஜ.க அரசு விவசாயிகளுடன் துணை நிற்கிறது. விவசாயிகள் கடனுக்காக அலைந்து திரியாமல் இருக்க, விவசாயப் பணிகளுக்காக அவர்கள் வங்கிக் கணக்கிலேயே நேரடியாகப் பணம் செலுத்தப்படுகிறது. இதுவரை விவசாயிகளுக்கான பிரதமரின் ஆதரவு நிதி திட்டத்தின் கீழ் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளின் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்களா? அல்லது மறந்து விடுவீர்களா? எனது நாட்டு விவசாயிகளின் கணக்குகளில் நேரடியாக 4 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, விவசாயிகளுக்கு உதவுவதற்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன - 35 ஆயிரம் கோடி ரூபாய்! பிரதமரின் தானிய வகை சுயசார்பு இயக்கம் பருப்பு வகை சுயசார்பு இயக்கம் ஆகியவை விவசாயத்திற்குப் பெரும் ஊக்கமளிக்கும்.
நண்பர்களே,
விவசாயிகளின் ஒவ்வொரு தேவையையும் கருத்தில் கொண்டு நாங்கள் பணியாற்றி வருகிறோம். பாதகமான வானிலை காரணமாக பயிர்கள் சேதமடைந்தால், 'பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்' மூலம் விவசாயிகளுக்கு ஆதரவு கிடைக்கிறது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான விலையைப் பெறுவதை உறுதி செய்வதற்காக, கொள்முதல் முறைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. நமது விவசாயிகள் வலுவாக இருந்தால் மட்டுமே நாடு முன்னேறும் என்று எங்களது அரசு உறுதியாக நம்புகிறது; இதை அடைவதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
நண்பர்களே,
மத்தியில் எங்களது அரசு ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கான கடன் அட்டை வசதியை கால்நடை வளர்ப்போர் மற்றும் மீனவர்களுக்கும் விரிவுபடுத்தினோம். விவசாயிகளுக்கான கடன் அட்டை கிடைத்த பிறகு, நமது கால்நடை வளர்ப்பவர்கள், நமது மீனவர்கள் என அனைவரும் பெரும் பலன் பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கையையும் நினைவில் கொள்ளுங்கள் - இந்த ஆண்டு விவசாயிகளுக்கான கடன் அட்டை மூலம் விவசாயிகளுக்கு 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவி வழங்கப்பட்டுள்ளது. 10 லட்சம் கோடி ரூபாய்! உயிர் உரங்கள் மீதான ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டதாலும் விவசாயிகள் பெரிதும் பயனடைந்துள்ளனர். இந்திய விவசாயிகள் 'இயற்கை விவசாயம்' செய்வதற்கும் பா.ஜ.க அரசு மிகுந்த ஊக்கமளித்து வருகிறது. அசாமில் உள்ள சில வட்டங்கள் 100% இயற்கை விவசாயம் செய்யும் இடங்களாக மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாருங்கள், அசாம் மாநிலம் இந்தியாவிற்கே வழிகாட்ட முடியும். அசாம் விவசாயிகள் நாட்டிற்கு வழிகாட்ட முடியும். நாங்கள் 'தேசிய இயற்கை விவசாய இயக்கத்தை' தொடங்கியுள்ளோம், இன்று லட்சக்கணக்கான விவசாயிகள் அதில் இணைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் நாட்டில் 10 ஆயிரம் 'உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள்' உருவாக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு இந்தியாவைச் சிறப்பு கவனத்தில் கொண்டு, எங்களது அரசு சமையல் எண்ணெய், குறிப்பாக 'பாம் ஆயில்' தொடர்பான ஒரு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்த இயக்கம் சமையல் எண்ணெய் விஷயத்தில் இந்தியாவைச் சுயசார்புடையதாக மாற்றுவது மட்டுமல்லாமல், இங்குள்ள விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிக்கும்.
நண்பர்களே,
இப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும் உள்ளனர். அசாமின் ஏழரை லட்சம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு மக்கள் நிதிதிட்டத்தின் மூலம் வங்கி கணக்குகளைத் தொடங்கியது இதே பா.ஜ.க அரசுதான். இப்போது அவர்கள் வங்கி முறையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், இந்தத் தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை நேரடியாகத் தங்களது வங்கிக் கணக்குகளிலேயே பெற முடிகிறது. எங்களது அரசு தேயிலைத் தோட்டப் பகுதிகளில் பள்ளிகள், சாலைகள், மின்சாரம், குடிநீர் மற்றும் மருத்துவமனை வசதிகளை அதிகரித்து வருகிறது.
நண்பர்களே,
எங்களது அரசு அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற மந்திரத்துடன் முன்னோக்கிச் செல்கிறது. எங்களது இந்த தொலைநோக்குப் பார்வை, நாட்டின் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் எங்களது முயற்சி, திட்டங்கள் மற்றும் அத்திட்டங்களைச் செயல்படுத்திய விதம் ஆகியவற்றால், சுமார் 25 கோடி மக்கள் - இந்த எண்ணிக்கையையும் நினைவில் கொள்ளுங்கள் - 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து வெளியே வந்துள்ளனர். நாட்டில் ஒரு புதிய நடுத்தர வர்க்கம் உருவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத்தரம் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னேறி வருவதால் இது சாத்தியமானது. இந்தியாவில் நிகழ்ந்து வரும் இந்த மாற்றங்களைச் சுட்டிக்காட்டும் சில புதிய புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ளன.
நண்பர்களே,
இவை அனைத்தும் ஊடகங்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள், எனவே நான் உங்களிடம் சொல்வதை நினைவில் வைத்துக் கொண்டு மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர்களே,
முன்பெல்லாம், கிராமங்களில் உள்ள ஏழ்மையான குடும்பங்களில் பத்து குடும்பங்களுக்கு ஒருவரிடம் கூட மோட்டார் சைக்கிள் இருக்காது. 10-ல் ஒருவரிடம் கூட அது இருந்ததில்லை. ஆனால், சமீபத்திய ஆய்வுகளின்படி, கிராமங்களில் வசிக்கும் கிட்டத்தட்ட பாதி குடும்பங்களிடம் இப்போது ஒரு பைக்கோ அல்லது காரோ உள்ளது. இதுமட்டுமல்லாமல், மொபைல் போன்கள் இப்போது ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்துள்ளன. ஒரு காலத்தில் "ஆடம்பரம்" என்று கருதப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற பொருட்கள், இன்று நமது புதிய நடுத்தர வர்க்க வீடுகளிலும் காணப்படுகின்றன. இன்று கிராமங்களின் சமையலறைகளிலும் கூட இவை இடம்பிடித்துள்ளன. ஸ்மார்ட்போன்கள் பரவலாக இருந்தாலும், கிராமங்களில் தொலைக்காட்சி வைத்திருக்கும் போக்கும் அதிகரித்து வருவதாகப் புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இந்த மாற்றம் தானாக நடக்கவில்லை. இந்த உருமாற்றம் என்பது நாட்டின் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரமளித்தலின் விளைவாகும்; மேலும் வளர்ச்சியின் பலன்கள் இப்போது தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் ஏழ்மையான மக்களையும் சென்றடைகின்றன என்பதே இதன் பொருளாகும்.
நண்பர்களே,
பா.ஜ.க-வின் இந்த 'இரட்டை எஞ்சின்' அரசாங்கம் என்பது ஏழைகள், பழங்குடியினர், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான அரசாங்கம். அதனால்தான், அசாம் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர எங்களது அரசு பாடுபட்டு வருகிறது. அசாமின் அடையாளம் மற்றும் கலாச்சாரத்திற்கு எங்களது அரசு எப்போதும் முதலிடம் அளித்து வருகிறது. அசாமியப் பெருமையின் அடையாளங்களை ஒவ்வொரு தளத்திலும் பா.ஜ.க அரசு முன்னிலைப்படுத்துகிறது. அதனால்தான், நாம் பெருமையுடன் மகாவீரர் லச்சித் பர்புகனுக்கு 125 அடி உயரத்தில் சிலை அமைக்கிறோம்; அசாமின் பெருமையான பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறோம். அசாமின் கலை மற்றும் கைவினைப் பொருட்களுக்கும், அசாமின் 'கமோசா' (பாரம்பரியத் துண்டு) உடைக்கும் உலகளாவிய அங்கீகாரத்தை நாங்கள் வழங்கி வருகிறோம். சில நாட்களுக்கு முன்புதான், ரஷ்ய அதிபர் திரு. புதின் இந்தியா வந்திருந்தார். அவர் டெல்லியில் இருந்தபோது, நான் அவருக்கு அசாமின் 'கருப்புத் தேயிலையை' பெருமையுடன் பரிசாக வழங்கினேன். அசாமின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் உயர்த்தும் ஒவ்வொரு பணிக்கும் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம்.
ஆனால் சகோதர சகோதரிகளே,
பா.ஜ.க இத்தகைய காரியங்களைச் செய்யும்போது, காங்கிரஸ் கட்சிதான் அதிக வேதனைப்படுகிறது. எங்களது அரசு பூபேன் தா அவர்களுக்கு 'பாரத ரத்னா' வழங்கியபோது, காங்கிரஸ் அதனை வெளிப்படையாக எதிர்த்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். "மோடி நடனக் கலைஞர்களுக்கும் பாடகர்களுக்கும் பாரத ரத்னா வழங்குகிறார்" என்று காங்கிரஸின் அகில இந்தியத் தலைவர் கூறியிருந்தார். சொல்லுங்கள், இது பூபேன் தா அவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் இல்லையா? இது கலைக்கும் கலாச்சாரத்திற்கும் இழைக்கப்பட்ட அவமானம் இல்லையா? இது அசாமுக்கு இழைக்கப்பட்ட அவமானம் இல்லையா? காங்கிரஸ் இதையேதான் இரவும் பகலும் செய்து கொண்டிருக்கிறது - அதாவது அவமதிப்பது. அசாமில் செமிகண்டக்டர் ஆலையை நாங்கள் நிறுவியபோது, அதையும் காங்கிரஸ் எதிர்த்தது. ஒன்றை மறந்துவிடாதீர்கள், தேயிலைத் தோட்ட சமூகத்தைச் சேர்ந்த நமது சகோதர சகோதரிகளுக்குப் பல தசாப்தங்களாக நில உரிமைகளை மறுத்தது இதே காங்கிரஸ் அரசுதான்! பா.ஜ.க அரசு அவர்களுக்கு நில உரிமைகளையும் கண்ணியமான வாழ்வையும் வழங்கியது. நானே ஒரு தேயிலை விற்பனையாளர்), நான் இதைச் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்? இந்த காங்கிரஸ் இப்போதும் தேச விரோதச் சிந்தனைகளைத் தூண்டி வருகிறது. இந்த மக்கள் வங்கதேச ஊடுருவல்காரர்களை அசாமின் வனப்பகுதிகளில் குடியேற்ற விரும்புகிறார்கள். அதன் மூலம் அவர்களின் வாக்கு வங்கி பலப்படும்; நீங்கள் அழிந்து போனாலும் அவர்களுக்குக் கவலையில்லை, அவர்களுக்குத் தேவை அவர்களின் வாக்கு வங்கியை வலுப்படுத்துவதுதான்.
சகோதர சகோதரிகளே,
காங்கிரஸ் கட்சிக்கு அசாம் மீதோ, அசாம் மக்கள் மீதோ அல்லது உங்கள் அடையாளம் மீதோ எந்த அக்கறையும் கிடையாது. அவர்களுக்கு அதிகாரம், அரசாங்கம் மற்றும் அவர்கள் முன்பு செய்து வந்த அதே நடைமுறைகளைத் தொடருவதில் மட்டுமே ஆர்வம் உள்ளது. அதனால்தான் சட்டவிரோத வங்கதேச ஊடுருவல்காரர்களை அவர்களுக்கு அதிகம் பிடிக்கிறது. அந்தச் சட்டவிரோத ஊடுருவல்காரர்களைக் குடியேற்றியதும் காங்கிரஸ் தான், அவர்களைப் பாதுகாப்பதும் காங்கிரஸ் தான். அதனால்தான் வாக்காளர் பட்டியல் திருத்தப்படுவதை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது. காங்கிரஸின் இந்த விஷத்தன்மை வாய்ந்த திருப்திப்படுத்தும் கொள்கை மற்றும் வாக்கு வங்கி அரசியலில் இருந்து நாம் அசாமைப் பாதுகாக்க வேண்டும். இன்று நான் உங்களுக்கு ஒரு உத்தரவாதம் அளிக்கிறேன் - அசாமின் அடையாளத்தையும், அசாமின் கௌரவத்தையும் பாதுகாக்க, பா.ஜ.க உங்களோடு ஒரு இரும்புக் கோட்டையைப் போல உறுதியாக நிற்கிறது.
நண்பர்களே,
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் உங்கள் ஆசிகளே எனது பலம். உங்கள் அன்புதான் எனது மிகப்பெரிய சொத்து. அதனால்தான் உங்களுக்காக ஒவ்வொரு கணமும் வாழ்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதில் கிழக்கு இந்தியா மற்றும் நமது வடகிழக்குப் பகுதியின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கிழக்கு இந்தியா, இந்தியாவின் வளர்ச்சிக் காரணியாக மாறும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். நம்ரூப்பில் அமையவுள்ள இந்த புதிய ஆலை, அந்த மாற்றத்திற்கான ஒரு உதாரணம். இங்கு உற்பத்தி செய்யப்படும் உரம் அசாம் மாநில வயல்களுக்கு மட்டும் பயன்படப் போவதில்லை. இது பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் கிழக்கு உத்தரப் பிரதேசம் வரை சென்றடையும். இது சாதாரண விஷயம் அல்ல. நாட்டின் உரத் தேவைகளில் வடகிழக்கு இந்தியாவின் பங்களிப்பு இதுவாகும். நம்ரூப் போன்ற திட்டங்கள், வருங்காலத்தில் வடகிழக்கு இந்தியா சுயசார்பு இந்தியாவின் ஒரு முக்கிய மையமாக உருவெடுக்கும் என்பதைக் காட்டுகின்றன. இது உண்மையாகவே "அஷ்டலட்சுமி"யாக மாறும். இந்த புதிய உரத் தொழிற்சாலைக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்:
பாரத மாதாவுக்கு ஜே! பாரத மாதாவுக்கு ஜே!
மேலும், இந்த ஆண்டு 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டைக் குறிக்கிறது, இது நம் அனைவருக்கும் பெருமைமிக்க தருணம். நாம் அனைவரும் சொல்வோம்:
வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2207185®=3&lang=1
***
AD/VK/PD
(வெளியீட்டு அடையாள எண்: 2212349)
வருகையாளர் எண்ணிக்கை : 38
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam