பிரதமர் அலுவலகம்
அசாமின் குவஹாத்தியில் பாரத ரத்னா டாக்டர் பூபென் ஹசாரிகாவின் 100-வது பிறந்த தினத்தை கொண்டாடும் நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை
இடுகை இடப்பட்ட நாள்:
13 SEP 2025 8:57PM by PIB Chennai
நான், பூபென் தா! என சொன்னவுடன் நீங்கள் சொல்லுங்கள், அமரரானார்! அமரரானார்!' (அவர் புகழ் என்றும் நிலைக்கட்டும்)
பூபென் தா, அமரரானார்! அமரரானார்!
பூபென் தா, அமரரானார்! அமரரானார்!
பூபென் தா, அமரரானார்! அமரரானார்!
அசாம் ஆளுநர் திரு லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா அவர்களே, மாநில முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களே, அருணாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சர் திரு பேமா கண்டு அவர்களே, எனது அமைச்சரவை சகாவான திரு சர்பானந்தா சோனோவால் அவர்களே, மேடையில் இருக்கும் பூபென் ஹசாரிகா அவர்களின் சகோதரர் திரு சமர் ஹசாரிகா அவர்களே, பூபென் ஹசாரிகா அவர்களின் சகோதரி திருமதி கவிதா பருவா அவர்களே, பூபென் தாவின் மகன் திரு தேஜ் ஹசாரிகா அவர்களே மற்றும் இங்கு வந்துள்ள உயர் அதிகாரிகளே அசாமின் சகோதர சகோதரிகளே!
இன்று ஒரு அற்புதமான நாள், இந்த தருணம் விலைமதிப்பற்றது. நான் இங்கு கண்ட காட்சி, உற்சாகம், இணக்கம், பூபெனின் இசையின் தாளம் - பூபென் தாவின் சொந்த வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் - மீண்டும் மீண்டும் என் இதயத்தில் எதிரொலித்தது, "சமய் ஓ தீரே சலோ, சமய் ஓ தீரே சலோ" (காலமே மெதுவாக செல்). பூபெனின் இசையின் இந்த அலை எல்லா இடங்களிலும், முடிவில்லாமல் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று என் இதயம் விரும்பியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். அசாமின் உணர்வு என்னவென்றால், இங்கு ஒவ்வொரு சந்தர்ப்பமும் ஒரு புதிய சாதனையை உருவாக்குகிறது. இன்றும், இந்த நிகழ்ச்சிகளுக்கான உங்களின் அற்புதமான தயாரிப்பு தெளிவாக தெரிந்தது. உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
நண்பர்களே,
சில நாட்களுக்கு முன்பு, செப்டம்பர் 8-ம் தேதி, நாம் பூபென் ஹசாரிகா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடினோம். அன்று, பூபென் தாவுக்காக நான் எழுதிய ஒரு கட்டுரையில் என் உணர்வுகளை வெளிப்படுத்தினேன். இந்த 100-வது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம் ஆகும். இப்போதுதான், நான் இங்கு வந்து ஆசி வழங்கியிருக்கிறேன் என்று திரு ஹிமந்தா கூறினார். உண்மையில் இவ்வளவு புனிதமான தருணத்தில் இங்கு இருப்பது எனக்கு கிடைத்த நல்ல ஆசீர்வாதம் என்றுதான் சொல்லவேண்டும். நாம் அனைவரும் அன்புடன் பூபென் தாவை 'சுதா கோந்தோ' என்று அழைத்தோம். பாரதத்தின் உணர்வுகளுக்கு குரல் கொடுத்த, இசையை உணர்வுடன் இணைத்த, பாரதத்தின் கனவுகளை தன் பாடல்களில் பிரதிபலித்த, கங்கை அன்னையின் கருணையை பாரத மாதாவிடம் விவரித்த 'சுதா கோந்தோவின்' நூற்றாண்டு இது.
நண்பர்களே,
பூபென் தா அவர்கள் தனது இசையின் மூலம் பாரதத்தை ஒன்றிணைத்து, பாரதத்தின் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்துக்கொண்டே இருக்கும் பசுமையான படைப்புகளை உருவாக்கினார்.
சகோதர சகோதரிகளே,
பூபென் தா இப்போது உடல் ரீதியாக நம்மிடையே இல்லை, ஆனால் அவரது பாடல்கள், அவரது குரல், இன்றும் பாரதத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு சாட்சியாக நின்று, அதற்கு உத்வேகம் அளித்துக்கொண்டிருக்கிறது. எங்கள் அரசு பெருமையுடன் பூபென் தாவின் நூற்றாண்டு ஆண்டைக் கொண்டாடுகிறது. பூபென் ஹசாரிகாவுக்கு பாடல்களை, அவரது செய்திகளை, அவரது வாழ்க்கைப் பயணத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்கிறோம். இன்று, அவரது வாழ்க்கை வரலாறும் இங்கு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தருணத்தில், டாக்டர் பூபென் ஹசாரிகாவுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். அசாமின் சகோதர சகோதரிகளுடன், பூபென் தாவின் இந்த நூற்றாண்டு பிறந்த ஆண்டில் ஒவ்வொரு இந்தியருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்களே,
பூபென் ஹசாரிகா தனது வாழ்நாள் முழுவதும் இசைக்கு சேவை செய்தார். இசை தியானமாக மாறும்போது, அது நம் ஆன்மாவைத் தொடுகிறது. இசை ஒரு உறுதிப்பாடாக மாறும்போது, அது சமூகத்திற்கு ஒரு புதிய திசையைக் காட்டும் ஊடகமாக மாறுகிறது. அதனால்தான் பூபென் தாவின் இசை மிகவும் சிறப்பானதாக இருந்தது. அவரது லட்சியங்கள், அவருக்கு இருந்த அனுபவங்கள், அதையெல்லாம் அவர் தனது பாடல்களில் பாடினார். அவரது பாடல்களில் பாரத மாதாவின் மீது உள்ள அன்பை நாம் காணலாம். ஏனென்றால் அவர் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற உணர்வடன் வாழ்ந்தார்.
சற்று யோசித்துப் பாருங்கள்— அவர் வடகிழக்கில் பிறந்தார், பிரம்மபுத்திராவின் புனித அலைகள் அவருக்கு இசையின் பாடங்களை கற்றுக்கொடுத்தன. பின்னர் அவர் பட்டப்படிப்புக்காக காசிக்குச் சென்றார், பிரம்மபுத்திராவின் அலைகளுடன் தொடங்கிய இசை தேடல் கங்கையின் முணுமுணுப்பின் மூலம் நிறைவேறியது. காசியின் சுறுசுறுப்பு அவரது வாழ்க்கைக்கு இடையறாத ஓட்டத்தை அளித்தது. அவர் பாரதம் முழுவதும் பயணித்தார். பின்னர், தனது பிஎச்டியைத் தொடர, அவர் அமெரிக்காவிற்கு கூட சென்றார்! ஆனாலும், வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், அவர் ஒரு உண்மையான மகனாக அசாமின் மண்ணுடன் இணைந்திருந்தார், அதனால் அவர் பாரதத்திற்கு திரும்பினார்! இங்கே, சினிமாவில், அவர் சாதாரண மனிதனின் குரலாக மாறினார். அவர்களின் வாழ்க்கையின் துன்பத்திற்கு குரல் கொடுத்தார். அந்த குரல் இன்றும் நம்மை அசைக்கிறது.
அவரது பாடல் "மனுஹே மனுஹோர் பாபே, ஜோதிஹே ஆகோனு நபாபே, ஆகோனி ஹோஹனுபூதிரே, பாபிபோ கோனேனு குவா?"—அதாவது, மனிதர்களே மற்ற மனிதர்களின் மகிழ்ச்சி மற்றும் துக்கங்கள், வலி மற்றும் துன்பங்களைப் பற்றி சிந்திக்கவில்லை என்றால், இந்த உலகில் ஒருவரை ஒருவர் யார் கவனிப்பார்கள்?—சிந்தித்து பாருங்கள், இது நமக்கு எவ்வளவு உத்வேகம் அளிக்கிறது. இந்த சிந்தனையுடன்தான், இன்று இந்தியா கிராமங்கள், ஏழைகள், தலித்துகள், உரிமை மறுக்கப் பட்டவர்கள், பழங்குடியின சமூகங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் ஈடுபட்டுள்ளது.
நண்பர்களே,
பூபென் தா பாரதத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டின் நாயகனாக திகழ்ந்தார். பல தசாப்தங்களுக்கு முன்பு, வடகிழக்கு புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டபோது, வடகிழக்கு வன்முறை மற்றும் பிரிவினைவாதத்தின் நெருப்பில் எரிய விடப்பட்டபோது, அந்த கடினமான காலங்களில் கூட பூபென் தா பாரதத்தின் ஒற்றுமையின் குரலை எழுப்பிக்கொண்டிருந்தார். அவர் ஒரு வளமான வடகிழக்கைப் பற்றி கனவு கண்டார். அவர் இயற்கையின் அற்புதமான அழகில் அமைந்திருக்கும் வடகிழக்கைப் பற்றி பாடினார். அசாமிற்காக, அவர் பாடினார்:
இந்தப் பாடலை நாம் முனுமுனுக்கும் போது, அசாமின் பன்முகத்தன்மையைப் பற்றி பெருமைப்படுகிறோம். அசாமின் வலிமை மற்றும் திறனைப் பற்றி நாம் பெருமைப்படுகிறோம்.
நண்பர்களே,
அவர் அருணாச்சலை சமமாக நேசித்தார், அதனால்தான் இன்று அருணாச்சலின் முதலமைச்சர் இங்கு வந்திருக்கிறார்.
நண்பர்களே,
ஒரு உண்மையான தேசபக்தரின் இதயத்திலிருந்து வெளிவரும் குரலுக்கு எப்போதும். இன்று, வடகிழக்கிற்கான அவரது கனவுகளை நனவாக்க, நாங்கள் இரவும் பகலும் உழைக்கிறோம். எங்கள் அரசு, பூபென் தாவுக்கு பாரத ரத்னா வழங்குவதன் மூலம், வடகிழக்கின் கனவுகளையும் கண்ணியத்தையும் கவுரவித்துள்ளது மற்றும் வடகிழக்கை தேசத்திற்கு முன்னுரிமையாக மாற்றியுள்ளது. நாட்டில் மிக நீளமான பாலங்களில் ஒன்றை, அசாம் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தை இணைக்கும் வகையில் நாம் கட்டியபோது, அதற்கு பூபென் ஹசாரிகா பாலம் என்று பெயரிட்டோம். இன்று, அசாமும் முழு வடகிழக்கும் வேகமாக முன்னேறி வருகின்றன. வளர்ச்சியின் ஒவ்வொரு பரிமாணத்திலும், புதிய சாதனைகள் படைக்கப்படுகின்றன. இந்த வளர்ச்சி சாதனைகள் பூபென் தாவுக்கு தேசத்தின் உண்மையான மரியாதையாகும்.
நண்பர்களே,
நமது அசாம், நமது வடகிழக்கு, பாரதத்தின் கலாச்சார பன்முகத்தன்மைக்கு எப்போதும் பெரிய பங்களிப்பை செய்து வந்துள்ளது. இந்த மண்ணின் வரலாறு, அதன் பண்டிகைகள், அதன் கொண்டாட்டங்கள், அதன் கலை, அதன் பண்பாடு, அதன் இயற்கை அழகு, அதன் தெய்வீக ஒளி, இவையெல்லாவற்றுடன் சேர்ந்து, பாரத மாதாவின் மரியாதை, கண்ணியம் மற்றும் பாதுகாப்புக்காக இங்குள்ள மக்கள் செய்த தியாகங்கள்—இவை இல்லாமல் நம் பாரதத்தை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. நமது வடகிழக்கு, உண்மையில் தேசத்திற்கு புதிய ஒளி மற்றும் புதிய விடியலின் நிலம். எல்லாவற்றிற்கும் மேலாக, நாட்டின் முதல் சூரிய உதயம் இங்குதான் நடைபெறுகிறது. இந்த உணர்வுக்குத்தான் பூபென் தா தனது பாடலில் குரல் கொடுத்தார்.
சகோதர சகோதரிகளே,
நாம் அசாமின் வரலாற்றைக் கொண்டாடும்போது தான் பாரதத்தின் வரலாறு முழுமையடைகிறது. பாரதத்தின் மகிழ்ச்சியும் முழுமையடைகிறது. நாம் பெருமையுடன் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்.
நண்பர்களே,
நாம் இணைப்பைப் பற்றி பேசும்போது, மக்கள் பொதுவாக ரயில், சாலை அல்லது விமான இணைப்பைப் பற்றி நினைக்கிறார்கள். ஆனால் தேசத்தின் ஒற்றுமைக்கு, இன்னொரு இணைப்பும் சமமாக இருக்க வேண்டியது அவசியம். அது கலாச்சார இணைப்பு. கடந்த பதினொரு ஆண்டுகளில், வடகிழக்கின் வளர்ச்சியுடன், கலாச்சார இணைப்புக்கும் தேசம் பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளது. இது ஒரு பணி, இது இடைவிடாமல் தொடரும் ஒரு இயக்கம். இன்று, இந்த நிகழ்ச்சியில், நாம் அந்த இயக்கத்தின் ஒரு பகுதியைப் பார்க்கிறோம். அதிக காலத்திற்கு முன்பு அல்ல, வீர லச்சித் போர்புகானின் 400-வது பிறந்த நாளையும் தேசிய அளவில் கொண்டாடினோம். சுதந்திரப் போராட்டத்திலும், அசாம் மற்றும் வடகிழக்கின் எண்ணற்ற வீரர்கள் பல தியாகங்களைச் செய்தனர்! 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்' போது, வடகிழக்கின் சுதந்திரப் போராட்ட வீரர்களையும் இந்த பிராந்தியத்தின் வரலாற்றையும் மீண்டும் உயிர்ப்பித்தோம். இன்று, முழு தேசமும் அசாமின் வரலாறு மற்றும் பங்களிப்பை அறிந்து கொள்கிறது. சமீபத்தில், நாங்கள் தில்லியில் அஷ்டலட்சுமி மஹோத்சவையும் ஏற்பாடு செய்தோம். அந்த கொண்டாட்டத்திலும், அசாமின் வலிமையும் திறமையும் தெளிவாக தெரிந்தன.
நண்பர்களே,
சூழ்நிலை எதுவாக இருந்தாலும், அசாம் எப்போதும் தேசத்தின் பெருமைக்கு குரல் கொடுத்துள்ளது. இந்த குரலையே நாம் பூபென் தாவின் பாடல்களில் கேட்கிறோம். 1962-ம் ஆண்டு நடந்த போரை, அசாம் அந்த போரை நேரடியாக எதிர்கொண்டது. அந்த நேரத்தில், பூபென் தா அவரது பாடலின் மூலம் தேசத்திற்கு வலிமை அளித்தார். அந்த உறுதிமொழி நாட்டு மக்களை புதிய உற்சாகத்தால் நிரப்பியது.
நண்பர்களே,
அந்த உணர்வு, இன்றும் மக்களின் இதயங்களில் உறுதியாக இருக்கிறது. இதை நாம் ஆபரேஷன் சிந்தூரின் போதும் பார்த்தோம். பாகிஸ்தானின் பயங்கரவாத சதிகளுக்கு நாடு அத்தகைய பதில் அளித்தது, பாரதத்தின் வலிமையின் எதிரொலி உலகம் முழுவதும் ஒலித்தது. இந்தியாவின் எதிரி எந்த மூலையிலும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை நாங்கள் காட்டியுள்ளோம். புதிய இந்தியா அதன் பாதுகாப்பையும் பெருமையையும் எப்போதும் சமரசம் செய்யாது.
நண்பர்களே,
அசாமின் கலாச்சாரத்தின் ஒவ்வொரு பரிமாணமும் அற்புதமானது மற்றும் அசாதாரணமானது, அதனால்தான் நான் அடிக்கடி சொல்கிறேன், நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் 'ஏ ஃபார் அசாம்' என்று படிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதன் கலாச்சாரம், கண்ணியம் மற்றும் பெருமையுடன், அசாம் பெரும் சாத்தியக்கூறுகளின் ஆதாரமாகவும் உள்ளது. அசாமின் ஆடை, அதன் உணவு வகைகள், அதன் சுற்றுலா, அதன் தயாரிப்புகள்—இவை அனைத்திற்கும் நாடு முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் அங்கீகாரம் அளிக்க வேண்டும். உங்களுக்குத் தெரியும், நானே மிகவும் பெருமையுடன் அசாமின் காமோசாவை ஊக்குவிக்கிறேன். அதே போல், அசாமின் ஒவ்வொரு தயாரிப்பையும் உலகின் தொலைதூர மூலைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
நண்பர்களே,
பூபென் தாவின் முழு வாழ்க்கையும் தேசத்தின் இலக்குகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக இருந்தது. இன்று, பூபென் தாவின் பிறப்பின் இந்த நூற்றாண்டில், நாம் நாட்டிற்கு தற்சார்பின் உறுதிமொழியை எடுக்க வேண்டும். அசாமின் என் சகோதர சகோதரிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். நாம் உள்நாட்டு தயாரிப்புகளுக்கு குரல் கொடுக்கும் தூதர்களாக வேண்டும். நாம் உள்நாட்டு பொருட்களில் பெருமை கொள்ள வேண்டும். நாம் உள்நாட்டு பொருட்களை வாங்க வேண்டும், நாம் உள்நாட்டு பொருட்களை விற்க வேண்டும். நாம் இந்த பிரச்சாரங்களை எவ்வளவு வேகமாக முன்னெடுக்கிறோமோ, அவ்வளவு வேகமாக வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு நிறைவேறும்.
நண்பர்களே,
பூபென் தா, பதின்மூன்று வயதில், ஒரு பாடல் எழுதியிருந்தார்.
இந்த பாடலில், விளிம்பு நிலையில் உள்ள உரிமை ஒவ்வொரு நபரும் தனது உரிமைகளை மீண்டும் பெறும் ஒரு புதிய பாரதத்தை உருவாக்க அவர் உறுதிபூண்டார்.
என் சகோதர சகோதரிகளே,
பூபென் தா அன்று கண்ட புதிய பாரத்தின் தொலைநோக்குப் பார்வை இன்று நாட்டின் உறுதிப்பாடாக மாறியுள்ளது. நாம் இந்த உறுதிப்பாட்டுடன் இணைந்து கொள்ள வேண்டும். இன்று 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற உறுதிபாட்டை ஒவ்வொரு முயற்சியின், ஒவ்வொரு உறுதிப்பாட்டின் மையத்தில் வைக்க வேண்டிய நேரம். இதற்கான உத்வேகம் பூபென் தாவின் பாடல்களிலிருந்து, அவரது வாழ்க்கையிலிருந்து வரும். நம்முடைய இந்த உறுதிமொழிகளே பூபென் ஹசாரிகா அவர்களின் கனவுகளை நிறைவேற்றும். இந்த உணர்வுடன், பூபென் தாவின் நூற்றாண்டில் அனைத்து நாட்டு மக்களுக்கும் மீண்டும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன்: தயவுசெய்து உங்கள் மொபைல் போன்களை எடுத்து, ஃப்ளாஷ்லைட்டை இயக்கி, பூபென் தாவுக்கு மரியாதை செலுத்துங்கள். இந்த ஆயிரக்கணக்கான விளக்குகள் பூபென் தாவின் ஆன்மாவிற்கு அஞ்சலி செலுத்துகின்றன. இன்றைய தலைமுறை அவரது குரலை ஒளியால் அலங்கரிக்கிறது. மிக்க நன்றி!
***
(Release ID: 2166406)
SS/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2210742)
வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam