பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
அமெரிக்காவுடன் முதலாவது பெரிய எல்பிஜி இறக்குமதி ஒப்பந்தத்தை இந்தியா இறுதிசெய்துள்ளது
प्रविष्टि तिथि:
17 NOV 2025 2:11PM by PIB Chennai
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, இந்தியப் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 2026 ஒப்பந்த ஆண்டிற்கு அமெரிக்க வளைகுடா கடற்கரையிலிருந்து ஆண்டுக்கு சுமார் 2.2 மில்லியன் டன் திரவ எரிவாயு (எல்பிஜி) இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை வெற்றிகரமாக இறுதி செய்துள்ளதாகப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி இன்று அறிவித்தார். இது இந்தியாவின் வருடாந்திர திரவ எரிவாயு இறக்குமதியில் சுமார் பத்து சதவீதத்தையும் இந்திய சந்தைக்கான முதலாவது அமெரிக்க திரவ எரிவாயு ஒப்பந்தத்தையும் குறிக்கிறது. இந்த முடிவை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வளர்ச்சி என்று குறிப்பிட்ட அமைச்சர், உலகின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் எல்பிஜி சந்தைகளில் ஒன்று இப்போது அமெரிக்காவிற்குத் திறக்கப்பட்டுள்ளது என்றார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு மிகக் குறைந்த விலையில் எல்பிஜி வழங்குவதை உறுதி செய்துள்ளதாக திரு பூரி எடுத்துரைத்தார். கடந்த ஆண்டு உலகளாவிய எல்பிஜி விலை 60 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்த போதும், உண்மையான செலவு ரூ. 1100 -ஐத் தாண்டிய போதும், உஜ்வாலா பயனாளிகள், சுமார் ரூ. 500–550 மானிய விலையில் சிலிண்டர்களைப் பெற்றனர். சர்வதேச எல்பிஜி விலை உயர்வு காரணமாக குடும்பங்களை - குறிப்பாக தாய்மார்களையும் சகோதரிகளையும் பாதுகாக்க, மத்திய அரசு கடந்த ஆண்டில் ரூ. 40,000 கோடிக்கு மேல் நிதிச் சுமையை ஏற்றுக்கொண்டது.
2026 ஆம் ஆண்டிற்கான இந்தப் புதிய ஏற்பாடு, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதில் மற்றொரு படியாகும் என்றும், அதே நேரத்தில் லட்சக் கணக்கான வீடுகளுக்கு தூய்மையான சமையல் எரிபொருளை மலிவு விலையில் அணுகுவதை உறுதி செய்யும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2190755
****
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2190965)
आगंतुक पटल : 28