பிரதமர் அலுவலகம்
மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் திரு. நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
प्रविष्टि तिथि:
13 SEP 2025 11:23AM by PIB Chennai
மிசோரமின் ஐஸ்வாலில் ரூ.9000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள மேம்பாட்டுப் பணிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில், காணொலி மூலம் உரையாற்றிய பிரதமர், சுதந்திர இயக்கமாக இருந்தாலும் சரி, தேசத்தைக் கட்டியெழுப்புவதாக இருந்தாலும் சரி, மிசோரம் மக்கள் எப்போதும் பங்களிக்க முன்வந்துள்ளனர் என்பதைச் சுட்டிக்காட்டினார். தியாகம், சேவை, தைரியம் மற்றும் இரக்கம் ஆகியவை மிசோ சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ள மதிப்புகள் என்பதை திரு. மோடி கூறினார். “இன்று, மிசோரம் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது” என்று பிரதமர் கூறினார்.
இந்தியாவின், குறிப்பாக மிசோரம் மக்களுக்கு, இந்த நாள் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று வர்ணித்த திரு. மோடி, இன்று முதல், ஐஸ்வால் இந்தியாவின் ரயில்வே வரைபடத்தில் இடம்பெறும் என்றார். மக்களின் இதயங்களும் தேசமும் எப்போதும் நேரடியாக இணைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்திய பிரதமர், முதல் முறையாக, மிசோரமில் உள்ள சாய்ராங், ராஜதானி எக்ஸ்பிரஸ் மூலம் தில்லியுடன் நேரடியாக இணைக்கப்படும் என்று அறிவித்தார். இது வெறும் ரயில் இணைப்பு மட்டுமல்ல, மாற்றத்திற்கான ஒரு உயிர்நாடி என்றும், இது மிசோரம் மக்களின் வாழ்க்கையிலும் வாழ்வாதாரத்திலும் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
நீண்ட காலமாக, ஓரங்கட்டப்பட்ட வடகிழக்கு பகுதி மக்கள், இப்போது தேசிய நீரோட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளனர் என்றும் அவர் கூறினார். கடந்த 11 ஆண்டுகளாக, வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக அரசு தொடர்ந்து பாடுபட்டு வருவதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்தப் பகுதி இந்தியாவின் வளர்ச்சிக்கான இயந்திரமாக மாறி வருவதாக அவர் உறுதிப்படுத்தினார்.
மிசோராம் திறமையான இளைஞர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக் காட்டிய திரு மோடி, அவர்களை மேம்படுத்துவதே அரசின் நோக்கம் என்று கூறினார். உலகளாவிய விளையாட்டுகளுக்கான ஒரு முக்கிய மையமாக இந்தியா வேகமாக வளர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டிய பிரதமர், இந்த வளர்ச்சி நாட்டில் விளையாட்டு பொருளாதாரத்திற்கும் வழிவகுப்பதாக குறிப்பிட்டார். மிசோரமின் வளமான விளையாட்டு பாரம்பரியத்தை அவர் எடுத்துரைத்தார், கால்பந்து மற்றும் பிற துறைகளில் பல சாம்பியன்களை உருவாக்குவதில் அதன் பங்களிப்பைக் குறிப்பிட்டார். அரசின் விளையாட்டுக் கொள்கைகள் மிசோரமுக்கும் பயனளிக்கின்றன என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.
நாட்டிலும் வெளிநாட்டிலும் வடகிழக்கின் அழகிய கலாச்சாரத்தின் தூதராகப் பணியாற்றுவதில் பிரதமர் மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வடகிழக்கின் ஆற்றலை வெளிப்படுத்தும் தளங்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். சில மாதங்களுக்கு முன்பு தில்லியில் நடைபெற்ற அஷ்டலட்சுமி விழாவில் பங்கேற்றதை நினைவு கூர்ந்த திரு. மோடி, இந்த விழா வடகிழக்கின் ஜவுளி, கைவினைப்பொருட்கள், புவிசார் குறியீடு செய்யப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சுற்றுலாத் திறனை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிட்டார். எழுச்சி பெறும் வடகிழக்கு உச்சி மாநாட்டில், முதலீட்டாளர்கள் இந்தப் பிராந்தியத்தின் பரந்த ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிப்பதாக பிரதமர் கூறினார். மேலும் இந்த உச்சிமாநாடு மிகப்பெரிய முதலீடுகள் மற்றும் திட்டங்களுக்கு வழி வகுக்கும் என்றும் கூறினார்.
வளர்ச்சியடைந்த இந்தியா அதன் மக்களுக்கு அதிகாரமளிப்பதன் மூலம் கட்டமைக்கப்படும் என்றும், இந்தப் பயணத்தில் மிசோரம் மக்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மிசோரம் ஆளுநர் ஜெனரல் வி.கே. சிங், முதலமைச்சர் திரு லால்துஹோமா, மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
***
(Release ID: 2166198)
AD/PKV/RJ
(रिलीज़ आईडी: 2166251)
आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Khasi
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam