சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமையில் கோயம்புத்தூரில் உலக யானைகள் தினம் 2025 நாளை கொண்டாடப்படுகிறது
இடுகை இடப்பட்ட நாள்:
11 AUG 2025 1:34PM by PIB Chennai
இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு வனத்துறையின் ஒத்துழைப்புடன் கோயம்புத்தூரில் நாளை (2025 ஆகஸ்ட் 12) உலக யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது. தொடக்க நிகழ்ச்சிக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை இணையமைச்சர் திரு கீர்த்தி வர்தன் சிங் மற்றும் தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் காதி அமைச்சர் திரு ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இயற்கையின் படைப்பில் பூமியின் அழகான உயிரினங்களில் ஒன்றான யானைகளை பாதுகாக்க வேண்டுமென்ற சர்வதேசக் கோட்பாட்டை உறுதிசெய்யும் அதேவேளையில், இந்த வருடாந்திர நிகழ்வானது யானைகள் நீண்டகாலம் உயிர்வாழ்வதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளையும் வலுப்படுத்துவதாக அமையும்.

உலகிலுள்ள காட்டுயானைகளின் எண்ணிக்கையில் சுமார் 60% யானைகள் இந்தியாவில்தான் உள்ளன. இந்தியாவில் யானைகளின் வழித்தடங்கள் அறிக்கை 2023-ன் படி 33 யானைகள் சரணாலயங்களும், 150 அடையாளம் காணப்பட்ட யானை வழித்தடங்களும் உள்ளன. விரிவான சட்டப் பாதுகாப்பு, வலிமையான நிறுவன அமைப்புகள் மற்றும் பரவலான பொதுமக்கள் ஆதரவு ஆகியவற்றுடன் வனவிலங்குகளைப் பாதுகாத்தல் மற்றும் மனித நல்வாழ்வு என்ற முரண்பட்ட இரண்டையும் ஒருங்கிணைத்துப் பராமரிப்பதில் இந்தியா தலைமையிடத்தில் உள்ளதை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன. யானைகள் தேசிய பாரம்பரிய விலங்கு என்ற மதிப்பைப் பெற்றுள்ளதோடு நாட்டின் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தில் ஆழமாகப் பிண்ணிப் பிணைந்துள்ளன.
உயிரியல் மற்றும் கலாச்சார செழுமைக்கு புகழ்பெற்ற தமிழ்நாட்டில் கணிசமான எண்ணிக்கையில் யானைகள் உள்ளன. மனிதர் – யானைகளுக்கு இடையிலான மோதலைக் களைவதில் தமிழ்நாடு முக்கியமான பங்கினை வகிக்கிறது. உலக யானைகள் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நாளை கோயம்புத்தூரில் மனிதர்-யானைகள் மோதல் குறித்த பயிலரங்கும் நடைபெறுகிறது. யானைகள் உணவு மற்றும் நீர் தேடி மனித குடியிருப்புகளுக்கு வருவது அதிகரித்துவரும் சூழலில் நடைபெறவுள்ள இந்த பயிலரங்கமானது புத்தாக்கமான தீர்வுகளைக் கண்டறிவதிலும் மாநிலங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துவதாக அமையும்.

இந்தப் பயிலரங்கில் நிபுணர்கள், கொள்கை வகுப்பாளர்கள், இயற்கை பாதுகாவலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 5000 பள்ளிக்கூடங்களில் இருந்து 12 லட்சம் பள்ளி மாணவர்கள் முன்னெடுக்கும் நாடு தழுவிய விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நாளை நடைபெறுகிறது.
***
(Release ID: 2154988)
AD/TS/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2155067)
வருகையாளர் எண்ணிக்கை : 69