குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Posted On: 23 JUN 2025 1:25PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூன் 23, 2025) புதுதில்லியில் நடைபெற்ற இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், நம் நாட்டின் வரலாற்றில், கணக்காளர்கள் சமூகத்தில் மிகுந்த மதிப்பைப் பெற்றுள்ளனர் என்று கூறினார். கணக்கியல் மற்றும் பொறுப்புகள் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளதே இதற்கு காரணமாகும். இந்த துறையின் உயர் பொறுப்புணர்வு காரணமாக, அது சிறப்பான முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

நவீன காலத்தில், இந்த வளமான பாரம்பரியத்தை கொண்டுள்ள இந்திய செலவு கணக்காளர்கள் நிறுவனமானது இதர துறைகளுக்கும் முன்மாதிரியாக செயல்படுகிறது. நாட்டில் செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்களின் தொழில் முறையை  ஒழுங்குபடுத்துவதற்காகவும் மேம்படுத்துவதற்காகவும் இந்த நிறுவனம் 1944-ம் ஆண்டில் நிறுவப்பட்டது. நாடு  சுதந்திரம் அடைந்த பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சாட்சியாக இந்த நிறுவனம் அமைந்துள்ளது. உலக அளவில் வலிமையான பொருளாதார நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதில் இந்த நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

இந்த நிறுவனம் கொள்கை வகுப்பாளர்கள், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு செலவினங்களை திறம்பட நிர்வகிப்பதற்கான உத்திகளையும், கையேடுகளையும் உருவாக்குவதில், உயர் மதிப்பிலான ஆதரவை வழங்குகிறது. இதற்கிடையில், தொழிற்சாலைகளில் பொருட்களுக்கான அடக்க விலையை கணக்கிடுவதுடன், நிர்வாக ரீதியிலும் கணக்காளர்கள் செயல்பட்டு வருவதாக குடியரசுத் தலைவர் கூறினார்.

பருவநிலை மாற்றம் காரணமாக, உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுவரும் சூழலில், நிலைத்தன்மை என்பது வெறும் கோஷமல்ல, இன்றியமையாத தேவையாகும்.  பெருநிறுவனங்கள் லாப நோக்குடன் செயல்பட்டு வந்த காலம் முடிவடைந்து விட்டது என்றும், தற்போது சுற்றுச்சூழலுக்கான செலவுகளை மனதில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். செலவு கணக்காளர்கள் தங்களது திறனைக் கொண்டு சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

மாணவர்கள் நிதிசார் கணக்கியலுக்கு அப்பாற்பட்டு தங்களது பொறுப்புணர்ந்து செயல்படுவதை மனதில் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். வரும் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு பங்களிக்கும் வகையில், தனித்துவ செயல்பாடுகளுடன் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் கேட்டுக் கொண்டார். இந்திய செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர்கள் நிறுவனம்  வழங்கும் கல்வி அவர்களை துறைசார்ந்த நிபுணர்களாக உருவாக்குவதுடன், நாட்டை கட்டமைப்பவர்களாக மாற்ற வகை செய்யும் என்றும் குடியரசுத் தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

***

(Release ID=2138851)

AD/TS//SV/LDN/KR/DL


(Release ID: 2138975)