பிரதமர் அலுவலகம்
இந்திய - குரேஷிய குடியரசின் பிரதமர்கள் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
18 JUN 2025 11:40PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜாக்ரெப் நகரில் குரோஷிய குடியரசின் பிரதமர் திரு ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக்கை சந்தித்து பேசினார். இந்தியப் பிரதமர் குரேஷியாவிற்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும். முன்னதாக வரலாற்று சிறப்புமிக்க பான்ஸ்கி ட்வோரி அரண்மனைக்கு வருகை தந்த பிரதமருக்கு அந்நாட்டு பிரதமர் பிளென்கோவிக் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தார்.
இரு நாட்டு தலைவர்கள் முன்னிலையில் உயர்நிலை பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையில் வர்த்தகம், முதலீடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், பாதுகாப்பு, விண்வெளி, கலாச்சாரப் பரிமாற்றம், மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. உள்கட்டமைப்பு, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, டிஜிட்டல்மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்து உற்பத்தி, சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். குரேஷியாவில் இந்தியாவின் கலாச்சாரம், யோகா மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் இரு நாட்டு மக்களுக்கு இடையே பரஸ்பரம் நம்பிக்கையைக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். சர்வதேச யோகா தினம் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் குரேஷியாவில் உள்ள அனைத்து யோகா ஆர்வலர்களுக்கும் பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் வர்த்தக கூட்டாண்மையை ஊக்குவிக்கவும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினர். இந்தியா-மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளாதார வழித்தடம் உட்பட போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான விவகாரங்கள் குறித்து தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். ஐநா சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், பருவநிலை மாற்றத்தைத் தடுக்கும் நடவடிக்கைகள், தீவிரவாத செயல்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வது குறித்தும் இருதலைவர்களும் விரிவாக விவாதித்தனர். தீவிரவாதத்திற்கு இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு குரேஷியா அளித்த வலுவான ஆதரவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
விவசாயம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சாரத் துறைகளில் நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பிரதமர் திரு நரேந்திர மோடியை கௌரவிக்கும் வகையில் அந்நாட்டு பிரதமர் திரு பிளென்கோவிக் இரவு விருந்தளித்தார். பின்னர் இந்தியாவுக்கு வருகை தருமாறு அந்நாட்டு பிரதமருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
****
(Release ID: 2137540)
AD/SV/KPG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2137695)
வருகையாளர் எண்ணிக்கை : 24
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam