பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் முன்னாள் முதலமைச்சர் திரு விஜய் ரூபானியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

Posted On: 13 JUN 2025 2:53PM by PIB Chennai

அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் துன்பகரமாக மரணமடைந்த  குஜராத் முன்னாள் முதலமைச்சர் திரு விஜய் ரூபானியின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். ராஜ்கோட் மாநகராட்சி, மாநிலங்களவை உறுப்பினர், குஜராத் பாஜக தலைவர், மாநில அரசில்  கேபினட் அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் அவர் ஆற்றிய பங்களிப்புகளை நினைவு கூர்ந்த திரு. மோடி, திரு ரூபானியின் சிறப்புமிக்க வாழ்க்கையை எடுத்துரைத்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;

“திரு விஜய்பாய் ரூபானி அவர்களின் குடும்பத்தினரை சந்தித்தேன்.

விஜய்பாய் நம்மிடையே இல்லை என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. பல தசாப்தங்களாக நான் அவரை அறிவேன். மிகவும் சவாலான சில காலகட்டங்களில் கூட, நாங்கள் தோளோடு தோள் சேர்ந்து பணியாற்றி உள்ளோம். விஜய்பாய் பணிவானவராகவும், கடின உழைப்பாளியாகவும், கட்சியின் சித்தாந்தத்தில் உறுதியாகவும் இருந்தார். பதவி நிலைகளில் உயர்ந்து,  பல்வேறு பொறுப்புகளை வகித்தார், குஜராத் முதலமைச்சராக விடாமுயற்சியுடன் பணியாற்றினார்.”

"ராஜ்கோட் மாநகராட்சியில், மாநிலங்களவை உறுப்பினராக,  குஜராத் பாஜக தலைவராக, மாநில அரசில் கேபினட் அமைச்சராக என ஒவ்வொரு பணியிலும் அவர் தன்னை தனித்துவமாகக் காட்டினார்."

"விஜய்பாய் குஜராத் முதலமைச்சராக  இருந்தபோது, அவரும் நானும் இணைந்து பணியாற்றினோம். குஜராத்தின் வளர்ச்சிப் பாதையை மேம்படுத்தும் பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார், குறிப்பாக 'சிரமமில்லாமல் வாழ்க்கையை வாழ்வதற்கு" வாய்ப்புகளை அதிகரிப்பதில் அக்கறை கொண்டு இருந்தார். நாங்கள் கொண்டிருந்த தொடர்புகளை எப்போதும் போற்றுவேன். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் என் எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி."

***

(Release ID: 2136128)

AD/TS/PKV/KR

 


(Release ID: 2136166)