ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜூலை 1 முதல் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலியில் ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்கள் மட்டுமே தட்கல் முறையில் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்

Posted On: 11 JUN 2025 4:27PM by PIB Chennai

தட்கல் முறையில் ரயில் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதி  செய்யும் வகையிலும், பயணிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலும், ரயில்வே சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இதன்படி ரயில் பயணிகளுக்கான அங்கீகாரத்தை மேம்படுத்தும் வகையில் கொண்டு வரப்படும் இத்திட்டம் முன்பதிவு பயணச் சீட்டுகள் தொடர்பான தவறான பயன்பாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

புதிய விதிகள் பின்வருமாறு:

1. ஆன்லைன் தட்கல் முறையிலான பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கான ஆதார் அங்கீகாரம்:

2025 ஜூலை 1 முதல் அமலுக்கு வரும், இந்த புதிய விதியின்படி ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம்  தட்கல் முறையில் பயணச் சீட்டுகளை ஆதார் அங்கீகாரம் பெற்ற பயனர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

மேலும், 2025 ஜூலை 15 முதல் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படும் தட்கல் பயணச் சீட்டு முன்பதிவுகளுக்கு ஆதார் அடிப்படையிலான ஒருமுறை கடவு எண் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பயணியர் முன்பதிவு கவுண்டர்கள் மற்றும் முகவர்களின் கணினி அடிப்படையிலான ஒருமுறை கடவு எண் அங்கீகாரம்:

கணினிமயமாக்கப்பட்ட பயணிகள் முன்பதிவு அமைப்பு கவுண்டர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலம் தட்கல் பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் போது பயணிகளால் வழங்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஒருமுறை கடவு எண் அங்கீகாரம் தேவைப்படும்.

இந்த விதிமுறை 2025 ஜூலை 15 முதல் அமலுக்கு வருகிறது.

அங்கீகரிக்கப்பட்ட முகவர்களுக்கான முன்பதிவு நேரக் கட்டுப்பாடு:

மொத்தமாக முன்பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில், ரயில்வேயின் அங்கீகரிக்கப்பட்ட பயணச் சீட்டு முகவர்கள் முன்பதிவுக்கான இணையதள பக்கத்தில் முதல் 30 நிமிடங்களுக்கு முன்பதிவு பயணச் சீட்டு தொடங்கும் முதல் நாளில் தட்கல் முறையில் பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

குளிர் சாதன வசதியுடன் கூடிய வகுப்புகளுக்கு, இந்த நேரக் கட்டுப்பாடு காலை 10:00 மணி முதல் 10:30 மணி வரையிலும், குளிர் சாதன வசதி அல்லாத வகுப்புகளுக்கு, காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும் பொருந்தும்.

தட்கல் முறையில் பயணச் சீட்டு முன்பதிவு செய்வதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும், இத்திட்டத்தின் பயன்கள் ரயில் பயணிகளை சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்தும் வகையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் அமைப்பு ரீதியிலான தேவையான மாற்றங்களைச் செய்து, அதற்கேற்ப அனைத்து மண்டல ரயில்வே மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்குத் தெரிவிக்க வேண்டுமென்று ரயில்வே தகவல் அமைப்பு மையம் மற்றும் ஐஆர்சிடிசி-க்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து பயணிகளும் இந்த புதிய மாற்றங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று ரயில்வே அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் பயணிகளின் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயனர் தங்களது சுயவிவரங்களுடன் ஆதார் இணைப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

***

(Release ID: 2135694)
AD/TS/SV/RR/KR/DL


(Release ID: 2135763)