பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் ரூ.47,600 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.


ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் உள்நாட்டு ஆயுதங்கள் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் சக்தியை உலகம் பார்த்தது: பிரதமர்

மிகப் பெரிய மெட்ரோ நகரங்களில் கிடைத்த உள்கட்டமைப்பு, வசதிகள், ஆதார வளங்கள் ஆகியவற்றை இப்போது கான்பூர் காண்கிறது: பிரதமர்

தொழில் துறை சாத்தியங்கள் நிறைந்த மாநிலமாக உத்தரப் பிரதேசத்தை நாங்கள் மாற்றி வருகிறோம்: பிரதமர்

Posted On: 30 MAY 2025 4:37PM by PIB Chennai

உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் இன்று ரூ.47,600 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அவர், கான்பூருக்கான பயணம் முதலில் 2025 ஏப்ரல் 24 என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக அது ரத்து செய்யப்பட்டது என்றார். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலியான கான்பூரின் புதல்வர் திரு சுபம் துவிவேதிக்கு அவர் அஞ்சலி செலுத்தினார். நாடு முழுவதும் உள்ள சகோதரிகளின் புதல்விகளின் வலி, துயரம், கோபம், வேதனை ஆகியவற்றை தாம் உணர்வதாகப் பிரதமர் குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூர் செயல்படுத்தப்பட்டபோது இந்த கூட்டான கோபத்தை உலகம் கண்ணுற்றதாக அவர் கூறினார். ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், பாகிஸ்தானில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.  இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்பதற்கான நிர்ப்பந்தம் பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஏற்பட்டது. நமது ராணுவத்தினரின் துணிவுக்கு வணக்கம் செலுத்திய பிரதமர், சுதந்திரப் போராட்ட பூமியிலிருந்து அவர்களின் வீரத்திற்கு மரியாதை செலுத்துவதாகக் கூறினார். ஆபரேஷன் சிந்தூரின்போது கருணைக்காக யாசித்த எதிரிகள், ஆபரேஷன் சிந்தூர் முடிவடையாத நிலையில், எந்த மாயையிலும் இருக்க வேண்டாம் என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவின் மூன்று தெளிவான கோட்பாடுகள் பற்றி பிரதமர் எடுத்துரைத்தார். முதலாவதாக ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் தீர்மானமான பதிலடியை இந்தியா வழங்கும். இதற்கான நேரம், நடைமுறை, நிபந்தனைகள் ஆகியவை இந்திய ராணுவத்தால் மட்டுமே தீர்மானிக்கப்படும். இரண்டாவதாக அணு ஆயுத அச்சுறுத்தல்களால் இனிமேலும் இந்தியாவை மிரட்ட முடியாது. இத்தகைய எச்சரிக்கைகள் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட மாட்டாது. மூன்றாவதாக பயங்கரவாதத்தின் மூளையாக செயல்படுவோரையும் அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் அரசுகளையும் ஒரே கண்ணோட்டத்தில்தான் இந்தியா பார்க்கும். பாகிஸ்தானின் அரசு மற்றும் அரசு சாராத செயல்பாட்டாளர்கள் என்ற பாகுபாடு இனிமேலும் ஏற்றுக் கொள்ளப்படாது. எதிரிகள் எங்கிருந்தாலும் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று பிரதமர் உறுதிபடத் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களையும் மேக் இன் இந்தியாவின் பலத்தையும் ஆபரேஷன் சிந்தூர் உலகிற்குக் காட்டியுள்ளது என்று திரு மோடி கூறினார். பிரம்மோஸ் ஏவுகணை உள்ளிட்ட இந்தியாவின் உள்நாட்டு ஆயுதங்கள் எதிரியின் பிராந்தியத்திற்குள் பலமான அழிப்புக்குக் காரணமாக அமைந்தன. இந்தத் திறனானது தற்சார்பு இந்தியாவின் நேரடி பயனாகும் என்று அவர் கூறினார். ராணுவ மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்கு இந்தியா வெளிநாடுகளை சார்ந்திருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்கு தொடங்கிய நாடு பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் தற்சார்பாக மாறுவதற்கு பாடுபட்டு வருகிறது என்று அவர் கூறினார். பாதுகாப்புத் துறையில் தற்சார்பு என்பது பொருளாதாரத்திற்கு முக்கியமானது மட்டுமின்றி தேச பெருமிதத்திற்கும், இறையாண்மைக்கும் கூட முக்கியமானதாகும். சார்புத்தன்மையிலிருந்து இந்தியா விடுபடுவதை வலியுறுத்திய திரு மோடி, தற்சார்பு இந்தியா முன்முயற்சியை அரசு தொடங்கியது என்றும், பாதுகாப்புத் துறையில் தற்சார்பை எட்டுவதற்கான முயற்சியில் உத்தரப் பிரதேசத்தின் பங்களிப்பு மிகப் பெரியது என்றும் பெருமிதத்துடன் கூறினார். கான்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயுதத் தொழிற்சாலை போன்ற 7 தொழிற்சாலைகள் நவீன அலகுகளாக மாற்றப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். உத்தரப் பிரதேசத்தில் மிகப் பெரிய பாதுகாப்பு வழித்தடம் அமைக்கப்பட்டதை எடுத்துரைத்த அவர், பாதுகாப்புத் துறையில் தற்சார்பு இந்தியா திட்டத்தின் முக்கிய மையமாக கான்பூர் உருவாகி வருகிறது என்றார்.

பாரம்பரிய தொழில்துறைகள் மாற்றப்படும்போது அந்த இடங்களில் பாதுகாப்பு தளவாட தொழில் நிறுவனங்கள் அமைக்கப்படுவதாக கூறிய பிரதமர், அமேதியில் ஏகே 203 வகை துப்பாக்கிகள் உற்பத்தி ஏற்கனவே தொடங்கியுள்ளது என்றார். ஆபரேஷன் சிந்தூரில் பிரம்மோஸ் ஏவுகணை முக்கியப் பங்களிப்பு செய்ததாக குறிப்பிட்ட அவர், உத்தரப் பிரதேசம் பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் புதிய தளமாக உள்ளது என்றார். எதிர்காலத்தில் கான்பூரும், உத்தரப் பிரதேசமும் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியாவின் பயணத்திற்கு தலைமை வகிக்கும் என்று அவர் கூறினார். புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு அவற்றுக்கு முதலீடுகள் வரும்போது உள்ளூர் இளைஞர்கள் சிறப்பான வேலைவாய்ப்புகளை பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசத்துக்கும் கான்பூருக்கும் வளர்ச்சியில் புதிய உச்சங்களை தொடுவதற்கு மத்திய மாநில அரசுகள் உயர் முன்னுரிமை அளிக்கின்றன என்று கூறிய திரு மோடி, இந்த முன்னேற்றம் கான்பூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க புகழை மீட்டெடுக்கும் என்றார். முந்தைய அரசுகள் நவீன தொழிற்சாலைகளின் தேவைகளை நிராகரித்ததால் கான்பூரில் தொழிற்சாலைகள் வீழ்ச்சியடைந்தன என்று அவர் கூறினார். குடும்ப ஆட்சியால் கான்பூர் மட்டுமல்ல உத்தரப் பிரதேசம் முழுவதும் வளர்ச்சியில் பின்னடைந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கு இரண்டு தூண்கள் தேவை என்பதை வலியுறுத்திய பிரதமர், ஒன்று எரிசக்தித் துறை என்றார். இது சீரான மின் விநியோகத்தை உறுதிசெய்யும் என்றும், வலுவான உள்கட்டமைப்பும், போக்குவரத்து தொடர்பும் முக்கியமானவை என்றும் அவர் கூறினார். 600 மெகாவாட் திறன் கொண்ட பான்கி மின் உற்பத்தித் திட்டம், 600 மெகாவாட் திறன் கொண்ட நெய்வேலி மின் உற்பத்தித் திட்டம், 1320 மெகாவாட் திறன் கொண்ட ஜவஹர்பூர் மின் உற்பத்தித் திட்டம், 660 மெகாவாட் திறன் கொண்ட ஒப்ரா-சி மின் உற்பத்தித் திட்டம், 660 மெகாவாட் திறன் கொண்ட குஜாரா மின் உற்பத்தித் திட்டம் உட்பட பல மின் உற்பத்தித் திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். உத்தரப் பிரதேசத்தின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதில் இவை குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளாகும். இந்த மின் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது மாநிலத்தில் மின்சாரம் கிடைப்பது மேலும் அதிகரிக்கும். இதனால் தொழில் துறை வளர்ச்சி துரிதமாகும் என்று பிரதமர் தெரிவித்தார். ரூ.47,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பதும், அடிக்கல் நாட்டப்பட்டிருப்பதும் வளர்ச்சிக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக அவர் கூறினார். மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் வய வந்தனா அட்டைகள் வழங்கப்பட்டிருப்பது பற்றி குறிப்பிட்ட பிரதமர், இவை அவர்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சையை உறுதி செய்வதாகவும் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் இதர பயனாளிகள் உதவி பெறுவதாகவும் கூறினார்.

நவீன, வளர்ச்சியடைந்த உத்தரப் பிரதேசத்தை கட்டமைப்பதை நோக்கி மத்திய மாநில அரசுகள் தீவிரமாக பணியாற்றுவதாக கூறிய திரு மோடி, மிகப் பெரிய மெட்ரோ நகரங்களில் கிடைத்த உள்கட்டமைப்பு, வசதிகள், ஆதார வளங்கள் ஆகியவற்றை இப்போது கான்பூர் காண்கிறது என்றார். சில ஆண்டுகளுக்கு முன் கான்பூரில் முதலாவது மெட்ரோ சேவையை அரசு வழங்கியதை நினைவுகூர்ந்த அவர், தற்போது கான்பூர் மெட்ரோவின் ஆரஞ்சு வழித்தடம் கான்பூர் சென்ட்ரலை அடைந்துள்ளது என்றார். மெட்ரோ நெட்வொர்க் மேல்நிலை வழித்தடத்தில் தொடங்கி இப்போது சுரங்கப்பாதை வழியாக நகரின் முக்கியமான பகுதிகளை தடையின்றி இணைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். நெரிசல் மிக்க பகுதிகள், குறுகலான சாலைகள், நவீன நகர்ப்புற திட்டமிடல் குறைபாடு போன்றவை காரணமாக கான்பூரில் உயரிய உள்கட்டமைப்புகளை அல்லது மெட்ரோ சேவைகளை அமல்படுத்த முடியுமா என்று மக்களிடம் சந்தேகம் இருந்தது. இந்த சவால்கள் கான்பூரிலும், மற்ற பெரிய நகரங்களிலும் வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளின. போக்குவரத்து நெரிசல் மோசமடைந்தது. நகரின் வளர்ச்சி குறைந்தது. ஆனால் இன்று அதே கான்பூர் வளர்ச்சியில் புதிய இடத்தைப் பெற்றுள்ளது. மெட்ரோ சேவைகளின் நேரடி பயன்கள் மக்களுக்கு கிடைப்பது மட்டுமின்றி ஒரு பெரிய வணிக மையம் என்ற வகையில் இந்த சேவை மூலம் வணிகர்கள் நவீன் மார்க்கெட், பாடா சவ்ரஹா ஆகிய இடங்களுக்கு எளிதாக செல்ல முடியும் என்று அவர் கூறினார். ஐஐடி கான்பூர் மாணவர்களும், பொதுமக்களும் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைவதில் குறிப்பிடத்தக்க பயண காலத்தை சேமிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார். ஒரு நகரின் வேகம் அதன் வளர்ச்சியை தீர்மானிக்கிறது என்பதுடன் இந்த விரிவடைந்த போக்குவரத்து இணைப்பும், போக்குவரத்து வசதிகளும் உத்தரப் பிரதேசத்தின் வளர்ச்சியில் புதிய, நவீன வடிவமைப்பை ஏற்படுத்துகின்றன என்று திரு மோடி கூறினார்.

உள்கட்டமைப்பு, போக்குவரத்து இணைப்பு போன்ற துறைகளில் உத்தரப் பிரதேச மாநிலம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் குறித்து எடுத்துரைத்த பிரதமர், அம்மாநிலத்தின் முந்தைய அடையாளமான பள்ளங்கள் நிறைந்த சாலைகள் என்ற நிலையைக் கடந்து வெகுதூரம் முன்னேறியுள்ளது என்று தெரிவித்தார். அம்மாநிலம் தற்போது அகலமாக விரைவுச் சாலைக் கட்டமைப்பிற்கு பெயர் பெற்ற்றுள்ளது என்று கூறினார். ஒரு காலத்தில், மாலை வேளைகளில் மக்கள் வெளியே செல்வதைத் தவிர்த்து வந்த நிலையில், அம்மாநிலத்தின் நெடுஞ்சாலைகள் தற்போது இருபத்தி நான்கு மணிநேரமும்  பயணிகளின் நடமாட்டத்தால் பரபரப்பாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். கான்பூர் நகர மக்கள் இந்த மாற்றத்தை பிறரைக் காட்டிலும் மிக நன்றாகப் புரிந்து கொள்கிறார்கள் என்றும் அவர் கூறினார். விரைவில், கான்பூர்-லக்னோ விரைவுச் சாலை லக்னோ நகரத்திற்கான பயண நேரத்தை 40–45 நிமிடங்களாகக் குறைக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். கூடுதலாக, லக்னோ -  பூர்வாஞ்சல் விரைவுச் சாலைக்கும் இடையே நேரடி போக்குவரத்து இணைப்பு ஏற்படுத்தப்படும் என்றும், அதே நேரத்தில் கான்பூர்-லக்னோ விரைவுச் சாலை கங்கா விரைவுச் சாலையுடன் இணைக்கப்படும் என்றும் தெரிவித்த அவர், இது இரு மார்க்கத்திலும்  பயண தூரத்தையும் நேரத்தையும் வெகுவாக குறைக்க உதவிடும் என்றும் தெரிவித்தார். ஃபரூக்காபாத் - அன்வர்கஞ்ச் பிரிவில் ஒற்றை ரயில் பாதை காரணமாக, கான்பூரில் வசிக்கும் மக்கள்   நீண்ட காலமாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளனர்  என்பதை பிரதமர் ஒப்புக்கொண்டார். பயணிகள் 18 இடங்களில் ரயில் பாதைகளின் குறுக்கே உள்ள கடவுச் சாலைகளால் சிரமப்படுவதாகவும், இதன் கதவுகள் அடிக்கடி மூடப்படுவதால் கால தாமதத்தை  எதிர்கொள்வதாகவும், இதனால் பயணத்திற்கு இடையூறு ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பகுதியில் ஒரு உயர்மட்ட  ரயில் பாதையை அமைப்பதற்கும், சீரான போக்குவரத்து இயக்கத்தை கணிசமாக மேம்படுத்துவதற்கும், வாகனங்களின் வேகத்தை அதிகரிப்பதற்கும், மாசுபாட்டைக் குறைப்பதற்கும் ரூ. 1,000 கோடி முதலீடு செய்யப்படும் என்று பிரதமர் அறிவித்தார். மிக முக்கியமாக, இந்த முயற்சி கான்பூர் மக்களின் விலைமதிப்பற்ற நேரத்தை மிச்சப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கான்பூர் மத்திய ரயில் நிலையத்தின் தற்போதைய மாற்றத்தை சுட்டிக் காட்டிய திரு. நரேந்திர மோடி, இது உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட ரயில் நிலையமாக மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். விரைவில், இந்த ரயில் நிலையம் நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன்  ஒரு விமான நிலையத்தை ஒத்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். அமிர்த பாரத் ரயில் நிலைய முயற்சியின் கீழ், உத்தரபிரதேச மாநிலத்தில் 150 - க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை மத்திய அரசு உருவாக்கி வருவதாகவும், இது ரயில் போக்குவரத்துக்கான இணைப்பு மற்றும் பயணிகள் அனுபவத்தை மேம்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான சர்வதேச விமான நிலையங்களைக் கொண்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உருவெடுத்துள்ளதாக கூறிய திரு, நரேந்திர மோடி, நெடுஞ்சாலைகள், ரயில்வே மற்றும் விமானப் போக்குவரத்துக்கான பாதைகளில் முன்னேற்றங்களுடன், மாநிலம் அனைத்துத் துறைகளிலும் விரைவான வளர்ச்சி கண்டு வருவதாகக் குறிப்பிட்டார். உத்தரபிரதேச மாநிலத்தை  தொழில்துறை வாய்ப்புகளின் மையமாக உருவெடுக்கச் செய்யும் வகையில் அரசு மேற்கொண்டு வரும் உறுதியான நடவடிக்கைகளை அவர் எடுத்துரைத்தார். உள்ளூர் தொழில்கள் மற்றும் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம்  இந்தியாவில் தயாரியுங்கள் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உற்பத்தி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். கான்பூர் போன்ற நகரங்கள் இது போன்ற முயற்சியால் குறிப்பிடத்தக்க அளவில் பயனடையும் என்று திரு. நரேந்திர மோடி மேலும் தெரிவித்தார். கான்பூர்  தொழில்துறையில் வலிமையான நகரமாகவும், வரலாற்று ரீதியாக அதன் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு தொழில்களால் இயக்கப்படுகிறது என்பதை அவர் ஒப்புக்கொண்டார். இந்தத் தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய, அதன்  வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்யும் வகையில் அரசு முழுவீச்சில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார். குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை சுட்டிக்காட்டிய அவர், முன்பு, சிறு வர்த்தக நடவடிக்கைகளின் விரிவாக்கத்தை ஊக்கப்படுத்தும் நிலைப்பாடு வரையறுக்கப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட பிரதமர், வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு இது போன்ற வரையறைகளை மாற்றும் வகையில்  திருத்த்தங்களை மேற்கொண்டுள்ளது என்றும், ஆண்டுத் தொழில் தொகை மற்றும் உற்பத்தி அளவை அதிகரிக்க வழி வகுத்துள்ளது என்றும்  கூறினார்.

சமீபத்திய பட்ஜெட் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எல்லைகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது என்றும், அத்தகைய நிறுவனங்களுக்கு கூடுதல் விலக்குகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். கடந்த காலங்களில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் கிடைப்பது பெரும் சவாலாக இருந்த நிலையில்,  கடந்த பத்து ஆண்டுகளில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசு பல்வேறு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்தார். தொழில்களைத் தொடங்க விரும்பும் இளம் தொழில்முனைவோர்கள் தற்போது முத்ரா திட்டத்தின் மூலம் உடனடி கடனுதவியை பெறுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். கூடுதலாக, கடன் உத்தரவாதத் திட்டத்தின் மூலம் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்  நிறுவனங்கள் நிதி ரீதியாக வலுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் ரூ. 20 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதமர், மேலும், குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் ரூ. 5 லட்சம் வரையிலான உச்சவரம்பு கொண்ட கடன் அட்டைகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். இணைக்க நடைமுறைகள் மற்றும் விதிமுறைகளை எளிமைப்படுத்துவதன் மூலம் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில்களுக்கு வர்த்தக ரீதியிலான உகந்த சூழலை உருவாக்குவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு மாவட்டம், ஒரு உற்பத்திப் பொருள் போன்ற முயற்சிகள் மூலம் கான்பூர் நகரின் பாரம்பரிய தோல் மற்றும் உள்ளாடை தொழில்கள் கூடுதல் வளர்ச்சி பெறுகின்றன என்பதையும் பிரதமர் எடுத்துரைத்தார். இந்த முயற்சிகள் கான்பூர் நகரத்திற்குப்  பயனளிப்பது மட்டுமின்றி, உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள மாவட்டங்களின் ஒட்டுமொத்த தொழில்துறை வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலீட்டிற்கு உகந்த மற்றும் பாதுகாப்பான சூழலைக் கொண்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது என்று பிரதமர் கூறினார். ஏழை மக்களுக்கான நலத்திட்டங்கள் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், விளிம்பு நிலையில் உள்ள மக்களை நலத்திட்டங்கள் சென்றடையும் வகையில் திறம்பட செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். நடுத்தர வர்க்கத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கான அரசின் உறுதியான நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார். அரசு நிர்வாகம் அவர்களுடன்  துணை நிற்கிறது என்றும் அவர் கூறினார். இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டில் ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு முழுமையாக வரி விலக்கு வழங்கப்பட்டு உள்ளதாகவும், லட்சக்கணக்கான நடுத்தர குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கையையும் நிதி வலிமையையும் இது ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார். சேவை மற்றும் மேம்பாட்டிற்கான தனது உறுதிப்பாட்டுடன் அரசின் விரைவான செயல்பாடுகளின் காரணமாக வளர்ச்சி நடவடிக்கைகள் மேலும் எழுச்சிபெறும் என்றும், நாட்டையும், உத்தரப் பிரதேச மாநிலத்தையும் புதிய உச்சங்களுக்கு எடுத்துச் செல்வதில் எந்தவித வாய்ப்புக்களையும் தவறவிடக் கூடாது என்றும் பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு. யோகி ஆதித்யநாத், துணை முதலமைச்சர்கள் திரு. கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் திரு. பிரஜேஷ் பதக் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பின்னணி:

இப்பிராந்தியத்தின் உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துக்கான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு  மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக ரூ.2,120 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான சன்னிகஞ்ச் மெட்ரோ நிலையம் முதல் கான்பூர் மத்திய மெட்ரோ நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். இதில் 14 திட்டமிடப்பட்ட நிலையங்கள் அடங்கும். இதில் பூமிக்கடியில் ஐந்து புதிய நிலையங்கள் முக்கிய நகர அடையாளங்களையும் வணிக மையங்களையும் மெட்ரோ ரயில் கட்டமைப்புடன் இணைக்கின்றன. கூடுதலாக, ஜி.டி. சாலையின் சாலை விரிவாக்கம் மற்றும் வலுப்படுத்தும் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார். இப்பிராந்தியத்தில் மின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படும். பிராந்தியத்தில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, கௌதம் புத்தா நகரில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தில் தொகுதி 28 - ல் 220 கிலோவாட் துணை மின்நிலையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். பெருநகர நொய்டாவில் உள்ள ஈக்கோடெக் - 8 மற்றும்ஈக்கோடெக் -10 - ல் ரூ.320 கோடிக்கும் கூடுதல் மதிப்பிலான 132 கிலோவாட் துணை மின்நிலையங்களையும் அவர் திறந்து வைத்தார். உத்தரபிரதேச மாநிலத்தின் எரிசக்தி திறனை மேம்படுத்தும் வகையில் கான்பூரில் ரூ.8,300 கோடிக்கும் கூடுதல் மதிப்புள்ள 660 மெகாவாட் பங்கி அனல் மின் விரிவாக்கத் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். 9,330 கோடி ரூபாய் மதிப்புள்ள 660 மெகாவாட் திறன் கொண்ட கட்டம்பூர் அனல் மின் திட்டத்தின் மூன்று அலகுகளையும் அவர் திறந்து வைத்தார். இது மின்சார விநியோகத்தை கணிசமாக மேம்படுத்த உதவிடும். கான்பூரில் உள்ள கல்யாண்பூர் பங்கி கோயில் வளாகம் அருகே உள்ள பங்கி சாலையில் பங்கி பவர் ஹவுஸ் ரயில்வே கிராசிங் மற்றும் பங்கி தாம் கிராசிங் மீது ரயில் மேம்பாலங்களையும் பிரதமர் திறந்து வைத்தார். இது நிலக்கரி மற்றும் எண்ணெய் போக்குவரத்தை எளிதாக்குவதன் மூலம் பங்கி அனல் மின் விரிவாக்க திட்டத்தின் சரக்குப் போக்குவரத்திற்கு உதவிடும் அதே நேரத்தில், உள்ளூர் மக்களுக்கு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் உதவிடும். கான்பூரில் உள்ள பிங்கவானில் ரூ.290 கோடிக்கும் கூடுதல்  மதிப்புள்ள 40 எம்.எல்.டி (நாளொன்றுக்கு ஒரு மில்லியன் லிட்டர்) மூன்றாம் நிலை சுத்திகரிப்பு நிலையத்தை பிரதமர் திறந்து வைத்தார். இது சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் மறுபயன்பாட்டை செயல்படுத்தவும், பிராந்தியத்தில் நீர் பாதுகாப்பு மற்றும் நிலையான வள மேலாண்மையை ஊக்குவிக்கவும் உதவும். இப்பகுதியில் சாலை உள்கட்டமைப்பிற்கு உத்வேகம் அளிக்கும் வகையில், கான்பூர் நகர் மாவட்டத்தில் தொழில்துறை மேம்பாட்டிற்காக கௌரியா பாலி மார்க்கை விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். மேலும், கான்பூர் நகர் மாவட்டத்தில் பாதுகாப்பு வழித்தடத்தின் கீழ் பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் உள்ள நர்வால் மோட் (ஏஎச்-1) முதல் கான்பூர் பாதுகாப்பு முனை (4 வழி) வரை இணைக்கும் சாலையை அகலப்படுத்தி பலப்படுத்துதல் மூலம் பாதுகாப்பு வழித்தடத்திற்கான இணைப்பை கணிசமாக மேம்படுத்துவதற்கும், சரக்குப் போக்குவரத்துக்கான அணுகலை மேம்படுத்த உதவிடும். பிரதமரின் ஆயுஷ்மான் மூத்த குடிமக்கள் ஓய்வூதியத் திட்டம், தேசிய வாழ்வாதார இயக்கம் மற்றும் பிரதமரின் இல்லந்தோறும் இலவச சூரிய மின்சாரத் திட்டம் ஆகியவற்றின் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் காசோலைகளையும் பிரதமர் வழங்கினார்.

****

(Release ID: 2132731)

AD/TS/SMB/SV/RR/DL


(Release ID: 2132866)