பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கு வங்கம், அலிப்பூர்துவாரில் ரூ.1010 கோடிக்கும் அதிக மதிப்பிலான நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்குப் அடிக்கல் நாட்டினார்

இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதை நோக்கி சென்று கொண்டிருக்கும் தற்போதைய காலகட்டத்தில், வங்காளத்தின் பங்களிப்பு எதிர்பார்க்கப்படுவதுடன் அது அவசியமானதும் ஆகும்: பிரதமர்

இந்த நோக்கத்துடன், மத்திய அரசு உள்கட்டமைப்பு, புத்தாக்க கண்டுபிடிப்பு, முதலீடு ஆகியவற்றுக்கு தொடர்ந்து புதிய உத்வேகத்தை அளித்து வருகிறது: பிரதமர்

வங்காளத்தின் வளர்ச்சி இந்திய எதிர்காலத்தின் அடித்தளம்: பிரதமர்

இந்த நகர எரிவாயு விநியோகத் திட்டம் வெறும் குழாய் திட்டம் மட்டுமல்ல, அரசுத் திட்டங்களின் பலன்கள் வீட்டிலேயே வழங்கப்படுவதற்கான ஒரு எடுத்துக்காட்டு: பிரதமர்

குறைந்த கட்டணத்தில் தூய்மையான மற்றும் எளிதில் கிடைக்கும் எரிசக்தியை நோக்கி நாம் நகர்கிறோம்: பிரதமர்

Posted On: 29 MAY 2025 2:02PM by PIB Chennai

இந்தியாவில் நகர எரிவாயு விநியோகக் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மேற்கு வங்காளத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், வரலாற்று சிறப்புமிக்க அலிப்பூர்துவாரில் இருந்து மேற்கு வங்க மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துகொள்வதாகக் கூறினார். இந்தப் பிராந்தியத்தின் வளமான கலாச்சார முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார். இது அதன் எல்லைகளால் மட்டுமல்ல, அதன் ஆழமான வேரூன்றிய மரபுகள் மற்றும் தொடர்புகளாலும் வரையறுக்கப்படுகிறது என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அலிப்பூர்துவார் பூட்டானுடன் அதன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது என்றும், மறுபுறம் அசாம் அதை வரவேற்கிறது என்றும், ஜல்பைகுரியின் இயற்கை அழகு மற்றும் கூச் பெஹாரின் பெருமை ஆகியவை பிராந்தியத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாக உள்ளன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்த வளமான நிலத்தைப் பார்வையிடுவதற்கான தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார். இது வங்காளத்தின் பாரம்பரியம் மற்றும் ஒற்றுமையில் அதன் பங்கை சுட்டுக் காட்டுகிறது.

"இந்தியா ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதை நோக்கி நகரும் போது, வங்காளத்தின் பங்கேற்பு எதிர்பார்க்கப்படுவது அவசியமானது என்று திரு மோடி தெரிவித்தார். இப்பகுதியில் உள்கட்டமைப்பு, புத்தாக்க கண்டுபிடிப்புகள் மற்றும் முதலீட்டை விரைவுபடுத்துவதற்கான மத்திய அரசின் தொடர்ச்சியான முயற்சிகளை பிரதமர் எடுத்துரைத்தார். "இந்திய எதிர்காலத்தின் அடித்தளத் தூணாக வங்காளத்தின் வளர்ச்சி" உள்ளது என்று திரு மோடி கூறினார். தற்போது அந்தப் பயணத்தில் மற்றொரு வலுவான மைல்கல் இன்று சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். அலிப்பூர்துவார், கூச் பெஹாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்தைத் தொடங்குவதாக அவர் அறிவித்தார். இது 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தூய்மையான, பாதுகாப்பான, குறைந்த கட்டணத்தில் குழாய் மூலம் எரிவாயுவை வழங்கும். இந்த முயற்சி, குடும்பங்களுக்கு பாதுகாப்பான எரிவாயு விநியோகத்தை உறுதி செய்யும், எல்பிஜி சிலிண்டர்களை வாங்குவதில் உள்ள கவலையை நீக்கும் என்று திரு மோடி குறிப்பிட்டார். கூடுதலாக, சிஎன்ஜி நிலையங்களின் விரிவாக்கம் பசுமை எரிபொருளுக்கான அணுகலை அதிகரிக்கும், இதன் விளைவாக சேமிப்பு, நேர செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவித்தார். இந்தப் புதிய தொடக்கத்திற்காக அலிப்பூர்துவார், கூச் பெஹார் குடிமக்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். "நகர எரிவாயு விநியோகத் திட்டம் வெறும் குழாய் வழியான ஒரு முயற்சி மட்டுமல்ல, அத்தியாவசிய சேவைகளை வீட்டிலேயே வழங்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சான்றாகும்" என்று அவர் குறிப்பிட்டார்.

எரிசக்தித் துறையில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும் பிரதமர் எடுத்துரைத்தார். எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கிய நாட்டின் விரைவான மாற்றம் குறித்து குறிப்பிட்ட பிரதமர், 2014-ம் ஆண்டில், நகர எரிவாயு சேவைகள் 66 மாவட்டங்களில் மட்டுமே கிடைத்தன என்றும், தற்போது, நகர எரிவாயு விநியோக கட்டமைப்பு நாடு முழுவதும் 550-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு விரிவடைந்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். இந்த கட்டமைப்பு தற்போது கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களைச் சென்றடைகிறது. இது லட்சக்கணக்கான வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு வழங்குவதை உறுதி செய்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். சிஎன்ஜி-ஐ பரவலாக ஏற்றுக்கொள்வது பொது போக்குவரத்தை மாற்றியுள்ளது. மாசு அளவைக் கணிசமாகக் குறைக்க பங்களித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த மாற்றம் குடிமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நிதிச் சுமைகளையும் குறைக்கிறது என்று அவர் கூறினார்.

பிரதமரின் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் திட்டம் இந்தியாவின் எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கிய மாற்றத்தை துரிதப்படுத்தியுள்ளது என்பதை குறிப்பிட்டார். திரு மோடி, 2016 -ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், புகை நிறைந்த சமையலறைகளிலிருந்து விடுபடுவதன் மூலமும், அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமும், வீட்டு சமையல் பகுதிகளில் கண்ணியத்தை வளர்ப்பதன் மூலமும் லட்சக்கணக்கான ஏழைப் பெண்களின் வாழ்க்கையை கணிசமாக மேம்படுத்தியுள்ளது என்பதை எடுத்துரைத்தார். 2014-ம் ஆண்டு, நாட்டில் 14 கோடிக்கும் குறைவான எல்பிஜி இணைப்புகள் இருந்தன. ஆனால் தற்போது, அந்த எண்ணிக்கை 31 கோடியைத் கடந்துள்ளது. இது உலகளாவிய எரிவாயு அணுகல் என்ற தொலைநோக்குப் பார்வையை இயல்புநிலைக்கு கொண்டு வந்துள்ளதாக திரு மோடி சுட்டிக்காட்டினார். நாடு தழுவிய எரிவாயு விநியோக கட்டமைப்பை அரசு வலுப்படுத்தியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் அது சென்றடைவதை உறுதி செய்துள்ளது என்று அவர் தெரிவித்தார். எல்பிஜி விநியோகஸ்தர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும், 2014-ம் ஆண்டிற்கு முன்பு இந்தியாவில் 14,000 க்கும் குறைவான எல்பிஜி விநியோகஸ்தர்கள் மட்டுமே இருந்தனர் என்றும், தற்போது இந்த எண்ணிக்கை 25,000 க்கும் மேலாக அதிகரித்துள்ளது என்றும் திரு மோடி குறிப்பிட்டார். தற்போது கிராமப்புறங்களில் கூட எரிவாயு சிலிண்டர்கள் எளிதாகக் கிடைப்பதால், நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு தூய்மையான சமையல் எரிபொருள் கிடைப்பதை சாத்தியமாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

உர்ஜா கங்கா திட்டத்தின் முக்கியத்துவத்தைப் பிரதமர் குறிப்பிட்டு, எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கிய புரட்சிகரமான நடவடிக்கை இது என்று கூறினார். இந்த முயற்சியின் கீழ், இந்தியாவின் கிழக்கு மாநிலங்களை இணைக்க எரிவாயு குழாய் இணைப்புகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. இது மேற்கு வங்கம் மற்றும் பிற பிராந்தியங்களில் எரிவாயு அணுகலை கணிசமாக மேம்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சிகள் எரிசக்தி அணுகலை விரிவுபடுத்தியது மட்டுமல்லாமல், நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளன என்று பிரதமர் குறிப்பிட்டார்.

குழாய் கட்டுமானம் முதல் எரிவாயு விநியோகம் வரை, வேலைவாய்ப்பு உருவாக்கம் பல நிலைகளில் அதிகரித்து, எரிவாயு சார்ந்த தொழில்துறை சூழல் அமைப்பை வலுப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா தற்போது குறைந்த கட்டணத்தில், சுத்தமான, அனைவருக்கும் அணுகக்கூடிய ஒரு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுகிறது என்று பிரதமர் கூறினார்.

மேற்கு வங்கம் இந்தியாவின் கலாச்சாரம், அறிவு மற்றும் அறிவியல் முன்னேற்றங்களின் முக்கிய மையமாக இருந்து வருகிறது என்று கூறிய திரு மோடி, வங்காளத்தின் வளர்ச்சி இல்லாமல் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை உணர முடியாது என்று கூறினார். இதை கருத்தில் கொண்டு, கடந்த பத்தாண்டுகளில் மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். பூர்வா விரைவுச் சாலை, துர்காபூர் விரைவுச் சாலை, ஷ்யாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தை நவீனமயமாக்கல், கொல்கத்தா மெட்ரோ விரிவாக்கம், புதிய ஜல்பைகுரி நிலையத்தின் மாற்றம் மற்றும் தூர்ஸ் வழித்தடத்தில் புதிய ரயில்களை அறிமுகப்படுத்துதல் போன்ற முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை அவர் எடுத்துரைத்தார். இவை அனைத்தும் வங்காளத்தின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. புதிதாகத் தொடங்கப்பட்ட திட்டம் வெறும் குழாய் பாதை மட்டுமல்ல, முன்னேற்றத்தின் உயிர்நாடி என்று திரு மோடி கூறினார். குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும் வங்காளத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்குமான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார். மேற்கு வங்கம் தொடர்ந்து வளர்ச்சியை நோக்கி முன்னேறும் என்று நம்பிக்கை தெரிவித்து, மாநில மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு தமது உரையை பிரதமர் நிறைவு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் டாக்டர் சுகந்த மஜும்தார், மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு சுவேந்து அதிகாரி, அலிப்பூர்துவார் நாடாளுமன்ற உறுப்பினர் திரு மனோஜ் டிக்கா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னணி

ரூ.1010 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நகர எரிவாயு விநியோக திட்டம், அரசால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வேலைத் திட்ட  இலக்குகளுக்கு ஏற்ப சுமார் 19 சிஎன்ஜி நிலையங்களை நிறுவுவதன் மூலம், 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள், 100-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது வசதியான, நம்பகமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் செலவு குறைந்த எரிபொருள் விநியோகத்தை வழங்குவதோடு பிராந்தியத்தில் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

***

(Release ID: 2132283)

AD/TS/IR/AG/RR


(Release ID: 2132316)