பிரதமர் அலுவலகம்
குஜராத்தின் புஜ்ஜில் சுமார் ரூ.53,400 கோடி மதிப்புள்ள மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்
இன்று கட்ச் ஒரு பெரிய வர்த்தக மற்றும் சுற்றுலா மையமாக உள்ளது, வரும் காலங்களில், கட்ச்சின் இந்தப் பங்கு இன்னும் பெரிதாக மாறப்போகிறது: பிரதமர்
கடல் உணவு முதல் சுற்றுலா மற்றும் வர்த்தகம் வரை, கடலோரப் பகுதிகளில் இந்தியா ஒரு புதிய சூழலியலை உருவாக்கி வருகிறது: பிரதமர்
பயங்கரவாதத்திற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்ட கொள்கை, எங்கள் கொள்கை: பிரதமர்
ஆபரேஷன் சிந்தூர் என்பது மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்கும் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்குமான ஓர் இயக்கம்: பிரதமர்
பயங்கரவாதத்தின் தலைமையகங்கள் இந்தியாவின் ரேடாரில் இருந்தன, நாம் அவர்களை துல்லியமாக தாக்கினோம், இது நமது ஆயுதப் படைகளின் வலிமையையும் ஒழுக்கத்தையும் காட்டுகிறது: பிரதமர்
இந்தியாவின் போராட்டம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரானது: பிரதமர்
Posted On:
26 MAY 2025 7:22PM by PIB Chennai
குஜராத்தின் புஜ்ஜில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி சுமார் ரூ.53,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், கட்ச் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். புரட்சியாளர்கள் மற்றும் தியாகிகளுக்கு, குறிப்பாக தலைசிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் திரு. ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவுக்கு மரியாதை செலுத்தினார். கட்ச்சின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு அவர்களின் உறுதிப்பாடு மற்றும் பங்களிப்புகளை பிரதமர் விவரித்தார்.
கட்ச் புனித பூமியில் ஆஷாபுரா மாதாவின் தெய்வீக இருப்பை அங்கீகரித்து, திரு மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். இந்தப் பகுதியின் மீதான அவரது தொடர்ச்சியான ஆசிகளுக்காக அவர் நன்றி தெரிவித்தார்.
கட்ச் மாவட்டத்துடனான தனது ஆழமான தொடர்பைப் பற்றிப் பேசிய திரு மோடி, மாவட்டம் முழுவதும் அடிக்கடி மேற்கொண்ட பயணங்களை நினைவு கூர்ந்தார். மேலும், அந்த பகுதி தனது வாழ்க்கைப் பாதையை எவ்வாறு வடிவமைத்தது என்பதையும் வலியுறுத்தினார். வாழ்க்கை நிலைமைகள் பெருமளவு மேம்பட்டிருந்தாலும், கடந்த காலம் கணிசமான சவால்களை முன்வைத்தது என்றும் அவர் குறிப்பிட்டார். நர்மதா நதியின் நீர் கட்ச் பகுதியை அடைந்தபோது தான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்று கருதியதை அவர் நினைவு கூர்ந்தார். முதலமைச்சராகப் பொறுப்பேற்பதற்கு முன்பே, மாவட்ட அலுவலகத்தில் பல்வேறு திட்டங்களில் ஈடுபட்டு, அடிக்கடி கட்ச் பகுதிக்குச் சென்றதாக குறிப்பிட்டார். கட்ச்சில் உள்ள விவசாயிகளின் அசைக்க முடியாத உறுதியையும் திரு மோடி எடுத்துரைத்தார். அவர்களின் உணர்வு எப்போதும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார். இந்தப் பகுதியில் தனது பல வருட அனுபவம் அதன் வளர்ச்சிக்கான தனது முயற்சிகளுக்கு பெரிதும் உதவியது என்று அவர் கூறினார்.
கட்ச் பகுதி குறிப்பிடத்தக்க வெற்றியை அடைவதில் நம்பிக்கையின் சக்தியையும், இடைவிடாத முயற்சியையும் வெளிப்படுத்தியுள்ளது என்பதை வலியுறுத்திய பிரதமர், ஒரு காலத்தில் பலரிடையே இந்தப் பகுதியின் எதிர்காலம் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்திய பேரழிவான பூகம்பத்தை நினைவு கூர்ந்தார். இருப்பினும், கட்ச் சாம்பலில் இருந்து மீண்டு எழும் என்று தாம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்ததாகவும், மக்கள் அதை சாத்தியமாக்கினர் என்றும் பிரதமர் தெரிவித்தார். "இன்று, வணிகம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவுக்கு கட்ச் ஒரு முக்கிய மையமாகத் திகழ்கிறது" என்று பிரதமர் கூறினார். வரும் ஆண்டுகளில், இந்தப் பகுதியின் பங்கு மேலும் விரிவடையும் என்று எடுத்துரைத்தார். கட்ச்சின் விரைவான வளர்ச்சியைக் காண்பதிலும் அதன் முன்னேற்றத்தை ஆதரிப்பதிலும் அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். தனது பயணத்தின் போது, உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்டு ஏறத்தாழ ₹50,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. இந்த முயற்சிகள் இந்தியா ஒரு முன்னணி கடல்சார் பொருளாதாரமாகவும், பசுமை ஆற்றலுக்கான உலகளாவிய மையமாகவும் உருவெடுப்பதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார். இந்த மாற்றத்தக்க முன்னேற்றங்களுக்காக கட்ச் மக்களுக்கு அவர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
"கட்ச், உலகின் மிகப்பெரிய பசுமை ஆற்றலுக்கான மையமாக வளர்ந்து வருகிறது" என்று திரு மோடி கூறினார், பசுமை ஹைட்ரஜனின் உருமாற்ற திறனை வலியுறுத்தி, அதை எதிர்காலத்தின் எரிபொருள் என்று குறிப்பிட்டார். கார்கள், பேருந்துகள் மற்றும் தெருவிளக்குகள் விரைவில் பசுமை ஹைட்ரஜனால் இயக்கப்படும் என்றும், இது இந்தியாவின் எரிசக்தி சூழலில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார். காண்ட்லா, நாட்டில் நியமிக்கப்பட்ட மூன்று பசுமை ஹைட்ரஜன் மையங்களில் ஒன்றாகும் என்றும் திரு மோடி குறிப்பிட்டார். கட்ச்சில் ஒரு புதிய பசுமை ஹைட்ரஜன் ஆலைக்கு அடிக்கல் நாட்டுவதாக அவர் அறிவித்தார், இந்த ஆலையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் முற்றிலும் "இந்தியாவில் உருவாக்கப்பட்டது" என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். மேலும், இந்தியாவின் சூரிய சக்தி புரட்சியில் கட்ச்சின் முக்கிய பங்கை திரு மோடி வலியுறுத்தினார், உலகின் மிகப்பெரிய சூரிய மின் திட்டங்களில் ஒன்று இப்பகுதியில் உருவாக்கப்பட்டு வருவதை சுட்டிக்காட்டினார். காவ்டா வளாகம் நிறுவப்பட்டதன் மூலம், கட்ச் உலகளாவிய எரிசக்தி சூழலில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
குடிமக்களுக்கு போதுமான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதிலும், மின்சாரச் செலவுகளைக் குறைப்பதிலும் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், குஜராத்தில் ஏற்கனவே லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு பயனளித்துள்ள பிரதமரின் இலவச சூர்யசக்தி திட்டம் தொடங்கப்பட்டிருப்பதைக் குறிப்பிட்டார். கடலோரப் பகுதிகளின் பொருளாதார முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், பல நாடுகளின் வளர்ச்சியில் கடல்சார் வளம் ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்பதை எடுத்துரைத்தார். பண்டைய துறைமுக நகரங்களான தோலா விரா மற்றும் லோதல் ஆகியவை இந்தியாவின் வளமான பாரம்பரியத்திற்கும் வரலாற்று வர்த்தகம் மற்றும் வளர்ச்சியில் அவற்றின் பங்கிற்கும் பிரதான எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன என்று கூறிய பிரதமர், "இந்த மரபால் ஈர்க்கப்பட்டு, துறைமுகங்களைச் சுற்றியுள்ள நகரங்களை விரிவுபடுத்துவதன் மூலம் துறைமுகம் சார்ந்த வளர்ச்சிக்கான தனது தொலைநோக்குப் பார்வையை அரசு முன்னெடுத்து வருகிறது" என்றார். கடல் உணவு, சுற்றுலா மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு புதிய கடலோர சூழலியலை இந்தியா தீவிரமாக வளர்த்து வருவதாக அவர் மேலும் கூறினார். துறைமுகங்களை நவீனமயமாக்கவும் விரிவுபடுத்தவும் குறிப்பிடத்தக்க முதலீடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், இது குறிப்பிடத்தக்க பலன்களைத் தருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். முதல் முறையாக, பெரிய துறைமுகங்கள் அனைத்தும் ஒரு வருடத்தில் 15 கோடி டன் சரக்குகளை கையாண்டுள்ளன, இதில் கண்ட்லா துறைமுகம் முக்கிய பங்கு வகிக்கிறது, என்றார். இந்தியாவின் கடல்சார் வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு கட்ச் துறைமுகங்களால் நிர்வகிக்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார். உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர், கண்ட்லா மற்றும் முந்த்ரா துறைமுகங்களில் திறன் மற்றும் இணைப்பு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருவதாகக் கூறினார். இந்த சந்தர்ப்பத்தில், புதிய படகுத்துறை மற்றும் செயல்பாடுகளை சீராக்க விரிவாக்கப்பட்ட சரக்கு சேமிப்பு மையங்கள் உட்பட கப்பல் போக்குவரத்து தொடர்பான பல்வேறு அமைப்புகள் திறக்கப்பட்டன. கடல்சார் துறையில் அரசு அதிக கவனம் செலுத்துவதாகவும், இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதன் வளர்ச்சிக்காக ஒரு சிறப்பு நிதியை உருவாக்குவதாகவும் பிரதமர் மேலும் எடுத்துரைத்தார். கப்பல் கட்டுதலின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்திய அவர், உள்நாட்டு தேவைகளுக்கு மட்டுமல்லாமல், உலகளாவிய தேவைக்கும் இந்தியா பெரிய கப்பல்களை உற்பத்தி செய்யும் என்று குறிப்பிட்டார். இந்த முயற்சிகள், நாட்டின் இளைஞர்களுக்கு கடல்சார் துறையில் குறிப்பிடத்தக்க வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கட்ச் தனது பாரம்பரியத்தின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதையை எடுத்துரைத்த திரு மோடி, இந்தப் பாரம்பரியம் தற்போது இந்தப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு எவ்வாறு உந்து சக்தியாக மாறியுள்ளது என்பதைக் குறிப்பிட்டார். ஜவுளி, உணவு பதப்படுத்துதல், மண்பாண்டங்கள் மற்றும் உப்பு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் கடந்த இரண்டு தசாப்தங்களாகக் காணப்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அவர் குறிப்பிட்டார். கட்ச் எம்பிராய்டரி, பிளாக் பிரிண்டிங், பாந்தினி துணி மற்றும் தோல் வேலைகள் போன்ற கட்ச்சின் பாரம்பரிய கைவினைப்பொருட்கள் பரவலாக அங்கீகரிக்கப்பட்டதைக் குறிப்பிட்ட திரு மோடி, கைத்தறி கலைத்திறனின் உயிருள்ள அருங்காட்சியகமாக விளங்கும் புஜோடி கிராமத்தைப் பாராட்டினார். மேலும், அஜ்ராக் அச்சிடலின் தனித்துவமான பாரம்பரியத்தைக் குறிப்பிட்டார். இது இப்போது புவியியல் குறியீடு (ஜிஐ) குறிச்சொல்லைப் பெற்றுள்ளது. இதன்மூலம் கட்ச்சில் அதன் இருப்பை அதிகாரப்பூர்வமாக நிறுவியுள்ளது. குறிப்பாக பழங்குடி குடும்பங்கள் மற்றும் கைவினைஞர்களுக்கு இந்த அங்கீகாரத்தின் முக்கியத்துவத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார், ஏனெனில் இது அவர்களின் கலாச்சார அடையாளம் மற்றும் கைவினைத்திறனை வலுப்படுத்துகிறது. கூடுதலாக, தோல் மற்றும் ஜவுளித் தொழில்களை ஆதரிக்கும் முக்கிய விதிகள் மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பதை திரு மோடி எடுத்துரைத்ததுடன், இந்தத் துறைகளை மேம்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
கட்ச்சின் கடின உழைப்பாளியான விவசாயிகளுக்கு மரியாதை செலுத்திய பிரதமர், சவால்களை சமாளிப்பதில் அவர்களின் விடாமுயற்சியைப் பாராட்டினார். குஜராத்தில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து, கடுமையான சிரமங்களை ஏற்படுத்திய ஒரு காலத்தை அவர் நினைவு கூர்ந்தார். இருப்பினும், நர்மதை அன்னையின் ஆசிகளாலும், அரசின் அர்ப்பணிப்புள்ள முயற்சிகளாலும், நிலைமை மாறிவிட்டது. கட்ச்சின் செல்வத்தை மறுவடிவமைப்பதில் கெவாடியாவிலிருந்து மோட்குபா வரை நீட்டிக்கப்பட்ட கால்வாயின் முக்கிய பங்கை பிரதமர் எடுத்துரைத்தார். இன்று, கட்ச்சில் இருந்து மாம்பழம், பேரீச்சம்பழம், மாதுளை, சீரகம் மற்றும் டிராகன் பழம் போன்ற விவசாய விளைபொருள்கள் உலகளாவிய சந்தைகளை அடைகின்றன என்று அவர் குறிப்பிட்டார். பிராந்தியத்தின் கடந்த காலத்தை நினைவுகூர்ந்த பிரதமர், கட்ச் ஒரு காலத்தில் வரையறுக்கப்பட்ட வாய்ப்புகள் காரணமாக கட்டாய இடம்பெயர்வை எதிர்கொண்டது என்று தெரிவித்தார். இருப்பினும், அடையப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றத்துடன், உள்ளூர் இளைஞர்கள் இப்போது கட்ச்சிலேயே வேலைவாய்ப்பைக் கண்டறிந்துள்ளனர், இது பிராந்தியத்தின் வளர்ந்து வரும் செழிப்பைக் குறிக்கிறது, என்றார்.
இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவது தங்கள் அரசின் முக்கிய முன்னுரிமையாக உள்ளது என்பதை திரு மோடி மீண்டும் உறுதிப்படுத்தினார். சுற்றுலா என்பது பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு துறை என்றும், அதன் வளமான வரலாறு, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகுடன் கூடிய கட்ச், இந்தத் துறையில் விரிவாக்கத்திற்கு ஏற்ற நிலையில் உள்ளது என்றும் அவர் கூறினார். கட்ச்சின் ரன் உத்சவ் தொடர்ந்து புதிய உயரங்களை எட்டுவதால் அதிகம் பிரபலமடைந்து வருவதில் திருப்தி தெரிவித்த திரு மோடி, ஸ்மிருதி வன் நினைவுச்சின்னத்தைக் குறிப்பிட்டு, யுனெஸ்கோ இதை உலகின் மிக அழகான அருங்காட்சியகங்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது என்று தெரிவித்தார். கட்ச்சின் சுற்றுலாத் துறை வரும் ஆண்டுகளில் மேலும் வளர்ச்சியைக் காணும் என்றும், தோர்டோ கிராமம் உலகளவில் சிறந்த சுற்றுலா கிராமங்களில் ஒன்றாக சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். கூடுதலாக, மாண்ட்வியின் கடற்கரை பார்வையாளர்களுக்கு ஒரு முக்கிய ஈர்ப்பாக வளர்ந்து வருகிறது, சுற்றுலாவின் திறனை மேலும் மேம்படுத்துவதற்காக ரன் உத்சவ்வின் போது மாண்ட்வியில் ஒரு கடற்கரை விழாவை ஏற்பாடு செய்யுமாறு குஜராத் முதல்வரிடம் திரு மோடி வலியுறுத்தினார். அகமதாபாத் மற்றும் புஜ் இடையேயான நமோ பாரத் விரைவு ரயில் இந்த பிராந்தியத்தில் சுற்றுலாவை மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2014 ஆம் ஆண்டு பிரதமராக முதன்முதலில் பதவியேற்ற நாளைக் குறிக்கும் வகையில் மே 26 சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்று பிரதமர் குறிப்பிட்டார். 2014 ஆம் ஆண்டு 11 வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, இன்று உலகின் 4 வது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார். சுற்றுலாவை விட பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், மக்களை இணைப்பதற்கான ஒரு வழிமுறையாக சுற்றுலாவில் இந்தியாவின் வலுவான நம்பிக்கையை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். "பயங்கரவாதம் ஒரு கடுமையான உலகளாவிய அச்சுறுத்தல் மற்றும் இந்தியா அதற்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையைக் கொண்டுள்ளது" என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். ஆபரேஷன் சிந்தூரைப் பற்றிப் பேசிய பிரதமர், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை இந்த இயக்கம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று கூறினார். இந்திய குடிமக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் அதே மொழியில் உறுதியான பதிலடி வழங்கப்படும் என்றும், இந்தியாவிடம் சவால் விடத் துணிபவர்கள் கட்டாயம் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
"மனிதகுலத்தைப் பாதுகாப்பதற்கும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்குமான ஓர் இயக்கம்தான் ஆபரேஷன் சிந்தூர்" என்று பிரதமர் விவரித்தார். ஏப்ரல் 22 ஆம் தேதிக்குப் பிறகு பீகாரில் நடந்த ஒரு பேரணியில், பயங்கரவாத அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்பை அழிப்பதாக சபதம் செய்தபோது அவர் கூறிய வார்த்தைகளை பிரதமர் நினைவு கூர்ந்தார். பஹல்காம் தாக்குதல்கள் நடந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காதபோது, இந்திய ஆயுதப் படைகளுக்கு பதிலடி கொடுக்க சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆயுதப் படைகளின் திறமை மற்றும் ஒழுக்கத்தைப் பறைசாற்றும் வகையில் இந்தியா பயங்கரவாத தலைமையகங்களை துல்லியமாகக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக அவர் கூறினார். பயங்கரவாத மறைவிடங்களைத் துல்லியமாக அழிக்க முடியும் என்பதை இந்தியா உலகிற்குக் காட்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் தீர்க்கமான நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தான் பீதியடைந்ததாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார். பாகிஸ்தான் இந்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்த முயன்றதாகவும், ஆனால் இந்தியா இரண்டு மடங்கு பலத்துடன் பதிலடி கொடுத்ததாகவும், அந்நாட்டு ராணுவ நிலைகளை குறிப்பிடத்தக்க துல்லியத்துடன் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார். "பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மற்றும் ராணுவ நிறுவல்களை இந்தியா அழித்தது, உலகையே திகைக்க வைத்தது" என்று அவர் மேலும் கூறினார். ஆயுதப் படைகளின் அசாத்தியமான தொழில்சார் செயல்பாடு, துணிச்சல் மற்றும் துல்லியமான தாக்குதலுக்காகவும் அவற்றை அவர் பாராட்டினார்.
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க போரின் போது, பாகிஸ்தான் ராணுவம் புஜ் விமானப்படை தளத்தைத் தாக்கியதை நினைவு கூர்ந்த திரு மோடி, புஜ் பெண்களின் அசாத்தியமான துணிச்சலைப் பாராட்டினார். அவர்கள், மோசமான சூழ்நிலைகளில் விமானப்படைத் தளத்தை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். பாகிஸ்தானின் இடைவிடாத குண்டுவெடிப்புகளுக்கு மத்தியிலும், புஜ் பெண்கள் 72 மணி நேரத்திற்குள் விமானப்படைத் தளத்தை மீண்டும் கட்டியெழுப்பி, அதன் விரைவான செயல்பாட்டு மீட்சியை சாத்தியமாக்கினர் என்றார் அவர். இந்தத் துணிச்சலான பெண்களை முன்னதாகவே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அவர்களின் மீட்சி மற்றும் பங்களிப்பை அங்கீகரித்ததாகவும் குறிப்பிட்டார்.
"இந்தியாவின் போராட்டம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கும் அதை ஆதரிப்பவர்களுக்கும் எதிரானது" என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் பகைமை பயங்கரவாதத்தை வளர்க்கும் சக்திகளுடன்தான் உள்ளது, எந்த நாட்டின் மக்களுடனும் அல்ல என்று வலியுறுத்தினார். கட்ச் பகுதியைச் சேர்ந்த பாகிஸ்தான் குடிமக்களிடம் உரையாற்றிய பிரதமர், தங்கள் நிலைமையின் யதார்த்தத்தை அங்கீகரிக்குமாறு அவர்களை வலியுறுத்தினார். அவர்களின் அரசும் ராணுவமும் பயங்கரவாதத்தை வருவாய் ஈட்டுவதற்கான ஒரு வழியாகப் பயன்படுத்தி தீவிரமாக ஆதரிக்கின்றன என்று அவர் எச்சரித்தார். இந்தப் பாதை உண்மையிலேயே அவர்களின் நலன்களுக்கு உகந்ததா என்பதைப் பற்றி சிந்திக்குமாறு பாகிஸ்தான் மக்களை அவர் கேட்டுக் கொண்டார். அதிகாரத்தால் இயக்கப்படும் திட்டங்கள் பாகிஸ்தானிய உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தி, அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை இருளில் மூழ்கடிக்கின்றன என்பதை அவர் எடுத்துரைத்தார். பயங்கரவாதத்தின் கொடுமையிலிருந்து பாகிஸ்தான் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டுமானால், அதன் மக்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதன் ஒழிப்புக்கு பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் தெளிவான திசையை மீண்டும் உறுதிப்படுத்தி, நாடு வளர்ச்சி, அமைதி மற்றும் செழிப்புக்கான பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய திரு மோடி, வளர்ந்த நாடாக மாறுவதற்கான இந்தியாவின் பயணத்தில் கட்ச்சின் உணர்வு ஒரு உத்வேகமாக செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். எதிர்வரும் கட்ச் புத்தாண்டைக் குறிக்கும் வகையில், வரவிருக்கும் ஆஷாதி பீஜ் பண்டிகையை முன்னிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட திரு மோடி, கட்ச் மக்களின் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் மற்றும் தொடர்ச்சியான வளர்ச்சி சாதனைகளுக்காக மீண்டும் ஒருமுறை வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு தமது உரையை நிறைவு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் திரு பூபேந்திரபாய் படேல், மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு மனோகர் லால் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பின்னணி
குஜராத்தின் புஜ்ஜில் சுமார் ரூ.53,400 கோடி மதிப்புள்ள பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார். காவ்டா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவில் உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வெளியேற்றுவதற்கான மின்மாற்றத் திட்டங்கள், மின்மாற்ற வலையமைப்பு விரிவாக்கம், டாபியில் உள்ள அல்ட்ரா சூப்பர் கிரிட்டிகல் அனல் மின் நிலைய அலகு உள்ளிட்ட மின் துறையின் திட்டங்களும் இதில் அடங்கும். காண்ட்லா துறைமுகத் திட்டங்கள் மற்றும் குஜராத் அரசின் பல்வேறு சாலை, நீர் மற்றும் சூரியசக்தித் திட்டங்கள் உள்ளிட்டவையும் இதில் இடம்பெற்றிருந்தன.
***
(Release ID: 2131423)
AD/SM/RB/DL
(Release ID: 2131488)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam