கூட்டுறவு அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் "பால்வளத் துறையில் நிலைத்தன்மை மற்றும் சுழற்சி குறித்த பயிலரங்கை"த் தொடங்கி வைத்தார்
Posted On:
03 MAR 2025 5:57PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா புதுதில்லியில் இன்று "பால்வளத் துறையில் நிலைத்தன்மை மற்றும் சுழற்சி குறித்த பயிலரங்கை" தொடங்கி வைத்தார். பால்வளத் துறையில் நீடித்த தன்மை, செயல்திறன் மற்றும் வளங்களின் சுழற்சி ஆகியவை பிரதமர் திரு நரேந்திர மோடியின் கூட்டுறவு மூலம் வளமை ('சஹகார் சே சம்ரிதி') என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்க உதவும்.
இந்தப் பயிலரங்கில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, வெண்மைப் புரட்சி 2.0 ஐ நோக்கி நாடு முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், நிலைத்தன்மை மற்றும் சுழற்சியின் முக்கியத்துவம் முன்னுரிமை பெறுகிறது என்று கூறினார். முதல் வெண்மைப் புரட்சியின் உதவியுடன் இதுவரை படைத்துள்ள சாதனைகளோடு பால்வளத் துறையில் நிலைத்தன்மை மற்றும் சுழற்சி ஆகிய அம்சங்கள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். வெண்மைப் புரட்சி 2.0 இன் முக்கிய குறிக்கோளாக நிலைத்தன்மை மற்றும் சுழற்சி அமைந்துள்ளதாக அவர் கூறினார்.
நாட்டின் கிராமப்புற வளர்ச்சியிலும், நிலமற்ற, சிறு விவசாயிகளின் மேம்பாட்டிற்கும் பால்வளத் துறை பெரும் பங்கு வகிப்பதாக திரு அமித் ஷா கூறினார். நாட்டின் ஊட்டச்சத்து மேம்பாட்டை உறுதி செய்வதுடன் பால் உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய உதவிடும் என்று கூறினார். விவசாயிகள் வேளாண் விளைபொருட்களிலிருந்து கிடைக்கும் வருவாயைத் தவிர விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தையும் இது வழங்கியுள்ளது என்று அவர் கூறினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டின் முன்னேற்றத்திற்காக மூன்று இலக்குகளை நிர்ணயித்துள்ளதாக திரு அமித்ஷா தெரிவித்தார். அதாவது, 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உருவெடுக்கச் செய்வது, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவது, 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது ஆகியவையே அந்த மூன்று இலக்கங்கள் என்று மத்திய கூட்டுறவு அமைச்சர் கூறினார். இந்த மூன்று இலக்குகளை அடைவதற்கு, ஒவ்வொரு துறையிலும் உள்ள அனைத்து வாய்ப்புகளையும் கண்டறிந்து முழுமையாகப் பயன்படுத்துவதற்கான வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார். சுழற்சி தொடர்பான சிறந்த நடைமுறைகளை 250 பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்கு கொண்டு செல்வதன் மூலம் பால்வளத் துறைக்கான தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2107807
***
TS/SV/KPG/DL
(Release ID: 2107858)
Visitor Counter : 63