உள்துறை அமைச்சகம்
ஜம்மு-காஷ்மீரில் 3 புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா ஆய்வு
Posted On:
18 FEB 2025 6:20PM by PIB Chennai
ஜம்மு-காஷ்மீரில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து, அந்த யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா ஆகியோர் முன்னிலையில், மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையில் இன்று (18.02.2025) புதுதில்லியில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீரில் காவல்துறை, சிறைச்சாலைகள், நீதிமன்றங்கள், வழக்கு விசாரணை, தடயவியல் ஆகியவை தொடர்பான பல்வேறு புதிய விதிகளை செயல்படுத்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறைச் செயலாளர், ஜம்மு-காஷ்மீரின் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைமை இயக்குநர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகத்தின் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய திரு அமித் ஷா, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை, 2025 ஏப்ரல் மாதத்திற்குள் ஜம்மு-காஷ்மீரில் முழுமையாக செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யுமாறு யூனியன் பிரதேச நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார். மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் கீழ் விரைவான நீதியை உறுதி செய்ய தொழில்நுட்பத்தை அதிகபட்சமாகப் பயன்படுத்த வேண்டும் என்று திரு அமித் ஷா வலியுறுத்தினார்.
***
PLM/AG/KV
(Release ID: 2104469)
Visitor Counter : 33