பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

லாவோசில் நடைபெற்ற 21-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 10 OCT 2024 5:43PM by PIB Chennai

21 வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு லாவோசின் வியன்டியானில்  இன்று நடைபெற்றது. இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் பத்தாண்டுகளைக் குறிக்கும் வகையில், பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஆசியான் தலைவர்களுடன் இணைந்து ஆசியான் இந்தியா விரிவான உத்திசார் கூட்டாண்மையின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யவும், ஒத்துழைப்புக்கான எதிர்கால திசையை வகுக்கவும் உள்ளார். இந்த மாநாட்டில் பிரதமர் பங்கேற்பது இது 11-வது முறையாகும்.

பிரதமர் தமது உரையில், ஆசியான் ஒற்றுமை, ஆசியான் மையத்தன்மை மற்றும் இந்தோ-பசிபிக் குறித்த ஆசியான் கண்ணோட்டம் ஆகியவற்றிற்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். 21 ஆம் நூற்றாண்டை ஆசியாவின் நூற்றாண்டு என்று குறிப்பிட்ட அவர், ஆசியாவின் எதிர்காலத்தை வழிநடத்துவதில் இந்தியா-ஆசியான் உறவுகள் முக்கியமானவை என்று கூறினார். இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையை விளக்கிய பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா-ஆசியான் வர்த்தகம் இரட்டிப்பாகி 130 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது என்றார். ஆசியான் இன்று இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் முதலீட்டு பங்குதாரராக உள்ளது; ஏழு ஆசியான் நாடுகளுடன் நேரடி விமான இணைப்பு நிறுவப்பட்டது; பிராந்தியத்துடன் நிதி நுட்ப ஒத்துழைப்பு தொடங்கப்பட்டுள்ளது; ஐந்து ஆசியான் நாடுகளில் பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆசியான் இந்தியா சமூகத்தின் நலனுக்காக அதிகப் பொருளாதார வாய்ப்புகளைப் பயன்படுத்தும் வகையில், ஆசியான் இந்தியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் மறுஆய்வைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். நாளந்தா பல்கலைக்கழகத்தில் ஆசியான் இளைஞர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதன் மூலம் இந்தியா-ஆசியான் அறிவுசார் கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பிரதமர் பேசினார்.

"இணைப்பு மற்றும் மீள்திறனை மேம்படுத்துதல்" என்ற கருப்பொருளுக்கு ஏற்ப, பிரதமர் 10 அம்சத் திட்டத்தை அறிவித்தார்.

2025-ம் ஆண்டை ஆசியான் இந்தியா சுற்றுலா ஆண்டாக கொண்டாடுவதற்கான கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர் அளிக்கும்.

இளைஞர் உச்சிமாநாடு, தொழில் தொடங்கும் விழா, ஹேக்கத்தான், இசை விழா, ஆசியான் இந்தியா சிந்தனைக் குழாம்கள் வலையமைப்பு மற்றும் தில்லி பேச்சுவார்த்தை உள்ளிட்ட மக்களை மையமாகக் கொண்ட நடவடிக்கைகள் மூலம் கிழக்கு நோக்கிய கொள்கையின் பத்தாண்டுகளைக் கொண்டாடுதல்,

ஆசியான் இந்தியா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியின் கீழ் ஆசியான் இந்தியா பெண் விஞ்ஞானிகள் மாநாட்டை ஏற்பாடு செய்தல்,

நாளந்தா பல்கலைக்கழகத்தில் கல்வி உதவித்தொகைகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குதல், இந்தியாவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்களில் ஆசியான் மாணவர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்குதல்.

2025-க்குள் ஆசியான் இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்தல்;

பேரிடர் தாங்கும் திறனை மேம்படுத்துதல், இதற்கு இந்தியா 5 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கும்;

சுகாதார மீள்திறனை கட்டியெழுப்புவதற்கான சுகாதார அமைச்சர்களின் புதிய வழியைத் தொடங்குதல்;

டிஜிட்டல் மற்றும் இணைய விரிதிறனை வலுப்படுத்த ஆசியான் இந்தியா இணைய கொள்கை பேச்சுவார்த்தையின் வழக்கமான வழிமுறையை தொடங்குதல்;

பசுமை ஹைட்ரஜன் குறித்த பயிலரங்கம்,

பருவநிலை விரிதிறனை உருவாக்குவதற்கான 'தாயின் பெயரில் ஒரு மரம் நடும்' பிரச்சாரத்தில் சேர ஆசியான் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தல் ஆகியவை இந்த 10 அம்சத் திட்டமாகும்.

கூட்டத்தில், ஆசியான் இந்தியா பங்களிப்பின் முழு திறனை உணர்ந்து கொள்வதில் இருதரப்புக்கும் வழிகாட்டும் புதிய ஆசியான் இந்தியா செயல் திட்டத்தை (2026-2030) உருவாக்க தலைவர்கள் ஒப்புக் கொண்டனர். மேலும் இரண்டு கூட்டறிக்கைகளையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்:

இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கைக்கு ஆதரவுடன் இந்தோ-பசிபிக் குறித்த ஆசியான் கண்ணோட்டத்தின் பின்னணியில் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளத்திற்கான ஆசியான் இந்தியா விரிவான ராஜதந்திர கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான கூட்டு அறிக்கை: ஆசியான் மற்றும் இந்தியா இடையேயான கூட்டாண்மையை முன்னெடுத்துச் செல்வதில் இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் பங்களிப்பை தலைவர்கள் அங்கீகரித்தனர்.

டிஜிட்டல் மாற்றத்தை மேம்படுத்துவதற்கான ஆசியான்-இந்தியா கூட்டறிக்கை டிஜிட்டல் மாற்றத் துறையில் இந்தியாவின் தலைமையை தலைவர்கள் பாராட்டியதுடன், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் இந்தியாவுடனான கூட்டாண்மையை வரவேற்றனர்.

21-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டை வெற்றிகரமாக நடத்தியதற்காகவும், அன்பான விருந்தோம்பலுக்காகவும் லாவோஸ் பிரதமருக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக ஒருங்கிணைப்பாளராக ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கியதற்கு சிங்கப்பூருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர், இந்தியாவின் புதிய ஒருங்கிணைப்பாளரான பிலிப்பைன்ஸுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்தார்.

***

PKV/AG/DL



(Release ID: 2063925) Visitor Counter : 35