பிரதமர் அலுவலகம்

இந்தியா - புருனே இடையேயான மேம்பட்ட ஒத்துழைப்புக் குறித்த கூட்டறிக்கை

Posted On: 04 SEP 2024 6:25PM by PIB Chennai

புருனே தாருஸ்ஸலாமின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியா முயிஸதீன் வடாவுலா இப்னி அல்-மர்ஹும் சுல்தான் ஹாஜி ஒமர் 'அலி சைஃபுதீன் சாதுல் கைரி வாடியனின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 செப்டம்பர் 3 முதல் 4 வரை புருணை தாருஸ்ஸலாமுக்கு அதிகாரப்பூர்வ பயணம்  மேற்கொண்டார். புருனே தாருஸ்ஸலாம் நகருக்கு இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொள்ளும் முதல் இருதரப்பு பயணம் இதுவாகும்.

புருனே தாருஸ்ஸலாம் சென்றடைந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை, புருனே தாருஸ்ஸலாம் பிரதமர் அலுவலகத்தின் மூத்த அமைச்சரும், பட்டத்து இளவரசருமான இளவரசர் ஹாஜி அல்-முஹ்தாதீ பில்லா வரவேற்றார். பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்திய புருனே சுல்தான், இஸ்தானா நூருல் இமானில் அவருக்கு அதிகாரபூர்வ மதிய விருந்தும் அளித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் அமைந்திருப்பது குறித்து திருப்தி தெரிவித்த இரு தலைவர்களும், கடந்த 40 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் புருனே தாருஸ்ஸலாம் - இந்தியா இடையேயான ஆழமான வேரூன்றிய நட்புறவு வலுப்பெற்றுள்ளதைக் குறிப்பிட்டனர்.

புருனே தாருஸ்சலாமும், இந்தியாவும் பல நூற்றாண்டுகள் பழமையான வரலாற்று இணைப்புகளை பகிர்ந்து கொள்வதாகவும், கலாச்சார கலந்துரையாடல்கள், வர்த்தகம் மூலம் சிறந்து இணைப்புகள் இருப்பதாகவும் இரு தலைவர்களும் தெரிவித்தனர். 1984-ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் முறைப்படுத்தல் ஒரு நீடித்த ஒத்துழைப்பின் தொடக்கமாக அமைந்தது.

புருனே நாட்டின் சமூக - பொருளாதார தேசிய வளர்ச்சிக்கு, நாட்டின் பல்வேறு தொழில்களில் இந்திய சமூகம் அளித்து வரும் மதிப்புமிக்க பங்களிப்புகளுக்கு புருனே சுல்தான் பாராட்டுத் தெரிவித்தார்.

இருதரப்பு உறவுகளில் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சிறப்பான முன்னேற்றம் குறித்துப் பேசிய  இரு தலைவர்களும், பரஸ்பர அக்கறையுள்ள அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், ஆழப்படுத்தவும், மேம்படுத்தவும் தங்களது உறுதிப்பாட்டை மீண்டும் எடுத்துரைத்தனர்.

பாதுகாப்பு, போக்குவரத்து இணைப்பு, வர்த்தகம், முதலீடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி, தகவல் தொடர்பு தொழில்நுட்பம், சுகாதாரம், மருந்துகள், கல்வி, திறன் மேம்பாடு, கலாச்சாரம், சுற்றுலா, இளைஞர்கள் மேம்பாடு, மக்களுக்கு இடையேயான பரிமாற்றங்கள், பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

தற்போதுள்ள இருதரப்பு வழிமுறைகள் மூலம் நெருங்கிய கலந்துரையாடல்களின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். வெளியுறவு அலுவலக ஆலோசனைகள், பல்வேறு கூட்டு பணிக்குழு கூட்டங்களை முறையாக கூட்டுவது உட்பட பரஸ்பர நலன் சார்ந்த இருதரப்பு, பலதரப்பு பிரச்சினைகள் குறித்து வழக்கமான கூட்டங்கள், பரிமாற்றங்கள், பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நடத்தவும் இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

பரஸ்பர அக்கறை உள்ள துறைகளில் இருதரப்பு வர்த்தக, பொருளாதார உறவுகளை மேலும் விரிவுபடுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். கூட்டு வர்த்தகக் குழு போன்ற முக்கிய தளங்களையும் பிற தொடர்புடைய இருதரப்பு, பிராந்திய, பலதரப்பு மன்றங்கள் மூலம் நடத்தப்பட வேண்டிய வழக்கமான பரிமாற்றங்களின் முக்கியத்துவத்தையும்  அவர்கள் சுட்டிக் காட்டினர்.

தொழில்நுட்பம், நிதி, உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பரம் பயனளிக்கும் வகையில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.

உணவுப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் அங்கீகரித்ததுடன், அறிவுப் பரிமாற்றம், சிறந்த நடைமுறைகள், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் வேளாண்மை, உணவு விநியோக சங்கிலியில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருதலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

விண்வெளித் துறையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) டெலிமெட்ரி டிராக்கிங், டெலிகமாண்ட்  நிலையத்தை தொடர்ந்து பயன்படுத்தியதற்காக புருனே தாருஸ்சலாமுக்கு, பிரதமர் பாராட்டுகளைத் தெரிவித்தார். இரு அரசுகளுக்கும் இடையே நீண்டகாலமாக ள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் பரஸ்பர அக்கறையுள்ள துறைகளில் மேலும் ஒத்துழைப்பை அதிகரிக்கும் முயற்சியையும் இரு தலைவர்களும் பாராட்டினர்.

இரு நாடுகளுக்கும் இடையே முறையான பரிமாற்றங்கள், பயிற்சித் திட்டங்கள், கூட்டுப் பயிற்சிகள், கடற்படை, கடலோரக் காவல்படைக் கப்பல்களின் பரஸ்பர வருகைகள் உட்பட பாதுகாப்பு, கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

இரு நாடுகளிலிருந்தும் கப்பல்கள் தொடர்ந்து துறைமுகத்திற்கு வந்து செல்வது குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.

பண்டார் செரி பெகாவான் - சென்னை இடையே திட்டமிடப்பட்டுள்ள நேரடி விமான இணைப்புக்கு இரு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்தனர். இது இரு நாட்டு மக்களுக்கு இடையேயான வலுவான தொடர்புகளை ஊக்குவிப்பதோடு, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், சுற்றுலா நடவடிக்கைகளை அதிகரிக்க உதவும்.

தேசிய வளர்ச்சியில் இளைஞர்களின் முக்கியப் பங்கை இரு தலைவர்களும் அங்கீகரித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே அதிக அளவில் இளைஞர் பரிமாற்றங்களை மேம்படுத்தவும் ஒப்புக் கொண்டனர்.

இந்திய தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பு இ-ஐடிஇசி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் புருனே நாட்டினருக்கு இந்தியா அளிக்கும் பயிற்சி மற்றும் கல்வி உதவித்தொகையை சுல்தான் பாராட்டினார்.

இந்த மண்டலத்தில் அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்பு, வளம், மீள்திறன் ஆகியவற்றை பராமரிப்பதில் தங்களது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தியதுடன், ஐக்கிய நாடுகள் சாசனத்திலும், சர்வதேச சட்டங்களிலும் கூறப்பட்டுள்ள கொள்கைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினர்.

ஆசியான் இந்தியா பேச்சுவார்த்தை உறவுகள், கிழக்கு ஆசிய உச்சிமாநாடு, ஆசியான் பிராந்திய அமைப்பு, ஆசிய-ஐரோப்பா கூட்டம்,.நா போன்ற பல்வேறு பிராந்திய மற்றும் பலதரப்பு அரங்குகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். அமைதி, வளர்ச்சியை உறுதி செய்வதற்கு, விதிகள் அடிப்படையிலான சர்வதேச நடைமுறைகளை  கடைப்பிடிப்பது அவசியம் என்று தலைவர்கள் வலியுறுத்தினர்.

தற்கால யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் பன்முகத்தன்மையை மேம்படுத்த இணைந்து பணியாற்ற இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.

ஆசியான் இந்தியா விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த பரஸ்பரம் பயனளிக்கும் துறைகளில் நெருக்கமாக இணைந்து பணியாற்றுவது என்ற தங்களது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர்.

அமைதி, நிலைத்தன்மை, கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்பை பராமரித்தல், சுதந்திரமான கடல்வழிப் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து, தடையற்ற சட்டபூர்வமான வர்த்தகம், சர்வதேச சட்டம், குறிப்பாக கடல் சட்டம் தொடர்பான ஐ.நா மாநாடு ஆகியவற்றை மதித்து செயல்படுவது என்ற உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் வலியுறுத்தினர். சர்வதேச சட்டங்களின்படி, குறிப்பாக 1982-ம் ஆண்டு ஐநா சிஎல்ஓஎஸ்-க்கு இணங்க அமைதியான வழிமுறைகள் மூலம் சச்சரவுகளுக்கு தீர்வு காணுமாறு அனைத்து தரப்பினரையும் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும், ஒடுக்க வேண்டும் என்று கூறிய இரு தலைவர்களும் பயங்காரவாதச் செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.  பயங்கரவாதத்தை ஒடுக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என உலக நாடுகளுக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர். எந்தவொரு நாடும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை பயங்கரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். எந்தவொரு நாடும் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது, பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்த ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.  பயங்கரவாதம், எல்லை கடந்தக் குற்றங்களைத் தடுக்க  ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட ஐ.நா. சபை, இதர சர்வதேச அமைப்புகளில் இணைந்து பணியாற்ற இருதரப்பும் ஒப்புக் கொண்டன.

பாரீஸ் ஒப்பந்தம் போன்ற சர்வதேச பருவநிலை நோக்கங்களுக்கு ஏற்ப, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதும், அதிகரித்து வரும் சவாலால் ஏற்படும் மோசமான தாக்கங்களை குறைப்பதற்கான முயற்சிகளை அதிகரிப்பதும் உடனடித் தேவை என்று இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். சர்வதேச சூரியசக்தி கூட்டணி, பேரிடர் தடுப்பு உள்கட்டமைப்புக்கான கூட்டணி, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி ஆகியவற்றை உருவாக்குவதில் இந்தியாவின் முன்முயற்சியை புருனே சுல்தான் பாராட்டினார். பருவநிலை மாற்றத்திற்கான ஆசியான் மையத்தை நிர்வகிப்பதில் புருனே தாருஸ்சலாமின் முயற்சிகளுக்கு இந்தியா அளித்த ஆதரவையும் புருனே சுல்தான் பாராட்டினார்.

உலகளாவிய தெற்கு நாடுகளின் குரல் உச்சி மாநாட்டில் புருனே தாருஸ்ஸலாம் தொடர்ந்து பங்கேற்பதை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார். இந்தியா தலைமையிலான இந்த முன்முயற்சி, உலகளாவிய தெற்கு நாடுகளை ஒரு பொதுவான தளத்தின் கீழ் ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தப் பயணத்தின்போது தக்கும், தூதுக்குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கும் உபசரிப்புக்கும் புருனே சுல்தானுக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். விரைவில் இந்தியாவிற்கு வருகை தருமாறு புருனே சுல்தானுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்தார்.

***

PLM/KPG/DL



(Release ID: 2051921) Visitor Counter : 27