இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

வெண்கலம் வென்றார் மோனா அகர்வால்! பாரா துப்பாக்கிச் சுடுதலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்

Posted On: 01 SEP 2024 11:16AM by PIB Chennai

மோனா அகர்வால் பாரா துப்பாக்கிச் சுடுதலில் சிறந்து விளங்குபவர். பாராலிம்பிக்ஸ் 2024-ல் ஆர்2 மகளிர்  10மீட்டர் ஏர் ரைஃபிள் எஸ்எச்1 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் உலகளாவிய விளையாட்டு அரங்கில் தனது ஆதிக்கத்தை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆரம்பகால வாழ்க்கைச்  சவால்களை சமாளித்ததில் இருந்து தனது விளையாட்டில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைவது வரை மோனாவின் பயணம் அவரது மன உறுதியையும் அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது.

ராஜஸ்தானின் சிகாரில் 1987-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பிறந்த மோனா, ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது இளம்பிள்ளை வாத (போலியோ) நோயால் தனது இரு கால்களும் பாதிக்கப்பட்டதால் இளம் வயதிலேயே குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொண்டார். இருப்பினும், அவர் தனது கல்வியை உறுதியுடன் தொடர்ந்தார். கலைப்பாடத்தில் பட்டம் பெற்றார். தற்போது தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் உளவியல் பாடத்தில் முதுகலைப் பட்டத்திற்குப்  பயின்று வருகிறார்.

23 வயதில், மோனா வீட்டை விட்டு வெளியேறி  சுதந்திரமான வாழ்க்கையை உருவாக்கும்  தைரியமான முடிவை எடுத்தார். அவர் மனிதவளம், சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினார். இந்தப் பயணத்தில்  உடல் ரீதியான பல சவால்களை சமாளித்தார். 2016 ஆம் ஆண்டில், அவர் தனது கவனத்தை பாரா தடகளத்திற்கு மாற்றினார். அங்கு அவர் எறிதல் போட்டிகளில் மாநில அளவில் அறிமுகமானார். மூன்று பிரிவுகளிலும் தங்கம் வென்றார். மாநில அளவிலான பாரா பவர்லிஃப்டிங்கிலும் பங்கேற்று பல பதக்கங்களை வென்றார்.

தனது தடகள சாதனைகளுக்கும் கூடுதலாக, மகளிருக்கான உட்கார்ந்து விளையாடும் வாலிபால் போட்டிகளில் பங்கேற்பதில் மோனா இந்தியாவில் முன்னோடியாக உள்ளார். ராஜஸ்தான் மாநில அணியின் கேப்டனாக, 2019 ஆம் ஆண்டில் மகளிருக்கான முதலாவது  தேசிய உட்கார்ந்து விளையாடும் வாலிபால்  சாம்பியன்பட்டப் போட்டிகளில் தங்கம் வென்றார். அவர் சர்வதேச போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டாலும், கருவுற்றிருந்ததால் பங்கேற்க முடியவில்லை.

2021 டிசம்பரில், மோனா ஒரு தனிநபர் விளையாட்டைத் தொடர முடிவு செய்து துப்பாக்கிச் சுடுவதைத் தேர்ந்தெடுத்தார். அவரது இயல்பான திறமை ஆரம்பத்தில் இருந்தே தெளிவாகத் தெரிந்தது, 2022-ல் தேசிய அளவில்  வெள்ளிப் பதக்கம் வென்றார். 2023-ம் ஆண்டின் நடுப்பகுதியில், தனது முதலாவது சர்வதேச உலகக் கோப்பை போட்டியில் கலப்பு அணி பிரிவில் அவர் வெண்கலப் பதக்கம் வென்றார். 4-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 6 வது இடத்தைப் பிடித்தார். மோனாவின் விடாமுயற்சி அவரது நான்காவது சர்வதேசப் போட்டியில்  பலனளித்தது. அங்கு அவர் தங்கப் பதக்கம் வென்றதுடன் பாராலிம்பிக் ஒதுக்கீட்டைப் பெற்று ஒரு புதிய ஆசிய சாதனையைப் படைத்தார். இந்தக் குறிப்பிடத்தக்க சாதனை உலக அரங்கில் பாரா துப்பாக்கிச் சுடுதலில்  ஒரு சிறந்த போட்டியாளராக அவரது நிலையை உறுதிப்படுத்தியுள்ளது.

பாரா துப்பாக்கிச் சுடுதலில் மோனா அகர்வாலின் வெற்றிப் பயணத்திற்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தது. கேலோ இந்தியா திட்டம், தேசிய சிறப்பு மையத் திட்டம் போன்ற முயற்சிகள் மூலம் மோனா தனது பயிற்சியையும் போட்டித் தேவைகளுக்கு அத்தியாவசிய நிதி உதவியையும்  பெற்றுள்ளார். இந்தத் திட்டங்கள் புது தில்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கிச் சுடும் தளத்தில் தேவையான விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட உலகத் தரம் வாய்ந்த வசதிகளுக்கான அணுகலை அவருக்கு வழங்கியுள்ளன. மோனா தனது திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், பாராலிம்பிக்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்றிக்கொள்ளவும் இந்த விரிவான ஆதரவு  முக்கியமானதாகும்.

மோனா அகர்வாலின் பயணம் மீள்தன்மை, உறுதிப்பாடு மற்றும் வெற்றியின் எழுச்சியூட்டும் கதையாகும். பாரிஸ்  பாராலிம்பிக்ஸ் 2024-ல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவரது சாதனைகள் எல்லா இடங்களிலும் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர்களுக்கு நம்பிக்கையாகவும்  உத்வேகத்தின் கலங்கரை விளக்காகவும் திகழ்கின்றன.

மோனா அகர்வால் வெண்கலம் வென்றார்!

************

SMB/KV



(Release ID: 2050575) Visitor Counter : 20


Read this release in: English , Urdu , Marathi , Gujarati