குடியரசுத் தலைவர் செயலகம்

ஃபரிதாபாத்தில் உள்ள ஜே.சி.போஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Posted On: 21 AUG 2024 2:35PM by PIB Chennai

ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ஜே.சி.போஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 5-வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 21, 2024) கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், இன்று உலகம் முழுவதும் நான்காவது தொழில் புரட்சியின் சகாப்தத்தில் உள்ளது என்றார். இந்தப் புரட்சியின் சவால்களை எதிர்கொள்ளவும், அதன் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் இந்தியாவும் தயாராக உள்ளது. இந்தத் தேசிய இலக்கை அடைவதில், ஜே.சி.போஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்களின் பங்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பல்கலைக்கழகம் பல்வேறு தொழில்துறை மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்திருப்பது குறித்து குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பல பன்னாட்டு நிறுவனங்களும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக இந்தப் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பு மையங்களை நிறுவியுள்ளன. இந்த முயற்சிகள் அனைத்தும் சாதகமான பலன்களைத் தரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக வளர்ச்சிக்கான பல வழிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன என்று குடியரசுத் தலைவர் கூறினார். உதாரணமாக, தொலைதூர பகுதிகளில் இணைய அணுகல் பல ஆன்லைன் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனால் முறையான மற்றும் நிலையான வளர்ச்சி மற்றும் பொது நலனுக்காக தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதன் தவறான பயன்பாடு பேரழிவை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

இளைஞர்களை திறன் மிக்கவர்களாகவும், தற்சார்பு கொண்டவர்களாகவும் மாற்றுவதில் முக்கிய பங்காற்றியதற்காக ஜே.சி.போஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை குடியரசுத் தலைவர் பாராட்டினார். உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க வகையில் பணியாற்றி வரும் முன்னாள் மாணவர்களின் கவர்ச்சிகரமான பட்டியலை இந்தப் பல்கலைக்கழகம் கொண்டுள்ளது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். பழைய மாணவர் சங்கத்தின் பங்களிப்பை மேலும் திறம்படச் செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

மரங்கள் மற்றும் தாவரங்களுக்கும் கூட உணர்வுகள் உண்டு என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபித்த உலகின் முதல் விஞ்ஞானியும், நவீன அறிவியலின் முன்னோடியுமான ஜகதீஷ் சந்திர போஸின் பெயரை இந்தப் பல்கலைக்கழகம் சூடியுள்ளது என்று குடியரசுத் தலைவர் கூறினார். அவரது புரட்சிகரமான கண்டுபிடிப்பு தாவரவியல் உலகை நாம் பார்க்கும் விதத்தை மாற்றியது. அவரது வாழ்க்கை மற்றும் படைப்புகளிலிருந்து உத்வேகம் பெற்று, தொழில்நுட்பத்தின் மூலம் சமூகத்தில் சாதகமான மாற்றத்தைக் கொண்டு வருமாறு அவர் மாணவர்களை வலியுறுத்தினார்.

இந்தியாவின் வளமான பாரம்பரியம் எப்போதும் நம்மை பெருமைப்படுத்துகிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இளைஞர்கள் இந்த வளமான பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக உள்ளனர், அவர்கள் அதன் கொடியை ஏந்திச் செல்வவர்களாக மாற வேண்டும். மாணவர்கள் தங்கள் திறன்களை நம்பி, தங்கள் இலக்குகளை அடைய தன்னம்பிக்கையுடன் முன்னேற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

***

(Release ID: 2047255)

PKV/AG/KR

 



(Release ID: 2047266) Visitor Counter : 33