குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசுத்தலைவர் மாளிகையில் ஆளுநர்கள் மாநாட்டை குடியரசுத்தலைவர் இன்று தொடங்கி வைத்தார்

Posted On: 02 AUG 2024 2:00PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையில் ஆளுநர்கள் மாநாட்டை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஆகஸ்ட் 2, 2024) தொடங்கி வைத்தார். மத்திய-மாநில உறவுகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமல்லாமல், சாதாரண மக்களுக்கான நலத்திட்டங்களை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் பரந்த அளவிலான பிரச்சினைகளை இந்த மாநாடு விவாதிக்கும்.

மாநாட்டில் தொடக்கவுரையாற்றிய குடியரசுத்தலைவர், இந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் நமது தேசிய இலக்குகளை அடைவதற்கு தீர்க்கமான விடயங்கள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகத்  தெரிவித்தார். இந்த மாநாட்டின் விவாதங்கள் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் ஒரு வளமான அனுபவமாக இருக்கும் என்றும், அவர்களின் செயல்பாட்டிற்கு உதவும் என்றும் அவர் கூறினார்.

குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோர் தொடக்க விழாவில் உரையாற்றினர். குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர், ஆளுநர்களின் பதவிப் பிரமாணத்தை சுட்டிக்காட்டி, கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக நலத் திட்டங்கள் மற்றும் வியப்பூட்டும் வளர்ச்சி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசியலமைப்புச் சட்டப் பொறுப்பை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

பிரதமர் திரு நரேந்திர மோடி தது உரையில், மத்திய மாநில அரசுகளுக்கிடையே பாலமாக செயல்பட வேண்டும் என்றும், நலிந்த பிரிவினருடன் இணைந்து செயல்படும் வகையில் மக்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாட வேண்டும் என்றும் ஆளுநர்களை வலியுறுத்தினார். ஆளுநர் பதவி என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, மாநில மக்களின் நலனில், குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளைப் பொறுத்தவரை, முக்கியப் பங்கு வகிக்கக்கூடிய ஒரு முக்கியமான நிறுவனம் என்று அவர் கூறினார். இரண்டு நாள் மாநாட்டில் நடைபெறவுள்ள விவாதங்களின் போக்கை விவரித்த மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவும், வளர்ச்சிப் பணிகளுக்கு உத்வேகம் அளிக்கவும் துடிப்பான கிராமங்கள் மற்றும் முன்னேற விரும்பும் மாவட்டங்களுக்கு ஆளுநர்கள் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

குற்றவியல் நீதி பரிபாலனத்துடன் தொடர்புடைய மூன்று புதிய சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதி முறைமையின் புதிய யுகம் நாட்டில் ஆரம்பமாகியுள்ளதாக மாநாட்டை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய குடியரசுத்தலைவர் தெரிவித்தார். ந்திய நியாயச் சட்டம், இந்திய சிவில் பாதுகாப்புச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய சட்டங்களின் பெயர்களிலிருந்து நமது சிந்தனையில் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது என்று அவர் கூறினார்.

ஜனநாயகம் சுமூகமாக இயங்குவதற்கு, அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு மத்திய முகமைகள் சிறந்த ஒருங்கிணைப்புடன் பணியாற்றுவது முக்கியம் என்று குடியரசுத் தலைவர் கூறினார். அந்தந்த மாநிலங்களின் அரசியலமைப்பு தலைவர்கள் என்ற முறையில், இந்த ஒருங்கிணைப்பை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஆளுநர்கள் சிந்திக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

 

தரமான உயர்கல்வி என்பது புலனாகாத சொத்து என்றும், அது தனிநபர் மேம்பாடு மற்றும் சமூக மாற்றம், புத்தாக்கம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாகவும் குடியரசுத் தலைவர் கூறினார். தேசிய கல்விக் கொள்கை, கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு முறையை மேம்படுத்துவதை வலியுறுத்துகிறது என்று அவர் கூறினார். மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தர்கள் என்ற முறையில் இந்த சீர்திருத்த செயல்முறைக்கு ஆளுநர்கள் பங்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

ஏழைகள், எல்லைப்புறப் பகுதிகள், வஞ்சிக்கப்பட்ட பிரிவினர் மற்றும் பகுதிகள், வளர்ச்சிப் பயணத்தில் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்கு இந்திய அரசு மிகுந்த முன்னுரிமை அளித்து வருவதாக குடியரசுத் தலைவர் கூறினார். நமது பழங்குடியின மக்களில் பெரும் பகுதியினர் பட்டியல் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் வசிக்கின்றனர் என்று சுட்டிக்காட்டிய அவர், இந்தப் பகுதிகளில் உள்ள மக்களின் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்கான வழிகளை பரிந்துரைக்குமாறு ஆளுநர்களை வலியுறுத்தினார்.

இளைஞர், யுவதிகளின் சக்தி ஆக்கபூர்வமான செயல்பாடுகளாக பயன்படுத்தப்படுமானால் இளைஞர் வளர்ச்சி மற்றும் இளைஞர் தலைமையிலான வளர்ச்சி என்பன அதிக உத்வேகம் பெறும் என்றும் குடியரசுத்தலைவர் தெரிவித்தார். 'எனது பாரத்' இயக்கம் இந்த நோக்கத்திற்காக நன்கு சிந்திக்கப்பட்ட அமைப்பை வழங்குகிறது. இந்த இயக்கத்தில் ஈடுபட்டுள்ளவர்களை ஆளுநர்கள் ஊக்குவிக்க வேண்டும், இதனால் மேலும் அதிகமான இளைஞர்கள் பயனடைவார்கள் என்று அவர் கூறினார்.

ஒரே பாரதம் உன்னத பாரதம் இயக்கம் பற்றி குறிப்பிட்ட அவர், பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும் இது உதவியது என்று குறிப்பிட்டார். ஒற்றுமை உணர்வை மேலும் வலுப்படுத்த ஆளுநர்கள் பங்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் போன்ற சவால்களைச் சமாளிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குடியரசுத்தலைவர் கூறினார். தாயின் பெயரில் ஒரு மரக்கன்று பிரச்சாரத்தை பெரிய அளவில் மக்கள் இயக்கமாக மாற்றுவதன் மூலம் ஆளுநர்கள் இதற்கு பங்களிக்க முடியும் என்று அவர் கூறினார். .

இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம், மண் வளத்தை அதிகரித்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க முடியும் என்று குடியரசுத் தலைவர் கூறினார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க, ஆளுநர் மாளிகைகள் ராஜ் பவன்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

அனைத்து ஆளுநர்களும் தாங்கள் மேற்கொண்ட சத்தியப்பிரமாணத்திற்கு நியாயம் செய்யும் வகையில் மக்களின் சேவை மற்றும் நலனுக்காக தொடர்ந்து பங்களிப்பு செய்வார்கள் என்று குடியரசுத்தலைவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆளுநர்களின் துணைக் குழுக்கள் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல் குறித்தும் விவாதிக்கும் அமர்வுகளை நடத்தும் வகையில் இந்த மாநாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆளுநர்கள் தவிர, மத்திய அமைச்சர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் அதிகாரிகளும் இந்த அமர்வுகளில் கலந்து கொள்வார்கள். துணைக் குழுக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகள் நாளை (ஆகஸ்ட் 3, 2024) நிறைவு அமர்வின் போது குடியரசுத்தலைவர், குடியரசு துணைத்தலைவர், பிரதமர் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் முன் சமர்ப்பிக்கப்படும்.

***

PKV/KPG/KV

 



(Release ID: 2040762) Visitor Counter : 74