நித்தி ஆயோக்

'வளர்ச்சியடைந்த பாரதம் 2047' தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்லும் நிதி ஆயோக்கின் 9-வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்குகிறார்

Posted On: 26 JUL 2024 3:41PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 அன்று புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நிதி ஆயோக்கின் 9 வது நிர்வாகக் குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.  இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதை மையமாகக் கொண்ட 'வளர்ச்சியடைந்த பாரதம் 2047'  என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும்.

வளர்ச்சியடைந்த பாரதம் 2047 குறித்த தொலைநோக்கு ஆவணத்திற்கான அணுகுமுறை அறிக்கை குறித்து நிர்வாகக் குழுக் கூட்டம் விவாதிக்கும். மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பங்கேற்பு ஆளுமை மற்றும் ஒருங்கிணைப்பை வளர்ப்பது, அரசு தலையீடுகளின் விநியோக வழிமுறைகளை வலுப்படுத்துவதன் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றை இந்தக் கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வளர்ச்சியடைந்த பாரதம் 2047 என்ற இலக்கை அடைவதில் மாநிலங்களின் பங்கு குறித்த விரிவான விவாதங்களும் கூட்டத்தில் இடம்பெறும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது. 2047 ஆம் ஆண்டில் 30 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய அபிலாஷைகளுடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் இந்தியா பயணிக்கிறது. 2047-ம் ஆண்டுக்குள் 'வளர்ச்சியடைந்த பாரதம்  என்ற தொலைநோக்கு பார்வையை அடைய மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கூட்டு அணுகுமுறை தேவைப்படும். 9-வது நிர்வாகக் குழு கூட்டம், மத்திய, மாநிலங்களுக்கு இடையே 'டீம் இந்தியா' என்ற குழுப்பணியை ஊக்குவித்து, இந்த தொலைநோக்குக்கான வரைபடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

2023 டிசம்பர் 27-29 தேதிகளில் நடைபெற்ற தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாட்டின் பரிந்துரைகள் மீதும் நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கவனம் செலுத்தும். 'வாழ்க்கையை எளிதாக்குதல்' என்ற பொதுவான கருப்பொருளின் கீழ், தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாட்டில் பின்வரும் ஐந்து முக்கிய கருப்பொருள்கள் குறித்து பரிந்துரைகள் செய்யப்பட்டன:

1.குடிநீர்: அணுகல், அளவு மற்றும் தரம்

2. மின்சாரம்: தரம், செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மை

3. சுகாதாரம்: அணுகல் தன்மை மற்றும் கவனிப்பின் தரம்

4. பள்ளிப்படிப்பு: அணுகல் மற்றும் தரம்

5.நிலம் மற்றும் சொத்து: அணுகல், டிஜிட்டல் மயமாக்கல், பதிவு

கூடுதலாக, சைபர் பாதுகாப்பு, முன்னேற விரும்பும் மாவட்டங்கள், தொகுதிகள் திட்டம், மாநிலங்களின் பங்கு, நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆகியவை குறித்து விவாதிக்க சிறப்பு அமர்வுகள் நடத்தப்பட்டன, அவை தலைமைச் செயலாளர்களின் 3-வது தேசிய மாநாட்டில் விவாதிக்கப்பட்டன.

நிதி ஆயோக்கின் தலைவராக பிரதமர் உள்ளார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள், அலுவல் சார் உறுப்பினர்களாகவும், சிறப்பு அழைப்பாளர்களாகவும் கலந்து கொள்கின்றனர்.  மத்திய அமைச்சர்கள், நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களும் பங்கேற்கின்றனர்.

*** 

PKV/KV/KR/DL



(Release ID: 2037627) Visitor Counter : 22