நிதி அமைச்சகம்

உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து பிரகாசமாக உள்ளது: மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்

Posted On: 23 JUL 2024 1:14PM by PIB Chennai

2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த மத்திய நிதி துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், உலகப் பொருளாதாரம், எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டாலும், கொள்கை நிச்சயமற்ற தன்மையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார். உயர்ந்த சொத்து விலைகள், அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் கப்பல் போக்குவரத்து இடையூறுகள் ஆகியவை வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களையும், பணவீக்கத்திற்கு சாதகமான அபாயங்களையும் தொடர்ந்து முன்வைக்கின்றன. இருப்பினும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து பிரகாசமாக உள்ளது என்றும், வரும் ஆண்டுகளில் இந்நிலை தொடரும் என்றும் நிதியமைச்சர் கூறினார்.

2024-25 மத்திய பட்ஜெட்டின் அம்சங்களை விவரித்த திருமதி நிர்மலா சீதாராமன், இந்த நிதிநிலை அறிக்கை மாற்றத்துக்கான ஆற்றலுள்ள 9 முன்னுரிமை துறைகளில் கவனம் செலுத்துகிறது என்றார்.  வளர்ந்த இந்தியா என்ற  இலக்கை விரைவுபடுத்துவதற்காக அவற்றை வலுப்படுத்தும் நோக்கத்துடனும், அவற்றை செயல்படுத்துவதை விரைவுபடுத்தும் நோக்கத்துடனும் முன்னர் வெளியிடப்பட்ட சில அறிவிப்புகளையும் இந்த பட்ஜெட் உள்ளடக்கியுள்ளது. இந்த 9 முன்னுரிமை  துறைகள் பின்வருமாறு:

1) வேளாண்மையில் உற்பத்தித்திறன் மற்றும் நெகிழ்வு

2) வேலைவாய்ப்பு மற்றும் திறன்

3) அனைவரையும் உள்ளடக்கிய மனிதவள மேம்பாடு மற்றும் சமூக நீதி

4) உற்பத்தி மற்றும் சேவைகள்

5) நகர்ப்புற வளர்ச்சி

6) எரிசக்தி பாதுகாப்பு

7) உள்கட்டமைப்பு

8) புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

9) அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்

 

அடுத்தடுத்த வரவு செலவுத் திட்டங்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் என்று அவர் கூறினார். 'பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பின்' ஒரு பகுதியாக மேலும் விரிவாக்க பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.

2024-25 பட்ஜெட் மதிப்பீடுகளின் விவரங்களை  எடுத்துரைத்த அவர், கடன் மற்றும் மொத்த செலவினம் முறையே ரூ .32.07 லட்சம் கோடி மற்றும் ரூ.48.21 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது என்றார். நிகர வரி வருவாய் ரூ.25.83 லட்சம் கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.9 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட பத்திரங்கள் மூலம் மொத்த மற்றும் நிகர சந்தை கடன்கள் முறையே ரூ .14.01 லட்சம் கோடி மற்றும் ரூ .11.63 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டுமே 2023-24இல் அதை விட குறைவாக இருக்கும் என்று கூறினார்.

2021-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட நிதி ஒருங்கிணைப்புத் திட்டம் பொருளாதாரத்திற்கு மிகச் சிறப்பாக சேவை செய்துள்ளது என்றும், அடுத்த ஆண்டு 4.5 சதவீதத்திற்கும் குறைவான பற்றாக்குறையை எட்டுவதை அரசு  நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிலையைத் தொடர்ந்து பராமரிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. 2026-27 ஆம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் நிதிப் பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மத்திய அரசின் கடன் வீழ்ச்சியடையும் வகையில் வைத்திருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

***

(Release ID: 2035603)
BR/KR



(Release ID: 2035823) Visitor Counter : 8