பிரதமர் அலுவலகம்

மும்பையில், இந்திய பத்திரிகைகள் சங்க கட்டடத் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 13 JUL 2024 9:07PM by PIB Chennai

இந்திய பத்திரிகைகள் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வ வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்.  இன்று உங்களுக்கு மும்பையில்  மிகப்பெரிய அதிநவீன கட்டடம் கிடைத்துள்ளது. இந்த கட்டடத்தின் வாயிலாக உங்களது பணித்திறன் மேம்படுவதுடன், பணியாற்றுவதும் எளிதாவதன் வாயிலாக நமது ஜனநாயகம் வலுப்பெறும் என நான் நம்புகிறேன். இந்திய பத்திரிகைகள் சங்கம், சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் இருந்தே இயங்கி வரும் ஒரு அமைப்பாக உள்ளதால், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகளை நீங்கள் உன்னிப்பாக பார்த்து உணர்ந்து அதனை பொதுமக்களுக்கு தெரிவித்திருப்பீர்கள்.  எனவே உங்களது திறமிக்க பணி நாட்டிற்கு பெரும் பயனளிக்கும்.

நண்பர்களே,

ஊடகம் என்பது நாட்டின் சூழலை பார்வையிடும் ஒரு அமைப்பு மட்டுமல்ல.ஊடகங்களில் பணியாற்றும் நீங்கள் அனைவரும்  நாட்டின் சூழலை மாற்றியமைத்து வழிகாட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள். தற்போது அடுத்த 25 ஆண்டுகளில் செல்லவேண்டிய மிக முக்கியமான பயண காலத்தில் பாரதம் உள்ளது.  இந்த 25 ஆண்டுகளில் பாரதம் வளர்ச்சியடைய பத்திரிகைகள் மற்றும் பருவ இதழ்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்க வேண்டும். ஊடகங்கள் தான் நாட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன. மக்களின் உரிமைகள் குறித்தும் ஊடகங்கள் தான் நினைவூட்டுகின்றன. மக்கள் தங்கள் திறமைகளை உணர்ந்துகொள்ள செய்வதும் ஊடகங்கள் தான். நாட்டு மக்கள் தங்களது திறமை மீது நம்பிக்கை வைத்துவிட்டால், அவர்கள் வெற்றியின் புதிய உச்சத்தை அடையத் தொடங்கிவிடுவார்கள். இதுதான் பாரதத்தில் தற்போது நடைபெறுகிறது.  நான் உங்களுக்கு ஒரு சிறு உதாரணத்தை  கூற விரும்புகிறேன். ஒரு காலத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் பாரத மக்களின் திறனுக்கு அப்பாற்பட்டது என சில தலைவர்கள் கூறிவந்தனர். நவீன தொழில்நுட்பங்கள் இந்த நாட்டிற்கு ஒத்துவராது என்று அவர்கள் கருதினர். ஆனால், பாரத மக்களின் ஞானம் மற்றும் திறமையை ஒட்டுமொத்த உலகமும் பார்த்துகொண்டிருக்கிறது. தற்போது உலகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் பாரதம் பெரும் சாதனை படைத்து வருகிறது.

நண்பர்களே,

ஊடகங்களின் இயற்கையான பங்களிப்பு என்பது, முக்கியமான பிரச்சனைகள் குறித்து விவாதங்களை எழுப்பி அதனை வலுப்படுத்துவதாக உள்ளது.  எனினும்,  ஊடக விவாதங்களின் போக்கு அரசின் கொள்கைகளை பொறுத்துதான் அமைகிறது. அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயலும் வாக்குகளுக்காகத்தான் என்பதை நீங்கள்  அறிவீர்கள். ஆனால் இந்த மனப்பான்மையை நாங்கள் மாற்றியிருக்கிறோம்.  பல தசாப்தங்களுக்கு முன்பு நாட்டில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதை நினைத்துப்பாருங்கள். ஆனல் நாட்டில் இருந்த 40-50 கோடி மக்கள், 2014 வரை வங்கி கணக்கு இல்லாமல் இருந்தனர் என்பதுதான் உண்மை. தேசிய மயமாக்கப்பட்ட போது என்ன கூறினார்கள், 2014-ல் என்ன சொல்லப்பட்டது? நாட்டில் உள்ள மக்களில் பாதிபேர் வங்கி செயல்பாடுகளின்றி இருந்தனர். இந்தப் பிரச்சனை நம் நாட்டில் எப்போதாவது விவாதத்திற்குரிய பொருளாக இருந்ததா? நாங்கள் ஜன்தன் இயக்கத்தைத் தொடங்கினோம். அதன் மூலம் சுமார் 50 கோடி மக்களை வங்கி நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளோம். இதுவே எங்களது டிஜிட்டல் இந்தியா மற்றும் ஊழலற்ற முயற்சிகளுக்கு இன்றியமையாததாக மாறியுள்ளது.

நண்பர்களே,

நீங்கள் அனைவரும் ஊடகத்துறையில் அனுபவம் மிக்கவர்கள், ஜாம்பவான்கள். உங்களது முடிவுகள் நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு வழிகாட்டும். எனவே இந்த நிகழ்ச்சி வாயிலாக நான் உங்களிடம் சில வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

நண்பர்களே,

அரசு ஒரு திட்டத்தைத் தொடங்கினால், அது ஒரு அரசு திட்டம் தான் என்று நினைக்கவேண்டியதில்லை. ஒரு கருத்தை அரசு வலியுறுத்தும் போது அதனை அரசின் கருத்தாக மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டாம். உதாரணத்திற்கு நாடு அமிர்தப் பெருவிழாவை கொண்டாடியதுடன், ‘இல்லந்தோறும் மூவர்ணக் கொடி’ இயக்கத்தையும் நடத்தியது.  இந்தப் பிரச்சாரத்தை அரசு தொடங்கினாலும், அதனை ஒட்டுமொத்த நாடும் பின்பற்றி முன்னெடுத்துச் சென்றது. அதே போன்று அரசு தற்போது சுற்றுச்சூழல் குறித்து மிகுந்த கவனம் செலுத்துகிறது. இது அரசியலுக்கு அப்பாற்பட்ட, மனித குலத்தின் எதிர்காலம் சார்ந்த ஓர் அம்சம்.  எடுத்துக்காட்டாக ‘தாயின் பெயரில் ஒரு மரக்கன்று’ நடும் இயக்கம் தற்போது தொடங்கியுள்ளது. பாரதத்தின்  இந்த இயக்கம் உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. இது குறித்து நான் ஜி7 மாநாட்டில் பேசிய போது தாயின் மீது அன்பு கொண்ட அனைவரும்  மிகுந்த ஆர்வத்துடன் கேட்டனர். நாட்டில் உள்ள பல்வேறு ஊடகங்களும் இந்த முயற்சியில் பங்கேற்றது, எதிர்கால சந்ததியினருக்கு பேருதவியாக அமையும். எனவே இதுபோன்ற அம்சங்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுகொள்கிறேன்.

***

(Release ID: 2033034)

MM/AG/KR



(Release ID: 2033984) Visitor Counter : 13