பிரதமர் அலுவலகம்

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாநிலங்களவையில் பிரதமர் வழங்கிய பதிலுரையின் தமிழாக்கம்

Posted On: 03 JUL 2024 5:46PM by PIB Chennai

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

இந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசும் நான், குடியரசுத் தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். குடியரசுத் தலைவரின் உரை உத்வேகம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டு மக்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதாகவும் இருந்தது.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

சுமார் 70 உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு நன்றித் தெரிவிக்கிறேன்.  நாட்டின் ஜனநாயகப் பயணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 60 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவின் வாக்காளர்கள் ஒரு அரசுக்கு 3-வது முறையாக ஆதரவளித்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும். வாக்காளர்களின் முடிவை அவமதிக்கும் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

 “10 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுக்குத் தொண்டாற்ற எங்கள் அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்திய மக்கள் முழு மனதுடன் ஆதரவளித்து ஆசி வழங்கியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடித்து, செயல் திறனுக்கு முன்னுரிமை அளித்து, கற்பனையான அரசியலைப் புறக்கணித்து நம்பிக்கை அரசியலுக்கு வெற்றியை வழங்கி மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

அரசியல் சாசனத்தின் 75-வது ஆண்டில் இந்தியா நுழைகிறது. இந்திய நாடாளுமன்றமும் 75 ஆண்டுகளை நிறைவு செய்வது சிறப்பான, மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்வு. பாபா  சாஹேப் அம்பேத்கர் வகுத்தளித்த அரசியல் சாசனம் சிறப்பு மிக்கது. அரசியலில் பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சாராதவர்களும் நாட்டுக்குத் தொண்டாற்ற வாய்ப்பை வழங்குவது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமையாகும். நவம்பர் 26-ம் தேதியை அரசியல் சாசன தினமாக தமது அரசு அறிவித்த போது கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அரசியல் சாசன தினத்தை நினைவுகூரும் முடிவு அதன் எழுச்சியை மேலும் பரவச் செய்ய உதவியது.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

பெருந்தொற்று மற்றும் உலகளாவிய இடையூறுகள் போன்ற சவால்களுக்கு இடையே கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 10-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த வெற்றி தற்போதைய 5-வது இடத்திலிருந்து பொருளாதாரத்தை 3-வது இடத்திற்கு கொண்டு செல்ல வழங்கப்பட்டுள்ளது.  கடந்த 10 ஆண்டுகளில் எட்டப்பட்ட வளர்ச்சியின் அளவையும் வேகத்தையும் அதிகரிக்க அரசு உறுதிபூண்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர அரசு உழைக்கும்.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

தற்போதைய நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் வழிநடத்தப்படும் நூற்றாண்டாகத் திகழ்கிறது. பொதுப் போக்குவரத்து போன்ற பல புதிய துறைகளில், புதிய தொழில்நுட்ப வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மருந்து, கல்வி அல்லது புத்தாக்கம் போன்ற துறைகளில் சிறு நகரங்கள் பெரும் பங்கு வகிக்கும்.  விவசாயிகள், ஏழைகள்,  பெண்சக்தி, இளைஞர்கள் ஆகிய நான்கு தூண்களை வலுப்படுத்த வேண்டியது அவசியம்.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கான ஆலோசனைகளுக்காக உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் வேளாண்மையை விவசாயிகளுக்கு லாபம் அளிப்பதாக மாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. கடன்கள், விதைகள், கட்டுப்படியான விலையில் உரங்கள், பயிர்க் காப்பீடு, குறைந்தபட்ச ஆதரவு விலை கொள்முதல் ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

உரங்களுக்காக ஏழை விவசாயிகளுக்கு இந்த அரசு ரூ.12 லட்சம் கோடி மானியம் வழங்கியுள்ளது. இது சுதந்திரத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட மிக அதிக அளவிலான உர மானியத் தொகையாகும். விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக, இந்த அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை சாதனை அளவாக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், அவர்களிடமிருந்து கொள்முதல் செய்வதில் புதிய சாதனைகளையும் படைத்துள்ளது. தோட்டக்கலை விவசாயம் தொடர்பான உற்பத்தி பொருட்களின்  சேமிப்பு, போக்குவரத்து மற்றும் விற்பனைக்கான உள்கட்டமைப்பை அதிகரிக்க இந்த அரசு அயராது உழைத்து வருகிறது.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தாரக மந்திரத்துடன் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை அரசு தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமையாக உள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் மீது தற்போது அக்கறை செலுத்தப்படுவது மட்டுமின்றி, அவர்கள் இப்போது மதிக்கப்படுகின்றனர்.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

 மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு தீர்வு காண வேண்டும். இதன் மூலம் அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும். அனைவரையும் உள்ளடக்கிய தன்மையே இந்த அரசின் லட்சியம். சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரான திருநங்கைகளுக்கான சட்டத்தை அமல்படுத்த அரசு செயலாற்றிருகிறது.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

இதேபோல், நாடோடி சமூகங்களின் நலனுக்கென ஒரு நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜன்ன் திட்டத்தின் கீழ் 24,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பழங்குடியினரின் மேம்பாட்டிற்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ந்த அரசு, வாக்கு அரசியலுக்கு பதிலாக வளர்ச்சி அரசியலில் ஈடுபடுகிறது.  இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்காற்றி வரும் கைவினைக் கலைஞர்களான விஸ்வகர்மாக்களுக்காக சுமார் 13,000 கோடி ரூபாய் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

இந்தியா பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில் சிறந்த அணுகுமுறையை கொண்டுள்ளது. ந்த விஷயத்தில் வெறும் முழக்கமாக அல்லாமல், அசைக்க முடியாத அர்ப்பணிப்புடனும் அரசு செயல்பட்டு வருகிறது. கழிப்பறைகளை கட்டுதல், சானிட்டரி நாப்கின்கள் வழங்குதல், மகளிருக்கான தடுப்பூசிகள் செலுத்துதல், இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம் போன்றவை மகளிர் நலனுக்கான முக்கிய நடவடிக்கைகள் ஆகும். பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் ஏழைகளிடம் வழங்கப்பட்ட 4 கோடி வீடுகளில் பெரும்பாலானவை பெண்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறிய கிராமங்களில் சுய உதவிக் குழுக்களில் பணிபுரியும் 1 கோடி பெண்கள் இன்று லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர். இந்த அரசின்  தற்போதைய பதவிக்காலத்தில் அவர்களின் எண்ணிக்கையை 3 கோடியாக அதிகரிக்க அரசு பணியாற்றி வருகிறது.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

 

1977-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பத்திரிகைகள் மற்றும் வானொலி கட்டுப்படுத்தப்பட்டு, மக்களின் குரல்கள் முடக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டவும் வாக்காளர்கள் அப்போது வாக்களித்தனர். அதே நேரத்தில் இன்று, அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான இந்த போராட்டத்தில், இந்திய மக்களின் முதல் தேர்வு தற்போதைய அரசுதான்.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

அவசர நிலை காலம் என்பது வெறும் அரசியல் பிரச்சினை மட்டுமல்ல. அது இந்தியாவின் ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் மனிதநேயம் சம்பந்தப்பட்டது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது கவலை அளிக்கிறது. மத்திய அரசு அமலாக்க முகமைகளை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தவறானது. முந்தைய அரசுகளில் விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டன.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

ஊழலுக்கு எதிரான போராட்டம் எனக்கு ஒரு தேர்தல் விஷயம் அல்ல. அது எனக்கு ஒரு கடமை. 2014-ம் ஆண்டு புதிய அரசு பதவியேற்றபோது, ஏழைகளுக்காக அர்ப்பணிப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான வலுவான வலுவான போர் ஆகிய இரண்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய ஏழைகள் நலத் திட்டம், ஊழலுக்கு எதிரான புதிய சட்டங்கள், கருப்புப் பணத்திற்கு எதிரான சட்டங்கள், பினாமி மற்றும் நேரடி பயனாளிகள் பரிமாற்றம் மற்றும் தகுதிவாய்ந்த ஒவ்வொரு பயனாளிக்கும் அரசுத் திட்டங்களின் பயன்கள் சென்றடைவதை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம்  இந்த அரசின் செயல்பாடுகள் தெளிவாக தெரிகிறது.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

 

ஜம்மு காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகின. இந்த யூனியன் பிரதேச மக்கள் பெரும் எண்ணிக்கையில் தங்களின் வாக்குகளை செலுத்தி, கடந்த 40 ஆண்டுகளின் சாதனையை  முறியடித்து உள்ளனர். தேசத்தின் வளர்ச்சியின் நுழை வாயிலாக வடகிழக்கு மாநிலங்கள் வெகுவேகமாக மாறிவருகின்றன. வடகிழக்கில் முன்னெப்போதும் இல்லாத அடிப்படைக் கட்டமைப்பு வளர்ச்சிகள் மேம்படுத்தப்படுகின்றன.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

வளர்ச்சி, நல்ல நிர்வாகம், கொள்கை வகுத்தல், வேலைவாய்ப்பை உருவாக்குதல், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்றவற்றில் மாநிலங்கள் போட்டியிடுவது ஊக்குவிக்கப்படுகிறது. உலகம் இந்தியாவின் கதவுகளை தட்டும் நிலையில், ஒவ்வொரு மாநிலமும், வாய்ப்பைப் பெறும். இந்தியாவின்  வளர்ச்சியில் அனைத்து மாநிலங்களும் பங்களிப்பு செய்து, அவற்றின் பயன்களை அறுவடை செய்யவேண்டும்.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

பருவநிலை மாற்றம் கவலையளிக்கிறது. இயற்கை சீற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அனைத்து மாநிலங்களும் முன்வந்து இதற்கு எதிராகப் போராட வேண்டும். அனைவருக்கும் குடிநீர் கிடைக்கவும், சுகாதார சேவைகளை மேம்படுத்தவும், அனைவரும் ஒருங்கிணைந்து  பணியாற்றுவது அவசியம். அரசியல் உறுதிப்பாட்டின் மூலமே, இந்த அடிப்படை இலக்குகளை அடைய முடியும். இதனை அடைவதற்கு ஒவ்வொரு மாநிலமும் நடவடிக்கை எடுக்கவும், ஒத்துழைக்கவும் வேண்டும்.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கப்போகிறது. இந்த வாய்ப்பை நாம் தவறவிட்டுவிடக் கூடாது. பல வாய்ப்புகளை இந்தியா தவறவிட்டதால், நம்மைப்போன்ற இடத்தில் இருந்த நாடுகள் பல வளர்ச்சியடைந்த நாடுகளாக மாறியிருக்கின்றன. வளர்ச்சியடைந்த பாரதம் என்பது 140 கோடி மக்களின் இயக்கம். இந்த இலக்கை அடைவதற்கு ஒற்றுமை, முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவில் முதலீடு செய்ய உலகம் தயாராக உள்ளது. இந்த வாய்ப்பை மாநிலங்கள் பயன்படுத்திக்கொள்ள` வேண்டும்.

மதிப்பிற்குரிய அவைத் தலைவர் அவர்களே,

குடியரசுத் தலைவர் தமது உரையில் குறிப்பிட்ட விஷயங்களுக்கும் அவரின் வழிகாட்டுதலுக்கும் நன்றித் தெரிவித்து எனது உரையை நிறைவு செய்கிறேன்.

மிக்க நன்றி!

பொறுப்புதுறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்

 

***

(Release ID:2030461)
PLM/RR/KR



(Release ID: 2031757) Visitor Counter : 21